ஆரியம் என்னும் கொடு நோய்! திராவிடம் என்னும் மாமருந்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

ஆரியம் என்னும் கொடு நோய்! திராவிடம் என்னும் மாமருந்து!

குடந்தை க.குருசாமி

தமிழ்நாடு பகுத்தறிவு 

எழுத்தாளர் மன்றம்.

எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓர் நிறை! எல்லோரும் இந்நாட்டு மன்னர்! என்னும் பரந்த மனப்பான்மையைக் கொண்டு வாழ்ந்தது தமிழினம்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." என்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அய்யன் திருவள்ளுவர் கூற்றுப்படி எல்லா உயிர்களும் பிறப்பு இயல்பால் ஒத்தது தான், சமம் தான் என்பது தான் தமிழரின் கொள்கை வெளிப்பாடு!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதே தமிழ் மக்களின் தாரக மந்திரமாக இருந்தது. 

"இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்" என்ற முறையில் தன்னிடம் இருக்கிற அறிவை, செல்வத்தை, வளத்தை, ஒழுக்கத்தை, கல்வியை, கலையை மற்றவருக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் எல்லோருமே பெரியாராக கருதப்பட்டார்கள்.  சமுதாயத்தில் மதிக்கப்பட்டார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கின்ற கடுகு போல் உள்ளங் கொண்ட சிறுமதியாளர்களை மட்டும் இழிவானவர் களாக கருதிய இனமே தமிழினம். இந்த வகையில் தான் ஜாதிப் பாகுபாட்டை அறிந்தார்களே அன்றி பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தால் அல்ல!

பழந்தமிழர் சமுதாயம்

ஆரியர் வருகைக்கு முன்னரே பழந்தமிழர் சமுதாய அமைப்பு என்பது மக்கள் வாழ்ந்த இடத்தை ஒட்டியும், தொழிலை ஒட்டியும் அமைந்தது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று அழைக்கப்பட்டது. இவர்கள் வேட்டையாடுதல் தொழிலை முதன்மைப்படுத்தி வாழ்ந்தார்கள்.

அடுத்து காடும் காடு சார்ந்த இடங்களும் மேய்ச்சல் தொழிலை முதன்மைப்படுத்தி வாழ்ந் தார்கள். இவர்கள் வாழ்ந்த இடம் முல்லை என அழைக்கப்பட்டது.

பின்பு நீர் வளம் நிறைந்த வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் வேளாண்மையைத் தோற்றுவித்து மருத நில நாகரிகமாக உருவாக காரணமாக அமைந்தது.

கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் உப்புக் காய்ச் சுதல், மீன் பிடித்தல், நீர் வழி வாணிகம் ஆகிய வற்றைக் கொண்ட நெய்தல் நில வாழ்க்கைமுறை உருவாகியது.

இதில் குறிஞ்சியும் முல்லையும் இணைந்த வரண்ட பகுதிகளில் வழிப்பறி போன்ற பாலை நிலவாழ்வு நிலவி வந்துள்ளது.

அப்படிப்பட்ட ஜாதியற்ற பெருவாழ்வு வாழ்ந்த தமிழரிடையே தான், வேறுபாடு காணாத நெஞ்சினராய் வாழ்ந்த தமிழரிடையே தான் ஆரியம் என்னும் கொடுநோய் புகுந்தது.

ஆரியம் புகுந்ததற்கு பின்னால்தான் ஆயிரம் ஆயிரம் பொது ஜாதி, அவற்றுள் பல உட்ஜாதி என்ற தத்துவம் உண்டானது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று எந்த நாட்டில் ஆரியர்கள், சனாதனவாதிகள், புகுவதற்கு முன்னால் புலவர்கள் தமிழரிடையே இலக்கணமாக இலக்கியமாக  எழுதினார்களோ, கூறி வந்தார்களோ, அதே நாட்டில் ஆரியர் புகுந்தபின், புலவர்கள் "ஆயிரம் உண்டு இங்கு ஜாதி" என்று கவி பாட நேர்ந்து விட்டது. 

"அன்பொன்றே வேண்டும் யாருக்கும்" என்னும் மொழி பரவிய நாட்டில் தீண்டாமையும், பாராமையும், நெருங்காமையும், உடன் உண்ணாமையும்,  அனைத்து வீதிகளிலும் நடக்க முடியாமையும், பொதுக்கிணறை பயன்படுத்த முடியாமையும் அனைவரும் கல்வி கற்க முடியாத இழி நிலையும் ஏற்பட்டது!

சிந்துவெளி நாகரிகம்

கி.மு. 2000 இல் ஆரியர்கள்இந்தியா வந்தனர். ஆரியர்கள் இங்கு நுழைந்த போது சிந்துவெளி நாகரிகம் மிகவும் வளர்ந்து ஓங்கி இருந்தது. 

நேரான அகன்ற தெருக்கள். 

மூடப்பட்ட சாக்கடைகள். 

அறைகள் பல கொண்ட மாடி வீடுகள். பொது மண்டபங்கள்.

பொதுக் குளியல் இடங்கள். முதலிய சிறப்பு களோடு வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு பல் வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள், அகழ்வாராய்ச்சி முடிவுகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. நாகரிக மற்ற காட்டு வாழ்க்கையினரான ஆரியர்கள், நகர நாகரிகம் படைத்து சுகமாக வாழ்ந்த சிந்துவெளி திராவிடரை வஞ்சகமாக வென்றனர்.

நாகரிகத்தில் வளர்ந்தவர்களை நாகரிகம் குறைந்தவர்கள் வென்ற பிற வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. நாகரிகம் குறைந்த ரோமானியர்- கிரேக்கரை வென்றனர். அதன் பின்பு நாகரிகம் படைத்த ரோமன் பேரரசை ஜெர்மானிய இனத்தினரான கோத், விசிகோத், வாண்டல்- முதலிய காட்டு கூட்டங்கள் வென்றனர். அதேபோல் மங்கோலியரும் பேரரசு களைச் சிதைத்தனர். இந்த வழியில் தான் நாகரிகத் தோடு வாழ்ந்திருந்த திராவிடர்களை காட்டுமிராண் டிகளான ஆரியர்கள் கலை, கலாச்சாரம், மொழி, நாடு, பண்பாடு, நாகரிகம்- ஆகியவற்றில் வென் றார்கள்.

வெற்றி எல்லாம் பற்றிக் கை வீசுகின்ற காலம்! 

விண்ணாடாய் உலகாக்க விரும்புகின்ற காலம்!

பற்றவரும் தோல்விகளை பயமுறுத்தும் காலம்!.

பண்பெலாம் பொங்கிளமைத் திண் காலம் தானே!

என்று வாழ்வினிலே கசப்பேறா வளரிளமைக் காலத்தையும், இயற்கையையும்,  இன்பத்தையும், வீரத்தையும் பாடிவந்தான் தமிழன்.

ஆரியம் எனும் நஞ்சு

ஆனால் ஆரியம் மெல்லக்கலந்த நஞ்சாக பரவ ஆரம்பித்தபின், ஆறு முகத்தோடு, பன்னிரு கரங்கள் கொண்ட கேவலமான உருவத்தையும், ஆனைமுகம் கொண்ட ஆண்டவனையும், நான்கு முகம் கொண்ட தேவனையும் உருகி உருகி பாட ஆரம்பித்து விட்டார்கள்.

சமுதாயத்தில் பெரும்பான்மையான பலவகை தொழில் செய்த திராவிட  (சூத்திர )பாமர மக்களுக்கு அறிவை மறுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை தடுத்து வருண பாகுபாட்டை உறுதிப்படுத்தினார்கள். பொதுமக்கள் வழக்கத்தில் இருந்த பிராகிருத மொழி யில் அறிவு நூல்களைப் படைக்காமல் அவற்றில் இருந்தவற்றையும் பார்ப்பனர்கள் மறைத்தார்கள்.

நம்மிடையே சில படித்த மேதாவிகள்- என்றைக்கும் பார்ப்பனர்களின் காலை நக்கி வாழ்ந்து வரும் சோம்பேறிகள்- சொந்த வீட்டுக்கே இரண் டகம் செய்யும் அயோக்கியர்கள்-  தந்தை பெரியா ரால் தான் நான் வளர்ந்தேன், தந்தை பெரியார்தான் மானத்தையும் அறிவையும் கற்றுக் கொடுத்தார் என்று மேடைக்கு மேடை கூறிக்கொண்டு பார்ப் பனர்களுக்கு வெண்சாமரம் வீசும் சில அரசியல் அற்ப புழுக்கள்- ஆகியோரெல்லாம் இந்த ஆரிய சர்ச்சையை அறிந்தார்களா? ஆரியத்தால் தமிழர் களின் வாழ்வியல் அழிந்ததை உணர்ந்தார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கருஞ்சட்டைப் பட்டாளம்

இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்து தான் தந்தை பெரியாரின் கருஞ்சட்டை பட்டாளம், ஆரியர்களின் பொய்ப்பித்தலாட்டத்தை அடியோடு எதிர்க்க ஆரம்பித்தது.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் இந்தக் கொடுமைகளை எல்லாம் கண்டு கிளர்ந்து எழுந்தார். 

உயிர்க் கொலை வேள்வி கூடவே கூடாது. 

யாகத்தின் பெயரால் உணவுப் பொருட்களை எரிக்கும் நிலை கூடாது - ஜாதி வேற்றுமை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடையே பிரச் சாரம் செய்தார் -  ஆனால் ஆரிய வஞ்சகம் புத்தர் புரட்சியை தந்திரத்தால் வென்று வீழ்த்தி விட்டது.

புத்தர் காலம் தொடங்கி திருவள்ளுவர், கபிலர், திருமூலர், சித்தர்கள், அண்மைக் காலத்தில் வடலூர் ராமலிங்கனார் - போன்ற பலரும் மதத்தின் கொடு மைகளை எடுத்துச் சொல்லி நான்கு வருணம், ஆசிரமம், ஆச்சாரம், எல்லாம் பிள்ளை விளை யாட்டே என்று இழித்தும் பழித்தும் பேசினார்கள்.

 "கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக" என்று கடுமையாக பேசினார்கள்.

 ஆனால் இவைகள் எல்லாம் ஆரியத்திற்கு முன் நின்று நிலை பெற்று வாழ வழியற்ற நிலை உருவாகி விட்டது.

"மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதற்கு ஆதாரமாக எது இருந்தாலும் அதனை அழித்து ஒழிப்பது தான் என்னுடைய முதல் வேலை" என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் 19-ஆம் நூற்றாண்டில் தன்னுடைய சீர்திருத்தப் பணியை தொடங்கினார்கள்.

சனாதன ஒழிப்பு

நாடு, மதம், இனம், மொழி, பெண் அடிமைத்தனம், போன்றவற்றில் கடவுளின் பெயரால் மக்களை சனா தனம் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டில் மக்களி டையே உள்ள மதவெறித்தனத்தை போக்கவும், ஒழிக்கவும், ஜாதி வெறித்தனத்தை வேரோடு பிடுங்கி எறியவும், பெண்ணினத்தை காக்கவும், தந்தை பெரியார் அவர்கள் கண்ட புரட்சி இயக்கம் தான் கருஞ்சட்டை படை இயக்கமாகும்.

கருஞ்சட்டை படை, மற்ற நாட்டு படைகளைப் போல் நாடுபிடிக்கும் ஆசை, பணம் பறிக்கும் ஆசை, எல்லையை நீட்டிக்கின்ற ஆசை, அடுத்த பதவி தனக்கு தான் என்கின்ற நினைப்பு கொள்ளும் ஆசை, போன்ற ஆசைகளை எல்லாம் வெறுத்து "மக்கள் அனைவரும் பிறப்பினால் சமம்" என்ற தந்தை பெரியாரின் நெறியை பின்பற்றினார்கள். தன்னுடைய தலைவர் என்ன கட்டளை இடுகிறாரோ அதை சிறிதும் மறுக்காமல் செய்து முடிக்கின்ற பணியை செய்தார்கள். 

ஜாதியை மதத்தை சனாதனத்தை தாங்கிப் பிடிக்கின்ற எதுவாக இருந்தாலும் இருப்பதை சமூகமாக கொண்டு உறுதி எடுத்து உழைத்தவர் தந்தை பெரியார் இந்தியாவில் ஏனைய நாடுகளிலும் மதத்தின் கொடுமைகளை உணர்ந்தார்கள் - ஜாதி யின் கொடுமைகளை நசித்தார்கள். சனாதனத்தால் மக்கள் படுகின்ற இன்னல்களை எதிர்த்தார்கள் ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படை காரணமாக கடவுள்தான் இருக்கிறது என்கின்ற நிலைமை வருகிற போது யாரும் கடவுளை துணிவாக எதிர்க்க முன் வரவில்லை. அதனால்யே ஆரியம் தான் நினைத்ததை செய்து பழியை இல்லாத கடவுளின் மேல் போட்டு வந்தது.

எனவே தான் தந்தை பெரியார், மனித இழிவு களுக்கும், அடிமைத்தனத்திற்கும், ஜாதிய வேறுபாடு களுக்கும்,  கடவுள் தான் காரணம் என்றால் அந்த கடவுளையே ஒழிப்பேன்..!  என்று களம் கண்டார். கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! என்று ஆணித்தரமாக தந்தை பெரியார் பிரச்சாரம் செய்ய துவங்கியதற்கு பின்னால் பழைமைவாதிகளும், சனாதனிகளும், தந்தை பெரியார் அவர்களை எதிர்க்க வழி இல்லாமல் தலை தெறிக்க ஓடினார்கள்.

தந்தை பெரியாரைத்  தொடர்ந்து

தந்தை பெரியாரும் தந்தை பெரியாருக்கு பின்னால் அன்னை மணியம்மையார் அவர்களை தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவர் விடுதலை ஆசிரியர் கே. வீரமணி அவர்கள் ஆரிய சனா தனத்தை எதிர்க்கும் போர்க்களத்தில் இறங்கியதால் தான் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவானது.

தந்தை பெரியாரின் இடைவிடாத சமூக நீதிப் போராட்டத்தால், தற்போது 60 ஆண்டுகளாக விடுதலையின் ஆசிரியராக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழர் தலைவர் அவர்களின் இடைவிடாத சமூகநீதி போராட்ட பய ணத்தால் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக் கப்பெற்றது.

ஆரியம் என்னும் கொடும் நோய்க்கு கருப்புச் சட்டையே மா மருந்தாக அமைந்து வருகிறது. எது நம்மை இணைக்கிறதோ அதனை விரிவுபடுத் துவோம்!  எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துவோம்! ஆரியம் என்னும் கொடும் நோய் தாக்கத்திலிருந்து தமிழர்களை ஒன்றிணைந்து காக்க அணைவரும் வாரீர்! கருப்பு சட்டையை படையில் இணைவோம். 

வாழ்க கருஞ்சட்டைப் படை..!

No comments:

Post a Comment