மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப் பினை - அவருடைய சிந்த னைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் (19.10.2023) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லையென் றாலும்கூட, அதில் அவர் ஒரு மவுனப் புரட்சி யாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும்!

தமிழிலேயே பூசை முறை, அதிலும் பெண்களே அதை நடத்தலாம் என்பது ஹிந்து ஸநாதனத்திற்கு உடன்பாடில்லாத ஒன்று என்று அறிந்து ‘தன் வழி தனி வழி’ என்று ஆக்கிக் கொண்டு வாழ்ந்தவர்.

வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர் என்ற முறையில், சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரைப் பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் - மனிதநேயர்.

அவரது மறைவால் வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், அவரது பக்தர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் திராவிடர் கழகம் சார்பில் மனிதாபிமானத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.10.2023


No comments:

Post a Comment