பிரதமர் நரேந்திர மோடியின் தசாவதாரம்!
க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க எழுத்தாளர்
திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான குத்தூசி சா.குருசாமி ‘தசாவதாரம்’ எனும் பரப்புரை நாடகத்தை எழுதி அதை நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து வந்தார். நமக்குத் தெரிந்த இரண்டாவது தசாவதாரம் இதுதான். முதல் தசாவதாரம் திருமால் எடுத்த பத்து அவதாரங்கள்; கதைகள். இப்போது மூன்றாவது தசாவதாரம் ஒன்று முளைத்து இருக்கிறது. அண்மையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் போது இந்த ஆண்டும் ‘கலர்’ தலைப்பாகையோடு நீண்ட ‘குஞ்சங்கட்டி’ நமது பிரதமர் நரேந்திர மோடி காட்சியளித்தார் என்பதுதான் அந்த மூன்றாவது தசாவதாரம்.
2014 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வகையான ‘மல்டி கலர்’ தலைப் பாகையோடு நமது பிரதமர் செங்கோட்டையில் ஜொலிக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக நமது பிரதமர் இந்த ‘கலர்’ தலைப்பாகைகளில் செங்கோட்டையில் தொடர்ந்து தோன்றி வந்ததை வலைதளம் ‘தசாவதாரம்’ என்று தலைப்பிட்டு இருக்கிறது. நம் போன்றவர்களுக்கு நடிகவேளின் தசாவதாரம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. பிரதமர் ஏன் புதிய ‘தசாவதாரம்’ ஒப்பனைக்குள் நுழைந்து இருக்கிறார்?
வலைதளங்களைப் பார்க்கும் பழக்கம் நமக்கு இல்லை. பிரதமரின் தசாவதாரத்தைக் காட்டிய நண்பர் நம்மிடம், ‘இந்த மாதிரி தலைப்பாகைகளை அணிந்தவர்களைப் பார்த்தாலே எனக்கு மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் (ஜூனியர்) தான் நினைவுக்கு வருகிறார்’ என்றார். அவருடன் வந்தவரோ ‘சாய்வாலாவை தலைப்பாகையோடு பார்த்தால் தெருவில் குழந்தைகளுக்கு ஜவ்வுமிட்டாய் விற்கும் விற்பனையாளர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்’ என்றார். ‘தலப்பாகட்டி பிரியாணி நினைவுக்கு வராமல் இருந்தால் சரி’ என்றோம் நாம்.
பொதுவாகத் தலைப்பாகை அணிந்தவர்களைப் பார்த்தால் நமக்கு சர் சி.வி.இராமன், வ.உ.சி., சர் ஏ. இராமசாமி முதலியார், டாக்டர் ஏ.எல். முதலியார், டாக்டர் உ.வே.சா., டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் போன்ற பெருமக்கள் நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் எல்லாம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து தலைப்பாகையை அணிந்து வந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் அணிந்ததற்கு ஏதும் மக்கள் பெயர் சூட்டவில்லை. ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடியோ கடந்த 10ஆண்டுகளாக அவர் பிரதமர் ஆனதிலிருந்து சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ளும் போது மட்டும் ‘மல்டி கலர்’ தலைப்பாகையை அணிந்து கொள்கிறார். அப்படி அணிந்து 10 ஆவது சுதந்திர நாளும் வந்து சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த மக்கள் ‘தசாவதாரம்’ என்று பெயர் சூட்டி விட்டனர். இதற்கு முந்தைய பிரதமர்கள் யாரும் இப்படி சிறப்பு வேடம் சுதந்திர தினவிழாவில் தாங்கியதில்லை. ஆனால் மோடி சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றும் நாளில் ‘இராஜ கம்பீரம்’ என்கிற மனோபாவத்தோடு இந்த ஜனநாயக யுகத்தில் தலைப்பாகையை ஏன் அணிகிறார்? இதற்கு ஏதாவது சிறப்பான காரணம் இருக்க வேண்டும் என்றே நாம் கருதவேண்டி இருக்கிறது.
அகண்ட பாரத வர்ஷத்தை அமைக்க இருக்கிறதாகக் கருதும் மோடியும் அவர் கட்சியினரும் வர்ணாசிரம சநாதன தருமத்தைப் புதுப்பிக்கிற நோக்கத்தைக் கொண்டவர்களாக இயங்கி வருகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமராக இருக்கிற மோடிக்கு வர்ணாசிரம வரிசையின் இரண்டாவது இடமான சத்திரிய இலட்சணம் நாடாளுபவர்களுக்கு இருக்க வேண்டும் என்கிற அவர் களின் நோக்கத்தில் சுதந்திர தினவிழாவில் ‘மல்டி கலர்’ தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு அடையாளப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி ஆட்சியினர் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமதர்மம் போன்ற வெகு மக்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் 2019 தேர்தலில் 31% வாக்குகளைப் பெற்றவர்கள். மீதம் 60% மேல் அவர்களை எதிர்த்து வாக்களித்தவர்கள். பா.ஜ.க.வின் அதிக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் ஆட்சியில் இருப்பவர்கள். 2014 முதல் அவர்கள் பேசியதை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி சத்திரிய வேடம் கட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு- - ராஜகுருவாக (நிரந்தரமாக) இருக்கும். இது அவர்களின் திட்டம். இது நிறைவேறுமா என்பது வேறு விஷயம். ஆனால் மெல்ல அவர்களின் இலக்கை அடைய எண்ணி அடையாளங்காட்டு கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி தரிக்கும் ‘மல்டி கலர்’ தலைப் பாகைகள். இது மதச்சார்பின்மை நடைமுறையில் உள்ள நாட்டில் இந்து ராஜ்ஜியத்தைக் கட்டமைப்பதன் அடையாளமே ஆகும் என்று நாம் கருதுகின்றோம். ஆக மோடி இந்தியாவின் ராஜாவாகத் தன்னை எண்ணிக் கொள்கிறார். மறைமுகமாக பிரகடனப்படுத்துகிறார்.
பிரதமர் சுதந்திர தின விழாவில் பேசுகிறபோது விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்து பேசியிருக்கிறார். இதற்காக ரூ 13,000 கோடி தொகையை ஒதுக்கியிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. விஸ்வகர்மா திட்டம் என்பது என்ன? பண்டைய கிராம சமுதாயத்தில் பதினெண் வகை தொழில்களை விவசாயத்திற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு இருந்தது. இவையே பின்னர் ஜாதிகளாகக் கெட்டிப்படுத்தப்பட்டன. வர்ணாசிரம முறையின் கீழ் அந்த தருமத்தை (முறையை)ப் பேணிக் காத்தனர். சநாதனமாக- - அழிவுறாமல் போற்றி வந்தனர். இதுவெல்லாம் வர்ணாசிரம ஏற்பாடு.
அய்ரோப்பியர் வருகைக்குப் பின்னர் இந்திய அரசியலில் ஜனநாயகத்தின் பங்களிப்பு மக்களைப் பெரியதொரு மாற்றத்திற்கு உட்படுத்தியது. பண்டைய வாழ்க்கை முறை மாறத் தொடங்கியது. இதை ஒரு கோணத்தில் பார்த்தால் சநாதனத்தை ‘மாறுதல்’ வெல்லத் தொடங்கியது. இப்போதும் இது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால் வர்ணாசிரம முறை, சநாதனம் ஆகியவை மெல்ல மாறி வருகிற சூழ்நிலையில் பா.ஜ.க.வினர் அதனைப் புதுப்பிக்கத் தொடங்கினர். பிரச்சாரம் செய்தனர். நினைக்க முடியாத நிலையில் ஒன்றிய அரசின் ஆட்சியதிகாரம் பா.ஜ..க.வுக்குக் கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் செயல்படத் தொடங்கியது. ஆகவே அவர்கள் இந்து இராஷ்டிரம் என்றும் அகண்ட பாரதம் என்றும் பேசத் தொடங்கினர். சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக திட்டமிட்டு முன் நகர்தலைச் செய்பவர்கள் அவர்கள். இன்று அவர்கள் அரசியல் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்துவிட்டார்கள். பாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவிலைக் கட்டி முடிக்க இருக்கிறார்கள். தொலைநோக்காக இந்து ராஷ்டிரம் அமைக்க வர்ணாசிரமத்தைப் புதுப்பிக்க அவர்களின் முழக்கத்தைச் செயல்படுத்த எண்ணுகிறார்கள்.
மோடியின் இரண்டாம் கட்ட ஆட்சி முடிவுக்கு வருகிறது. மூன்றாவதாக வருவதற்கு முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். மிச்ச சொச்ச நாள்களில் அவர்கள் யார் - - என்பதை நமக்கு நினைவு படுத்த ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அறிவிக்கிறார்கள். பதினெண் ஜாதிகளைப் புதுப்பிக்க -- பண்டைய கைவினைஞர்களை ஊக்குவிப்பது என்கிற பெயரால் அந்தத் திட்டத்தை அறிவிக்கிறார்கள். இப்போதைய நிலைஎன்ன? அந்தந்த ஜாதிக்குரிய தொழிலை அந்தந்த ஜாதிகளே இப்போது செய்வது என்பது மிக அரிதாகிவிட்டது. எல்லா ஜாதியினரும் எல்லாத் தொழில்களையும் செய்து வருகின்றனர். நவீன கல்வி முறை பொருளாதார வளர்ச்சி பெரும் மாற்றத்தை நோக்கி இந்தியாவை - அதன் மக்களை உந்தித் தள்ளுகிறது.
பண்டைய ஜாதிப் பெயர்கள், அதன் வழி கிளைத்த தொழில்கள் வடக்கே உள்ள ‘சர் நேம்கள்’ எல்லாம் பழைய நிலையில் இயங்கவில்லை. மாறுதல் அவற்றை இயங்காத நிலையை ஏற்படுத்தி வருகிறது. சமூகநீதியின் படி அவர்கள் எந்த ஜாதியானாலும் கல்வியிலும் பணிகளிலும் மக்கள் முன்னேற அரசு வழிகாட்ட வேண்டும். கல்வி அவர்களை வேதகால வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவது இந்திய மக்களை உலக முன்னேற்றத்திலிருந்து விலக்கி வைப்பது ஆகாதா? விஸ்வகர்மா திட்டம் பதினெண் ஜாதிகளை அந்தப் பணம் கொடுத்து புதுப்பிப்பதுஆகாதா? அவர்களை வேறு வகையான முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்த இயலாதா? இயலும். ஆனால் அவர்களின் இலட்சியப்படி வர்ண தர்மத்தைப் புதுப்பிக்க வேண்டாமா? அதற்காகத்தான் சத்திரிய இலட்சணத்தோடு முடிசூடி, ‘மல்டி கலர்’ தலைப்பாகையோடு ‘குஞ்சங்கட்டி’ பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவிக்கிறார்.
அநேகமாக விலை உயர்ந்த ஆடைகளையும் தலைப்பாகைகளையும் அணியும் ஒரே இந்திய பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும். இவரா தேநீர் விற்ற சாய்வாலா? இவரா மண் குடிலில் பிறந்த ஏழை - - இருக்க முடியாது. அப்படி இருந்தால் சமதர்மத்தைப் போற்றுவார். மதச்சார்பின்மையை ஆதரிப்பார். ஜனநாயகத்தை மேலும் செம்மைப் படுத்த துணை நிற்பார். இவர் வேதகால விழுது. வர்ணாசிரம பித்தர். கற்பனைக் கிறுக்கர். ஆகவேதான் விஸ்வகர்மா திட்டத்தை அறிவிக்கிறார்.
மோடியின் முடியப்போகும் இந்த ஒன்றிய அரசு இன்னொரு பணியையும் சந்தடி சாக்கில் செய்து கொண்டு இருக்கிறது. அது என்ன திட்டம் தெரியுமா? வேதக்கல்வியைப் பரப்பும் திட்டம். ‘மகரிஷி ராஷ்டிரிய வேத் வித்யா பிரதிஸ்தான்’ (சமஸ்கிருத பல்கலைக் கழகம்) தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்த அமைப்பு 1987--இல் அப்போதைய ஒன்றிய அமைச்சர் பி.வி. நரசிம்மராவால் டில்லியில் தொடங்கப்பட்டது. பிறகு இவ்வமைப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினிக்கு மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியப் பணி வேத பாடசாலைகளை உருவாக்குவதும், அதனை ஆதரிப்பதும் ஆகும். இப்படிப்பட்ட வேத பாட சாலைகள் இந்தியா முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பு இந்திய பல்கலைக் கழகத்தாலும் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தாலும் ஏற்பளிப்பு வழங்கப்பட்டது ஆகும். இதற்கான வாரியம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. இவ்வாரியத்தின் கிளைகள் இராமேசுவரம், பத்திரிநாத், துவாரகா, உஜ்ஜையினி நகரங்களில் ஒன்றிய அரசின் சார்பில் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே இராமேசுவரத்தில் கொண்டு வந்த சமஸ்கிருதக் கல்லூரி மூடப்பட்டுவிட்டது.
விஸ்வகர்மா திட்டம் - வேதக் கல்வி பிரச்சாரத் திட்டம் ஆகியவையெல்லாம் அகண்ட ஹிந்து ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க செய்யும் ஏற்பாடுகளே ஆகும். அதற்காகத்தான் நரேந்திர மோடி தசாவதாரத்தின் மூலமாக தனது அடையாளத்தைக் காட்ட சுதந்திர தினத்தில் சத்திரிய கோலந்தாங்கி அறிவிப்புகளை வெளியிடுகிறார் - சுதந்திர தினவிழா உரையை நிகழ்த்துகிறார்.
ஆகவே நாம் மோடி அணியை மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கவிடக் கூடாது. அதற்காக நாம் மக்களைத் திரட்ட வேண்டும். அந்தப் பழமைவாதிகளின் திட்டங்களை ‘இந்தியா’ அணியின் மூலம் நாட்டு மக்களுக்குச் சொல்லி அம்பலப்படுத்த வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கியெறியும்படி செய்ய வேண்டும். இப்போது நம்முன் உள்ள ஒரே அம்சத் திட்டம் இதுதான்.
நன்றி: 'முரசொலி',25.8.2023
No comments:
Post a Comment