உலகெங்கும் சமூகநீதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

உலகெங்கும் சமூகநீதி!

கறுப்பின மக்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் உரிய பங்கினைத் தரும் மசோதாக்கள் மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நிறைவேறி யுள்ளன. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தப் போவதாக வாக் குறுதி அளித்து மெக்சிகோவின் அதிபரான ஆண்ட் ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் (அம்லோ) அந்த வாக்குறுதிகளில் ஒன்றான தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் முன்வைத்த தேர்தல் சீர்திருத்தங் களில் ஒன்றான குடியேற்ற மக்கள், கறுப்பினத்தவர், பழங்குடியினர், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உரிய பிரதி நிதித்துவத்தை வழங்கும் அம்சம் அடங்கிய மசோதா நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்திய செனட் அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோ தாவை முழுமையாக ஆதரித்தவர்களின் எண் ணிக்கை 72 ஆகவும், எதிர்ப்பு மற்றும் சில அம்சங்கள் மீது கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் இருந்தது. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் தேர்தல் அமைப்புகள் பற்றிய பொதுவான சட்டம், அரசியல் கட்சிகள் குறித்த சட்டம் மற்றும் நீதித்துறை குறித்த சீர்திருத்தங்களும் அடங்கும்.

சமூகநீதி என்பது இந்திய அளவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மக்கள் நேசிக்கும் கோட்பாடு! 

எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புக் குரலைக் கொடுக்கிறார்களே - என்று வடபுலத் தலைவர்கள் குறிப்பாக பிஜேபி - சங்பரிவார் கூட்டத்தார் கூறி வருகிறார்களே!

அதற்கான பதிலும் நாம் சொல்லுவதைக் காட் டிலும் மற்றவர்களே ஒரு மனதாகச் சொல்லுவது - தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் என்பது தான்.

ஏன் அப்படியொரு கருத்து உருப் பெற்றுள்ளது? காரணம் வெளிப்படை! இந்நாட்டில் உள்ள ஹிந்து மதம் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டு கிறது - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பிளவை கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் நிலை நிறுத்துகிறது.

தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கல்வி உரிமை கிடையாது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் கீழ்நிலையில் வதைக்கப் படுகிறார்கள்.

இந்த நிலையில்தான் தந்தை பெரியார் களத்திற்கு வந்தார் - சுயமரியாதை இயக்கம் கண்டார்.

பிறப்பால் பேதத்தை உண்டாக்கியவர் கடவுள் என்றால் அதனை எதிர்ப்பேன் என்றார்; மதம் என்றால் அதன் மூல வேரை அழிப்பேன் என்றார்.

படிக்க உரிமை கிடையாது என்று ஆக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியில், உத்தியோகத்தில் முன் னுரிமை விகிதாசாரம் தேவை என்றார். "அனை வருக்கும் அனைத்தும்" என்றார்.

இந்த வகையில் இந்தத் தத்துவமும், செயல்பாடும் எங்கெங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது.

ஆம், பெரியார் உலகமயமாகிறார். "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்றார் தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர். அதனைக் கண் முன்னே இப்பொழுது காண்கிறோம்.

இந்தியாவில் மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத் திலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் கிடப்பில் கிடப்பது வெட்கக்கேடு!

வெல்லட்டும் சமூகநீதி!

செல்லட்டும் தேவைப்படும் இடங்களுக் கெல்லாம்.


No comments:

Post a Comment