சர்வாதிகாரிகளுக்கு முன்பு பணிய மாட்டோம் பிரியங்கா சவால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

சர்வாதிகாரிகளுக்கு முன்பு பணிய மாட்டோம் பிரியங்கா சவால்

புதுடில்லி, மார்ச் 25- ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்ப தாவது:- 

நரேந்திர மோடிஜி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) 'மீர் ஜாபர்' என்று அழைக்கிறார்கள். உங்கள் முதல் அமைச்சர்களில் ஒருவர், ராகுல்காந்தியின் தந்தை யார்? என்று கேட்கிறார். காஷ்மீர் பண்டிட் வழக்கப்படி, தந்தை இறந்த பிறகு ராகுல்காந்தி தலைப்பாகை அணிகிறார். ஆனால் நீங்கள், ஒட்டுமொத்த குடும்பத்தையும், காஷ்மீர் பண்டிட் சமூகத்தையும் இழிவு படுத்தும்வகையில், 'நேரு பெயரை ஏன் வைத்துக் கொள்ள வில்லை?'' என்று நாடாளுமன்றத்தில் கேட்கிறீர்கள். 

உங்களுக்கு எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யவில்லை. ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். அதானியின் கொள்ளை பற்றியும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பற்றியும் கேள்வி எழுப்பினார். உங்கள் நண்பர் அதானி, நாடாளுமன்றத்தை விட பெரியவரா? அவரது கொள்ளையை பற்றி கேள்வி எழுப்பினால், ஏன் அதிர்ச்சி அடைகிறீர்கள்? எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் செய்வதாக கூறுகிறீர்கள். 

ஆனால், இந்த குடும்பம்தான் ரத்தத்தை கொடுத்து ஜனநாயகத்தை வளர்த்தது. இந்திய மக்களுக்காக குரல் எழுப்பியது. உண்மைக்காக போராடியது. எங்கள் ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்துக்கு விசேஷ குணம் உள்ளது. உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment