நாகர்கோவில், திருநெல்வேலி பரப்புரையில் தமிழர் தலைவரின் கேள்விகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

நாகர்கோவில், திருநெல்வேலி பரப்புரையில் தமிழர் தலைவரின் கேள்விகள்!

 தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போல், இன்னொன்றைக் காட்ட முடியுமா?

சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா? மக்களுக்குள் சமத்துவம் வரவேண்டாமா?

நாகர்கோவில், பிப்.25 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில், நாடெங்கும் நடைபெற்று வரும், பெரும் பரப்புரைப் பயணத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி நகரங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  விளக்க வுரை ஆற்றினார்.

நாகர்கோவிலில் தமிழர் தலைவர்!

நாகர்கோவில் அண்ணா அரங்கம் முன்பு 24.2.2023 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற, ’சமூக நீதி பாதுகாப்பு’ 'திராவிட மாடல் விளக்கம்’ பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் 

கோ.வெற்றிவேந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில மகளிரணி காப்பாளர் சி.கிருஷ் ணேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், ப.க. மாவட்ட தலைவர் உ.சிவதானு, மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவரின் உற்சாகத்திற்கு 

என்ன காரணம்?

ஆசிரியர், தனக்கு முன்னதாக பேசுகின்றவர்கள் அனைவரும் 90 வயதில் இப்படி சுறுசுறுப்பாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளியைப் போல் சுற்றிச் சுழன்று வரு கிறாரே என்று வியந்த வண்ணம் பேசி வருவதற்கு பதில் கூறும் வகையிலும், அதன் உட்பொருளை (கமுக்கம்) கூறும் வகையிலும் பேச எண்ணி, மக்களிடம் இதுவரை பகிர்ந்து கொள்ளாத சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, “ஒரு நாளைக்கு இரண்டு கூட்டம் பேச வேண்டியிருப்பதால், காலையில் ஓரிடம், மதிய உணவு இன்னொரு இடம், இரவு தங்குவது வேறொரு இடம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறோம். இதன்படி எங்களைத் தொல்லைக்குட்படுத்திக் கொண்டாலும், எங்களுக்கு மகிழ்ச்சி தரும் பயணம் என்பதால், உற்சாகம் குறையாமல் சுற்றுகிறோம். அது மட்டுமல்லாமல் மக் களும் தங்கள் ஆதரவை நல்ல வண்ணம் தருகிறார்கள். ஆகவே இது சாத்தியமாகிறது” என்று தொடங்கினார். 

எதிர்பாராத பதிலாக இருந்தாலும் மக்களின் வியப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியில் மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்ற புதுக் கேள்வியுடன் பலமாக கைதட்டி மகிழ்ந்தனர். முன்னதாக கலைவாணர் 

என்.எஸ்.கிருஷ்ணன் பேரனும், என்.எஸ்.கே.கோலப்பன் மகனுமான என்.எஸ்.கே.கே. ராஜன் மேடையேறி ஆசிரி யரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அப்போது என்.எஸ்.கே.கே.ராஜன் ஆசிரியரின் உள்ளங் கைகளைப் பற்றி தனது கண்களில் ஒற்றிக் கொண்ட காட்சி, திராவிட இயக்க வரலாற்றின் எத்தனையோ தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. காவல்துறை யின் பாதுகாப்பு மிகவும் பலமாக இருந்தது. தொடர்ந்து ஆசிரியர், “தோழர்களே இன்றைக்கு நடக்கும் திராவிட மாடல் ஆட்சியைப் போல் இன்னொரு ஆட்சியைக் காட்டுங்கள். நாங்கள் எங்களைத் திருத்திக் கொள் கிறோம்” என்று பெருமையுடனும், நம்பிக்கையுடனும் குறிப்பிட்டார்.

பெண்கள் வாழத் தகுந்த மாநிலம் 

தமிழ்நாடுதான்!

தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு வந்து படிக்கும் ஒரு பெண், தனது வளர்ப்புத்தாய், நரபலி கொடுப்பதற்காக தனது மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு அழைப்ப தாகவும், தான் செல்ல விரும்பாததாகவும், தமிழ்நாடுதான் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்தது எனவும், அந்தப் பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தெரிவித்ததை எடுத்துரைத்து, ”இதுதான் தோழர்களே திராவிட மாடல்” என்றார். மக்களுக்கு பளிச்சென்று புரிந்துவிட்டதால், கைதட்டல்களில் பொறி பறந்தது. தொடர்ந்து 'தினமணி' நாளிதழில் வந்த மருத் துவக் கல்லூரிகள் பற்றிய செய்தியை படித்துக் காட்டி னார். 

அதாவது, இந்தியாவில் இருக்கும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும், அதில் 1,00,163 மருத்துவ இடங்கள் இருக்கின்றன என்றும், அதில் தமிழ்நாடு மட்டும் 11,275 இடங்களை கொண் டுள்ளதாகவும் கூறி, தமிழ்நாடு முதலிடம் என்றும் கூறி ஓர் இடைவெளி விட்டார். அந்த இடைவெளியை மக்கள் தங்களின் கைதட்டல்களால் இட்டு நிரப்பினர். தொடர்ந்து இரண்டு, மூன்றாம் இடங்களையும் எடுத் துரைத்து, இதில் குஜராத் மாடல் வரவே இல்லை என்று சொன்னதும், மக்கள் சிரித்தபடியே கைதட்டல்களைத் தொடர்ந்தனர். மேலும் அவர், சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆயினும் மக்களுக்கு இன்னும் சமத்துவம் வரவில்லையே என்றும், மாட்டை கட்டிப்பிடிக்க எண்ணுபவர்கள் மனிதனை எட்டி நில் என்று சொல்லும் நிலை, இன்றளவும் தொடர்வாகவும் குறிப்பிட்டார். இது தான் சனாதனம் என்று கூறி, இதைத்தான் ஆளுநர் பேசுகிறார் என்று ஆளுநர் பக்கம் கவனத்தைத் திருப்பினார். பிறகு, ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் எதிர்ப்புகாட்டக் கூடிய நிலையை அவரே உருவாக்குகிறார் என்று சொன்னதும், மக்கள் இதற் காகவே காத்திருந்தது போல் கைதட்டி தங்களின் உணர்வுகளை கைதட்டல்கள் மூலம் காட்டினர். குடும்பத் தகராறில் இறந்த ராணுவ வீரருக்காக பதறும் ஆளுநர், ஆன்லைன் சூதாட்டத்தால் நாள்தோறும் நடைபெறும் தற்கொலைகளுக்கு ஏன் பதறவில்லை? என்ற அறி வார்ந்த கேள்வியை மக்கள் முன் வைத்தார். மேலும் அவர், சமூகநீதி பாதுகாக்க வேண்டிய அளவுக்கு அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ப தையும், சேது சமுத்திரத்திட்டம் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் எப்படி நின்று போனது, அதை மீண்டும் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும், மக்கள் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்றெல்லாம் பேசி, உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றி வேல், சி.பி.அய். மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், ம.ம.க. மாவட்ட செயலாளர் சுல்பிகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிங், கழக அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மா.பொன்னுராசன் நன்றி கூறினார். அங்கிருந்து புறப்படும்போது ஆசிரியருக்கு விடைகொடுக்க மக்கள் காட்டிய ஆர்வம், அவர்தான் தமிழர்களின் தலைவர் என்பதை நிரூபித்தது. அங்கிருந்து புறப்பட்டு, திருநெல் வேலி நோக்கி பரப்புரைப் பயணக் குழு புறப்பட்டது.

பலமான காவலுடன் நடைபெற்ற 

இரண்டு கூட்டங்கள்!

எழுச்சிகரமான பாடலுடன் மாலை 7 மணியளவில் திருநெல்வேலி கூட்டத்தில் வரவேற்கப்பட்ட தமிழர் தலைவர், மேடையில் ஏறியதும் வேறெங்கும் காணாத ஒரு நிகழ்வாக காத்திருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று மேடையில் மக்களுக்கு கைகூப்பி நின்ற தமிழர் தலைவருக்கு, இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இங்கும் பலத்த காவல் இருந்தது. சீருடையில் இருப்ப வர்கள் போக, மாற்றுடையிலும் ஏராளமான ஆண், பெண் காவலர்கள் மக்களோடு மக்களாக கலந்து இருந் தனர். நமது புத்தக விற்பனையாளர்கள்கூட சுதந்திரமாக நடமாடி புத்தகங்கள் விற்பனை செய்ய முடியாத அளவுக்கு கெடுபிடி இருந்தது. நகரங்களில் கூடும் மக்கள் திரளைப்போலவே கிராமங்களிலும் மக்கள் அதிகமாக கூடி ஆசிரியரது உரைகளை கேட்கின்றனர்.

திருநெல்வேலியில் தமிழர் தலைவர்!

திருநெல்வேலி தச்சநல்லூர் சாவடித்திடலில் நடை பெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.காசி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட காப்பாளர் வேலாயுதம், மாவட்ட அமைப்பாளர் வள்ளியூர் குணசீலன், ப.க. மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாநகர செயலாளர் வெயிலு முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற் பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

சனாதனத்தின் கொடூரமான வரலாறு?

ஆசிரியர், ”தென்மண்டலம் செழிப்புறும் சேது சமுத் திரத் திட்டத்திற்கு கொக்கி போட்டு வைத்திருக் கிறார்களே, இது நியாயமா?” என்று ஒன்றிய அரசை நோக்கி கேள்வி கேட்டு உரையைத் தொடங்கினார். அடுத்து, “ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்குக்கூட நிற்க ஆசைப்படாத நாங்கள் ஏன் தொல்லைப்பட்டு உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்? என்று மக்களிடமும் ஒரு கேள்வியை முன்வைத்து, “மனிதனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது; சமத்துவம் இன்னும் கிடைக்க வில்லை. அதற்காகத்தான் வந்திருக்கிறோம்” என்று தொடர்ந்தார். நமக்கு அறிவு இல்லாமல் இல்லை; திறன் இல்லாமல் இல்லை. ஆரியர்கள் நம் சமூகத்தில் வர்ணாஸ்ரமத்தை திணித்து நம்மை படிக்க விடாமல் ஆக்கினார்கள்” என்று திராவிட, ஆரியப் போரின் அடிப்படையை தொட்டுக் காட்டினார். அதற்கு திராவிட மாடல் வழிமொழியும் வாசகம்தான் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று ஆரியத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதன் அடிப்படை யில்தான் இன்றைய தமிழ்நாடு அரசு நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை அவர். அத்தோடு, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று கூறி, ”இதுதான் நமது பண்பாடு” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். தொடர்ந்து வர்ண தர்மத்தால் கடந்த காலத்தில் நிலவிய மிகக்கொடூரமான வரலாற்று உண்மையை எடுத்துரைத் தார். அதாவது, வட மாநிலங்களில் பெண் குழந்தை பிறந் தால் கழுத்தை திருகி, கங்கையில் போட்டுவிடுவார்கள் என்றும், உடன்கட்டை என்ற கொடூரமான சம்பிரதாயம் மூலம், கணவனை இழந்த பெண்ணை உயிருடன் நெருப்பில் தள்ளி பச்சை படுகொலை செய்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கு கோயில் கட்டி கும்பிடும் காட்டு மிராண்டித்தனமான சம்பிரதாயத்தை தோலுரித்துக் காட்டிவிட்டு, இதுதானே உங்களின் சனாதனம்? என்று காட்டமாக கேள்வி கேட்டார். மக்கள் உறைந்து போயிருந்தனர். 

''திராவிட மாடல் தானே கைம்பெண்களுக்கு மறு மணம் செய்வித்தது! திராவிட மாடல் தானே பெண்களுக்கு கல்வி வாய்ப்பைக் கொடுத்தது!'' என்று சொன்னதும் மக்கள் தலையை ஆட்டியபடி ஆசிரியரின் கூற்றை ஆமோதித்தனர். பெண்களுக்கு கேட்காம லேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% கொடுத்தது திராவிட மாடல் தானே? என்று தொடர்ந்து, 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டை நினைவு படுத்தி அதன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

ஆளுநர், பதவி விலகி விட்டுப் 

பேசட்டும்?

தொடர்ந்து தமிழ்நாட்டின் கல்வி, சுகாதார கட்டமைப்புப் பற்றி விளக்கினார். அதனால் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை ஒன்றிய அரசு கொடுத்துள்ள புள்ளி விவரங்களை - நாளிதழ்களில் வந்துள்ள செய்தியை படித்துக்காட்டி  விளக்கிவிட்டு, “இதைத் தடுக்கத் தானே ‘நீட்’ தேர்வு?, இதைத் தடுக்கத் தானே ‘கியூட்’ தேர்வு?'' என்று ஒன்றிய அரசின் செவிகளில் அறையும்படியாக கேள்வியைத் தொடுத் தார். இதையெல்லாம் அறியாமல் ஆளுநரின், ஜாதியை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டுவந்தனர் எனும் உளறல்களை சுட்டிக்காட்டி, ”ஆளுநர், அண்ணாமலை மாதிரி பதவி விலகி விட்டு இதையெல்லாம் பேசட்டும். நமது ஆத்திரத்தைத் தூண்டிவிட்டு, எதையாவது செய்யட்டும் என்று எண்ணுகிறார்கள்” என்று கூறி ஆர்.எஸ்.எஸ்.சின் மறைமுக திட்டத்தை வெளிச்சத் திற்குக் கொண்டு வந்தார். அத்தோடு, “உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது” என்றும் பதிலடி கொடுத்தார். மக்கள் ஆரவாரத்துடன் கையொலிகளை எழுப்பி, ஆசிரியர் சொல்வது உண்மைதான் என்பதை அங்கீ கரித்தனர். 

மேலும் அவர், திராவிட மாடல் என்றால் என்ன? ஆரிய மாடல், சனாதன மாடல், குஜராத் மாடல் என்றால் என்ன? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கிப் பேசினார். அறிவு நாணயமற்ற ஒன்றிய ஆட்சியாளர்களின் கோயபல்ஸ்களை அம்பலப்படுத்திப் பேசினார். அதற்கடுத்து, பயணத்தின் முக்கிய காரணமான சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். அப்போது, இளைஞர்கள் கெட்டுப் போவதை தடுக்கவும், வறுமையைப் போக்கவும், தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாடு செழிக்கவும், இந்திய அரசின் கடலோரப் பாதுகாப்பு பலப்படவும் சேது சமுத்திரத் திட்டம் அவசியம் என்று சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை அடுக்கினார். இறுதியில், ”தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக போரிடுகிறது! நாங்கள் மக்களை ஆயத்தப்படுத்துகிற பணியை செய்து கொண்டிருக் கிறோம். உங்களின் ஆதரவு அவசியம் தேவை. வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா மகன் மா.இசக்கி பாண்டியன், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் சிறீராம், சி.பி.அய். மாவட்ட செயலாளர் லட்சுமணன், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, பு.இ.மு. மாவட்ட பொறுப்பாளர் மணிவண்ணன், கழக வழக் குரைஞரணி மாநில துணை செயலாளர் வழக்குரைஞர் கணேசன், கழக அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்.இராஜேந்திரம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனியசாமி, நெல்லை மாவட்ட மகளிரணி செயலாளர் பானுமதி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், சேரன்மாதேவி ஒன்றிய தலைவர் செல்வசுந்தரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் நன்றி கூறினார். 

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment