கொள்கை மாவீரர் நெய்வேலி செயராமன் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

கொள்கை மாவீரர் நெய்வேலி செயராமன் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!

featured image

‘நெய்வேலி’ செயராமன் என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் கொள்கை மாவீரர் – கழகக் காப்பாளர் மானமிகு வெ.செயராமன் (வயது 82) அவர்கள் இன்று (22.12.2023) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைகிறோம்.

நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வுக்குப் பின் தஞ்சை யையடுத்த மாத்தூரில் தம் துணைவியாருடன் வாழ்ந்து வந்தார்.
வாலிப வயது முதல் கழகத்தில் காலடி எடுத்து வைத்து, தீவிரமான செயல்பாட்டாளராகப் பணியாற்றிய கருஞ்சட்டை மாவீரர் ஆவார்! சிறிது காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்; அவர் உடல் நலனையும் அடிக்கடி விசாரித்து வந்தோம்.

என்.எல்.சி.யில் பணியாற்றிக் கொண்டே கழகப் பணிகளை தொழிலாளர்கள் மத்தியிலும், சுற்று வட்டாரத்திலும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிய சூறாவளிப் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு செயராமன் அவர்கள் பல்வேறு கழக நிகழ்ச்சிகளை முன்னின்று எழுச்சியுடன் நடத்திக் காட்டியவர்.
திராவிடர் கழகத் தொழிலாளரணித் தலைவராகவும், ஓய்வுக்குப் பின் தஞ்சை மண்டலத் தலைவராகவும் செயல்பட்டவர். கழகக் காப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து, இறுதி மூச்சு அடங்கும்வரை ‘கழகம், கழகம்’ என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அவர் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் பேரிழப்பாகும்!

அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் அருமைச் சகோதரி மானமிகு தேவகி அவர்களுக்கும், சகோதரர்கள் மானமிகு வெ.ஞானசேகரனுக்கும், இராவணனுக்கும், குடும்பத்தாருக் கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, அவரின் அளப்பரிய கழகத் தொண்டுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
22-12-2023 

குறிப்பு: விழிக்கொடை – உடற்கொடை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment