முன்னேறும் மகளிருக்கான முகவரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

முன்னேறும் மகளிருக்கான முகவரி


தோழி விடுதிகள்...

பெண்களுக்கான கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் பெருகி வரும் நிலையில், கிராமத்தில் இருந்து கிளம்பும் ஒரு பெண்ணுக்கு நகரத்தின் சூழல் முகத்தில் அறைவது போன்ற ஒன்றாகும். இதில் பெண்ணிற்கு இருக்கும் முதல் தடையே இடமாற்றம். எங்கு சென்று தங்குவது என்பதாகவே அது இருக்கும். பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் “முன்னேறும் மகளிருக்கான முகவரி” என குறிப்பிட்டு “தோழி விடுதிகள்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இரவு நேர பேருந்து பயணங்களை மேற்கொண் டாலே பெண்கள் தண்ணீர் குடிப்பதைத்தான் முதலில் நிறுத்துவார்கள். அதிலும் குறிப்பாக திடீரென பயணத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப் பாக எங்கே தங்குவது என்பதே சிந்தனையாக இருக்கும்.

பெரும்பாலும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறை கழிப்பறைகளை பயன்படுத்தி, தயாராகி, வேலையை முடித்துவிட்டு திரும்பும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம், 10 நாள் என வெளி ஊர்களில் தங்க நேரும் போது, பெண்களுக்கான முதல் சிக்கல் தங்குமிடமாகவே இருக்கிறது.

இதை உணர்ந்து, வேலைக்கு போகும் பெண்கள் என்றில்லாது... நேர்முகத்தேர்வு சார்ந்து, தொழில் சார்ந்து, தொழில் பயிற்சி சார்ந்து, சொந்த அலுவல்கள் சார்ந்து, பொருட்களை வாங்குவதற்கென ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்படும் பெண் களை மனதில் வைத்து, எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அரசு நடத்தும் தோழி விடுதிகளில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் தேவைப்படுகிற நாட்களுக்கு மட்டும் நீங்கள் தங்கலாம் என்கிறார் நமது முதலமைச்சர்.

வேலை, எதிர்கால வாழ்க்கை என கனவுகளை சுமந்து பெருநகர வாழ்க்கையை நோக்கி வரும் பெண்களுக்கு தங்குமிடம் வீடு போன்ற மனநிலையை தரவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். எனவே தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், வெளியூர்களுக்குச் சென்று தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் சார்பில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகள் எனப் பெயரிடப்பட்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை செயின்ட்தாமஸ் மவுன்ட் போன்ற இடங்களில் இந்த மாத இறுதிக்குள் தோழி விடுதிகளை கொண்டு வருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.

சில ஊர்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மகளிர் விடுதிகளை சீரமைத்து செயல்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

தனி அறைகள், இருவர் தங்கும் அறைகள், நால்வர் மற்றும் ஆறு பேர் என அறையை பகிர்ந்துகொள்ளும் வசதிகளும், உணவகம் மற்றும் சிசிடிவி கேமரா போன்ற வசதிகளும் உள்ளன. 

தோழி விடுதியை நிறுவும் போதே இரண்டு கிலோ மீட்டருக்குள் மருத்துவமனை, காவல் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றை கணக்கில் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களை விடுவிக்கும் பாதையில் பாதுகாப்பான தங்கும் இடம் மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக எல்லா மாவட்டங்களிலும் தோழி விடுதி என்பது பெண்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கவே செய்யும்.தோழி விடுதிக்கான ஆன்லைன் முன் பதிவுக்கு http://tnwwhcl.in/ என்கிற இணைய முகவரி அல்லது 9499988009 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment