எலும்பின் வலுவை காப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

எலும்பின் வலுவை காப்போம்!

எலும்பிலுள்ள பொருள் நிறை (bone mass) குறையும்போது அது தன் வலிமையை இழக்கிறது. இதையே எலும்பு வலிமை இழத்தல் (osteoporosis) நோய் என்கிறார்கள். இந்தப் பிரச்சினை வந்துவிட்டால், சாதாரண மாக வழுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும்.

நமது உடலானது எலும்புகளைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இளமையில் இது வேகமாக நிகழ்கிறது. வயதாகும்போது, நாம் இழக்கும் எலும்பு அடர்த்தியானது, புதிதாக உருவாவதைவிட அதிகமாக இருக்கிறது. 

எனவே, எலும்பானது வலிமையை இழக்கிறது.பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது. மாதவிடாய் சீக்கிரம் நின்றுவிடும்.

பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலத்தில் குறைந்த எடையுள்ள பெண்கள், கால்சியம் சத்துள்ள உணவைக் குறைவாக உண்ணுபவர்களுக்கு ஸ்டீராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு இத்தொல்லை வர வாய்ப்புகள் அதிகம். 

பெற்றோரில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் வரும்.ஆரம்பநிலையில் எதுவுமே தெரியாது என்பதுதான் இதில் பிரச்சினையே. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து, கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும் போதே வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

கீழே விழாமலேயே எவ்வித அடியும் படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதும் உண்டு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். எலும்பு அடர்த்தி குறைவதால், முதுகுவலி ஏற்படும். முதுகு வளைந்து, உயரம் குறையும். 

பல செயல்பாடுகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். மனச் சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. எலும்பிலுள்ள பொருள் நிறை சுமார் 30- 50 சதவிகிதம் குறைந்தால்தான் எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியும். இப்பொழுது டெக்ஸா ஸ்கேன் மூலம் இந்நோயை மிக எளிதாக ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியும்.

சிகிச்சைகள்

பெண்களுக்கு சீக்கிரமே மாதவிடாய் நின்று விட்டாலோ, ஸ்டீராய்டு மருந்துகளை மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டாலோ, இந்தப் பிரச்சினை வருவதற்கு முன்பே மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. இந்தப் பிரச்சினைக்கு பைபாஸ்போனேட்டு மற்றும் கால் சிட்டோனின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். 

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு வலிமை இழத்தலுக்கு ஹார்மோன் மருந்து மூலம் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், இதைத் தொடர்ந்து சாப்பிடுவதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். 

தடுக்கும் முறை

உடற்பயிற்சிகளினால் எலும்பை உறுதி அடையச் செய்ய முடியும். உதாரணம். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துதல் மற்றும் ஆசனப் பயிற்சிகள். குறிப்பாக எடை தூக்கும் பயிற்சிகள் போன்றவை எலும்புகளுக்குப் பெரிதும் வலிமை கொடுக்கும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சூரியஒளி உடலில் படுமாறு இருப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கிறது. மீன், முட்டைக் கரு, கல்லீரல், பால் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் கிடைக்கிறது.

முடியாதவர்கள் வைட்டமின் டி 800 யூனிட் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்பை உறுதி செய்ய மிகவும் உதவும்.

நம் உடலுக்குத் தினமும் 1300 மி.கி. கால்சியம் தேவை. சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்ளவும். உதாரணம், ராகி, பால், கீரை, கொய்யாப்பழம், மீன், இறால், நண்டு மற்றும் உலர் பழங்கள். காபியைக் குறைக்கவும். டீ அருந்துவதனால் எலும்பு பாதிப்பு ஏற்படுவதில்லை.எடை குறைவாக இருந்தால், எலும்பு வலிமை இழக்கும். எடை அதிகமாக இருந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும். எனவே, உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment