செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டதே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டதே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவு

சென்னை, மே 29 - பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி   நேற்று (28.5.2023) திறந்து வைத்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவன்று மஹிளா மகாபஞ்சாயத் என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாகச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறிச்சென்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர்மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment