சீருடை அணிந்த மாணவர்களிடம் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க கூடாது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

சீருடை அணிந்த மாணவர்களிடம் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க கூடாது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 1 புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை சீருடை அணிந்த பள்ளி மாணவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிர காம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

2023-2024 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்களைச் சேகரித்து, அச்சடித்து, 'லேமினேஷன்' செய்து வழங்குவதற்குத் தேவைப்படும் கால அளவை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து இருப்பிடம், பள்ளிஇடையே கட்டணமின்றி பயணிக்கலாம். இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டடக் கலைமற்றும் சிற்பக் கலைக் கல்லூரி (மாமல்லபுரம்), அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கடந்த கல்வியாண்டு (2022-23) வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை நடத்துநர் களிடம் காட்டி இருப்பிடம், கல்வி நிறுவனம் இடையே கட்டணமின்றி பயணிக்க நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும். 

இதை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர் களைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டால் நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நடத்துநர்களுக்குத் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment