புதுடில்லி,மார்ச்18- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை என்று கூறிக்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது.
ஆனால், பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை குறைந்த பாடில்லை என்று பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் கவலை தெரிவிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2021ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100அய் தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஒரு பகுதியை ஒன்றிய அரசு 2 முறை மட்டுமே குறைத்தது. கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது ஒன்றிய அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. 300 நாட்களாக அதே விலையில் நீடிக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment