காந்தியார் வாழும் வார்தா காங்கிரசுக்கு முக்கியமான ஊர் என்றால், எங்களுக்கு ஈரோடு முக்கியமான ஊர் என்று முழங்கிய ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

காந்தியார் வாழும் வார்தா காங்கிரசுக்கு முக்கியமான ஊர் என்றால், எங்களுக்கு ஈரோடு முக்கியமான ஊர் என்று முழங்கிய ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்தநாள்

திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம்  1 ஆம் நாள் தாமரைச்செல்வம் - ரத்தினம் அம்மையாருக்கு மகனாக  பிறந்தார் சர் ஏ.டி.பன்னீர்செல்வம். கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்த பன்னீர் செல்வம் இங்கிலாந்துக்குச் சென்று சட்டக் கல்வி பயில விரும்பினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து அங்கு சென்று பயின்று ஜனவரி 26,1912 இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். தம் பெயருக்குப் பின்னால் ஜாதி பெயர் களைச் சேர்த்துச் சொல்வது மற்றும் எழுதுவதே அப்போது வழக்கமாக இருந்தது. நீதிக்கட்சித் தலைவர்களிடமும் இவ்வொட்டுதல் இருந்தது. இப்படிச் ஜாதிப்பெயர் ஒட்டு இல்லாத இரு நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி.பன்னீர்செல்வம், பி.டி.ராஜன் ஆவர். இருவரும் ஒரே காலகட்டத்தில் லண்டனில் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1912 சனவரி மாதம் வழக்குரைஞராக பட்டம் பெற்றபின் சென்னை மாகாணத்துக்கு வந்தவர், சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தன்னை பதிவு செய்துக்கொண்டார். தஞ்சையில் வழக்குரைஞராகத் தொடர்ந்து தொழில் நடத்தினார்.

1916ஆம் ஆண்டு இறுதியில் நீதிக்கட்சி தொடங்கப் பட்டபோது சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அக்கட்சியின் உறுப் பினராகி முழுமூச்சுடன் கட்சியை வளர்க்கப் பாடுபட்டார். நீதிக்கட்சித் தலைவர்களான சர் பி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் பி.இராமராய நிங்கர், முத்தையா செட்டியார் போன்றவர்களுக்கு நெருக்கமாகவும், தஞ்சை மாவட்ட மக்களின் ஆதரவு பெற்ற தலைவராகவும் விளங்கினார்.

மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப் பட்ட பன்னீர்செல்வம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி. 40 பள்ளிகளே செயல்பட்டுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்தி பார்ப்பனரல்லாத குழந்தைகள் பள்ளிக்கல்வியைப் பெற வழிவகை செய்தார். பள்ளிகளே இல்லாத முத்துப் பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற இடங்களில் நடுநிலைப் பள்ளிகளைத் தோற்றுவித்தார், திருவாரூர், பாபநாசம் பள்ளி களை மாவட்டக்கழகத்துடன் இணைத்து அப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வசதியாக மாணவர் விடுதியைக் கட்டினார்.

1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் அரங்கத்திற்குப் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார். 1924 ஆம் ஆண்டு மாவட்ட மன்றத்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1930ஆம் ஆண்டு வரை சிறப்பாகப் பணியாற்றினார் .

மராட்டிய மன்னர்கள் காலத்தில் உரத்தநாடு, இராசா மடம் போன்ற பகுதிகளில் வழிப்போக்கர்கள் தங்கி, சாப் பிட்டுச் செல்ல அன்னச் சத்திரங்கள் கட்டி அதற்கான நிதியும் வழங்கியிருந்தனர். இவற்றை பார்ப்பனர்கள் மட்டுமே கணக்கு வழக்குகளை கவனித்து அவர்களுக்கு என்றே தனிப்பட்ட சத்திரங்களாக நடத்தினர். பன்னீர் செல்வம் நகர்மன்ற தலைவரான பிறகு  பார்ப்பனர்கள் முழுக்க அனுபவித்துவந்த சத்திரங்கள் அனைத்தையும் மாவட்ட மன்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார்

மாவட்ட மன்றத் தலைவராக வி.கே.இராமானுஜாச்சாரி இருந்த காலத்தில் அந்தச் சத்திரங்களில் பார்ப்பனக் குழந்தைகள் தங்கிக் கல்வியும் உணவும் பெற்றுவந்தனர்.பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு அங்கு இடமளிக்க வில்லை. தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் பதவியேற்ற பின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து சத்திரங்களை மீட்டு எல்லோருக்கும் உணவு வழங்கவும், கல்விகற்கவும்  ஏற்பாடு செய்தார். அந்த காலகட்டத்தில் திருவையாறில் இருந்த சமஸ்கிருதக் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களைத் தவிர மற்ற மாண வர்களைக் கல்விகற்க அனுமதிப்பதில்லை. அந்தக் கல்லூ ரியை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து பார்ப் பனரல்லாத மாணவர்கள் தமிழில் கல்வி கற்கும்படிச் செய்தார்..

1930 இல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1931 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

1937 இல் காங்கிரசுக் கட்சி ஆட்சியின் போது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

ஹிந்தி எதிர்ப்பு காலகட்டத்தில் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள், “சோமசுந்தர பாரதியார், பெரியார். ஆகிய இருவர்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்” என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஹிந்தியைப் பற்றி பேசும்போதெல்லாம் கல்வியமைச்சர் அவர்கள் பதிலளிக்காமல் முதலமைச்சர் ராஜாஜி அவர் களே பதிலளிப்பதை நினைவில் கொண்ட சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், “அப்படியானால் நீங்கள் ஒருவர் தானே ஹிந்தியை ஆதரிக்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். சட்டமன்றம் மெஜாரிட்டியைப் பொறுத்துத்தானே இருக் கிறது, இரண்டு பேர் எதிர்ப்பது பெரிதா? ஒருவர் ஆத ரிப்பது பெரிதா? என்பதுபோல் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் பதிலளித்தது நகைச்சுவையாகவும் அதே நேரம் ஹிந்தித் திணிப்பை கண்டிப்பதாகவும் இருந்தது

நீதிக்கட்சி தலைமை தாங்க பெரியாரை அழைத்த பன்னீர் செல்வம்.

1937இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தபோது, பன்னீர்செல்வம் கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தினார். ராஜாஜி தலைமையில் அப்போது அமைந்த காங்கிரஸ் அரசு ஹிந்தி திணிப்பைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் கூட்டங்களில் பேசினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளை யும், செயல்பாட்டையும் நன்கறிந்த பன்னீர்செல்வம் நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியாரைத் தேர்வு செய்வதே சரியானது என்று கட்சித் தலைவர்களிடம் பேசி அதில் வெற்றியும் பெற்றார்.

ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து 

வழக்காடி வென்றவர்

1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் காங்கிரசு மாநாடு நடந்தது. மதிய உணவு வேளையில் 17 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பிற ஜாதியினருடன் அமர்ந்து உணவு அருந்தியது கண்டு உயர் ஜாதியினர் அவர்களை வெளியே இழுத்து வந்து, அடித்து, மொட்டை அடித்து, கழுதை மேலே ஏற்றி ஊர்வலமாக நடத்தினர். அவர்கள் செய்தது பிறருடன் சேர்ந்து சமமாக உணவருந் தியதுதான். விடுதலை ஏட்டில் தந்தை பெரியார் அந்த நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டித்து எழுதினார். அதை கண்டித்து எழுதிய விடுதலை நாளிதழ்  மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. அந்த சமயம் விடுதலையின் நிலை சார்பாக வாதாடி வெற்றி கண்டவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆவார். ஜாதியின் கொடுமை அந்நாளில் நிலவிய விவரம் அது. அத்தகைய ஜாதிக் கொடுமையைப் போக்க தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்த தளபதிகளில் முதன்மையானவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

எதிர்க்கட்சி தலைவாராக பன்னீர்செல்வம் இருந்த போது முதலைமச்சராக இருந்த ராஜாஜி “பெரியார் என்றால் என்ன?  நீங்கள் தஞ்சாவூர்காரார் ஏன் அடிக்கடி ஈரோட் டுக்கு செல்கிறீர்?” என்று  கிண்டல் செய்து கேள்வி எழுப் பிய போது, ”பெரியார் என்றால் மகாத்மா என்று பொருள். காந்தியடிகள் வாழும் ‘வார்தா’ காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு உயர்வான இடமோ அதுபோல் எங்களுக்கு ஈரோடு உயர்வான இடம். அதனால் அங்கு அடிக்கடி செல்கிறேன்”  என்று கூறியவர்.

No comments:

Post a Comment