விமான நிறுவனங்களின் கட்டண முறைகேடு நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

விமான நிறுவனங்களின் கட்டண முறைகேடு நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு!

புதுடில்லி, மார்ச் 14 விமான நிறுவனங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து அதிக கட்டணம் வசூலிப் பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. 

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (13.3.2023) தொடங்கியது. முதல்நாளே அதானி குழு முறைகேடு விவகாரம், ஆன்லைன் மசோதா உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விமான நிறுவனங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து அதிக கட்டணம் வசூலிப்ப தாக நாடாளுமன்ற நிலைக்குழு, நாடாளுமன்ற கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழு ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டி தலைமையில் செயல்பட்டுவருகிறது. நேற்று அந்த துறைக்கான ஆய்வறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது இருக்கைகள் பெரும்பான்மையும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவுக்கான இருக்கைகளே காலியாக உள்ளதாக விமான நிறுவனங்கள் ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி இணைய தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவிட்டு விமான பயணச்சீட்டு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனைத் தடுத்து பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் பயணச்சீட்டு கிடைக்க உரிய வழிகாட்டு விதிமுறைகளை விமானப் போக்குவரத்துத் துறை வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விமானச் சேவை இருந்து வருகிறது. விமானங்களின் கட்டணம் அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதன் மீது ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்காமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment