தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா?

மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் ஆளுநர் விளையாடவேண்டாம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா? ஆளுநர், மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன்  விளையாட வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கத்தி லிருந்தே, தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தையே நாளும் நடத்தி, வாக்களித்த மக்களின் பொறுமையைச் சோதித்து வருகிறார்; அவர் பதவியேற்றபோது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவின்கீழ் எடுத்த வாக்குறுதியை மீறி அரசமைப்புச் சட்டத் தையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார்.

ஆளுநரின் கடமை என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 159 ஆம் பிரிவு

Oath or affirmation by Governor; Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that court available, an oath or affirmation in the following form, that is to say swear in the name of God (or) I, A B, do that I solemnly affirm will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being of the people of (name of the State).

இதில் முக்கிய வாசகம் ஓர் ஆளுநரின் கடமை அரசமைப்புச் சட்டத்தைப் போற்றிப் பாதுகாப்பதும், அதனை காக்கும் பணியைப் மேற்கொள்வதுடன் - preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well being  - கடமையாற்றி - மக்களின் நலனுக்கு உழைப்பேன்.

இதற்கு நேர் எதிராகவே பலமுறை நடந்து வருகிறார்; தமிழ்நாடு ஆளுநர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல் நாளும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ‘‘அரசியல்'' நடத்தி வருகிறார்.

ஏற்கெனவே பேரறிவாளன் விடுதலை சம்பந்தமாக இவரது தேவையற்ற காலதாமதத்திற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பால் குட்டுப் பட்டிருந்தும், தேவையின்றி, சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதி களால் விவாதித்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அப்படியே பல மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்து, மக்களாட்சி - தி.மு.க. ஆட்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டும் வருகிறார்!

எடுத்துக்காட்டாக, 15 மசோதாக்கள் நிலுவையில், ஆளுநர் மாளிகையில் எத்தனை மாதங்களாக  இப்படி ஊறுகாய் ஜாடியில் ஊறுவது? அரசமைப்புச் சட்ட 'துஷ்பிரயோகம்' அல்லவா இது?

ஆன்-லைன் சூதாட்டத் தடுப்பு மசோதா: தற்கொலைகள் தொடர்கின்றனவே!

நாளும் தொடரும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தி, உயிர்க்கொலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே ஆன்-லைன் சூதாட்டத் தடுப்பு மசோதாவினையும் இப்படி மூன்று மாதங்களுக்குமேல் தமிழ்நாடு சட்ட அமைச்சகம் விளக்கம் கொடுத்த பிறகும்கூட, கையொப்பமிட்டு அனுப்பவில்லை - திருப்பி அனுப்பாமலும் 'சண்டித்தனத்தில்' ஈடுபடுவது போன்ற மக்கள் விரோதச் செயல் அல்லவா?

நாளும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான கொள்கை - கருத்து முடிவினையும் பேசுவதில் ‘தனி ஆவர்த்தனம்' நடத்தி வருவதன்மூலம் ஒரு விரும்பத்தகாத மோதல் போக்கை ஏற் படுத்தித் தருகிறார்!

நேற்று (13.2.2023) ‘உங்களின் ஒருவன்' நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,

‘‘ஆன்-லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருப்பது சட்டமன்றத்தினை அவமதிக்கும் செயல்'' என்று கூறியிருப்பது நூற்றுக்கு நூறு சரியான கருத்து.

சட்டமன்ற அவமதிப்பு என்பதையும் தாண்டி,  உயிர்க்கொலை நடப்பதைத் தடுக்காத குற்றத்தினையும் ஆளுநர் செய்கிறார், இது நியாயமா? மனிதநேயத்திற்கும் எதிரானதல்லவா?

ஆளுநர் உரையில் இருப்பதை மறைத்தும் - இல்லாததைச் சொல்லுவதும் ஆளுநருக்கு அழகா?

ஆளுநர் உரையைப் படித்தபோது, அதில் ‘‘அமைதிப் பூங்காவாக'' தமிழ்நாடு உள்ளது என்பது போன்ற பகுதிகளை விட்டுவிட்டுப் படித்ததுடன், புதிதாக இல்லாததை இவர் இணைத்து, மரபையும், சட்டமன்ற மாண்பையும், அரசமைப்புச் சட்டத் தத்துவத்தையும் புறக்கணித்து நடந்துகொண்டதோடு,  சட்ட மன்றத்தை விட்டு ஆளுநரே வெளியேறிய விந்தையான அரசியல் வித்தையில் ஈடுபட்டு, நாட்டினரின் எதிர்ப்புக்கு ஆளானார்!

‘தமிழ்நாடு' என்று அழைக்காதீர் என்று இதோபதேசம் செய்த அதிகப்பிரசங்கித்தனத்தை மக்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கினார்.

இதெல்லாம் அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? பொருத்தமா? அதன் மாண்பு இப்படி ‘சின்னத்தனங்களால்' இதற்குமுன் எப்போதும் சிதைவுபட்டது கிடையாதே!

மக்கள் விரோதப் போக்கை 

மாற்றிக்கொள்வாரா ஆளுநர்?

மக்கள் விரோதப் போக்கை அவர் மாற்றிக் கொள்வாரா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால்,  ஏதோ ஒரு மறைமுக அரசியல் திட்டத்தின் (Hidden Agenda) மீதே இப்படி அதீதமாக நடந்துகொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் நாளும் மக்களிடையே வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கூட இதனைப் பொறுத்துக் கொள்ளக்கூடும். ஆனால், வாக்களித்த மக்களும், நடுநிலைப் பொதுமக்களும், சான்றோர்களும் இதனை வேடிக்கைப் பார்க்கமாட்டார்கள்; தங்களது எதிர்ப்பை - கொதி நிலையை, அறவழியில் பதிவு செய்யத் தவறமாட்டார்கள் என்பதை ஒரு பொதுநல ஊழியன் என்ற முறையில் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக அறிவிக்கவேண்டியது நமது கடமையாகும்.

பொறுமைக்கும் எல்லை உண்டு; மக்கள் பணத்தை ஊதியமாகப் பெறும் ஒரு பொது ஊழியர் இப்படி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் கடமை தவறலாமா?

இதன் விளைவு மக்களின் எதிர்ப்பும் எரிமலையாகி வருகிறது என்பதை ஆளுநர் உணரட்டும்!

மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடாதீர்!

பதவிக்காகவே பிறந்ததல்ல திராவிடர் இயக்கம் - கொள்கை, லட்சியங்களுக்காகப் பிறந்த நூற்றாண்டைக் கடந்த இயக்கம்! இதுபோன்ற பல முட்டுக்கட்டைகளைக் கடந்து, எதிர்நீச்சலிலும் எப்போதும் வெற்றி பெறும்.

நெருப்பாற்றிலும், நெருக்கடியிலும் நீந்தி கரை சேர்ந்த இயக்கம் என்பதை ஆளுநரே, மறவாதீர்!

மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடாதீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.2.2023

No comments:

Post a Comment