ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தமிழ்நாடு என்று எதற்கு கூறவேண்டும் - தமிழகம் என்றே கூறுங்கள் என்கிறாரே ஆளுநர்?

- வி.கோவிந்தன், வேலூர்

பதில் 1 : இதைவிட ஒரு மாநில ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோதப் பேச்சு வேறு இருக்கவே முடியாது. ‘தமிழ்நாடு’ என்பதுதான் அதிகாரப்பூர்வமாக 18.7.1967 அன்று சட்டமன்றத்தின் தீர்மானமாக நிறைவேறி, பிறகு ஒன்றிய அரசும் ஏற்று அரசிதழ் மூலம் வந்து நடைமுறையில்  “Government of Tamilnadu” என்றே அழைக்கப்படும்  - வழமைக்கு மாறாக இப்படி அரசு ஊழியரான ஆளுநர் பேசுவது, குறுக்குச் சால் விடுவது - அவர் அந்தப் பதவியின் மாண்பைக் குலைத்த - சட்ட விரோத நடவடிக்கையே!   “Irresponsible work of governor Ravi should be called back - by the Union Government” - என்ற ('Hashtag') Trending தேவை - குவியட்டும் - அடாவடித்தனத்திற்கு முதல் அடி அறவழியில்.

---

கேள்வி 2: கொல்கத்தா வந்தே பாரத் ரயிலில் ஹிந்தி எழுத்தால் வங்காளிகள் கோபமடைந்துள்ளனரே?

- மு.வேலவன், வேளச்சேரி

பதில் 2 : ஹிந்தி எதிர்ப்பு என்பது வங்கத்திலும் முன்பு போல இப்போதும் பரவுகிறது என்ற உண்மையின் வெளிச்சம்.

---

கேள்வி 3: பல்கலைக்கழகங்களுக்குப் பட்டம் வழங்க அனுமதி கொடுக்காமல் தாமதித்து வருகிறாரே ஆளுநர்?

- கோ.முருகேசன், தாம்பரம்

பதில் 3 : அது மட்டுமா? சுமார் 22 மசோதாக்கள். தற்கொலையைத் தடுக்கும் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்குக் கூட இன்னமும் ஒப்புதல் தராது அல்லது மறுப்பு - திருப்புதல் எதுவும் செய்யாது கிடப்பில் இருப்பது ஆளுநரின் கடமை தவறிய ஒழுங்கீனம் அல்லவா? ‘வெளியேறுங்கள்’ என்ற முழக்கம் பெரிதாக்கிடும் நிலையை நாளும் அவரது செயல் விரிவாக்கி விடுகிறது.

---

கேள்வி 4: பொங்கல் பரிசுத்தொகுப்பில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, கொடுக்கவேண்டும் என்கிறார்களே பாஜகவினர்?

- அ.ஆறுமுகசாமி, திண்டிவனம்

பதில் 4 : முதலில் இவற்றை பா.ஜ.க. ஆளும் கருநாடகா தொடங்கி பல வடமாநிலங்களில் கொடுக்கச் சொல்லட்டும் - செய்ய வைக்கட்டும் - பிறகு இங்கு அறிவுரைக்கு வரலாம்!

---

கேள்வி 5: ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்து கூறுகின்றனரே?

-எஸ்.கோபாலகிருட்டிணன், மதுரை

பதில் 5 : அது ஒரு வகையான வரவேற்பு - சம்பிரதாயம் போல் தோன்றினாலும் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அலையின் வெளிப்பாடும் ஆகும்!

---

கேள்வி 6: ஆன்-லைன் சூதாட்டத்தை தடுக்க முனைந்தால் ஒன்றிய அரசு ஆன்-லைன் சூதாட்டத்திற்கு புதிய விதிகளைக் கொண்டுவந்துவிடுகிறதே?

-தி. காவேரி, திருவரங்கம்

பதில் 6 : பாரதக் கதையைத் தூக்கிப் பிடித்து வாதாடுவோர் - சூதாடும் ஆரியக் கலைக்கு மறைமுக வக்காலத்துப் போடுவது அதிசயமல்லவே!

---

கேள்வி 7: அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

- பா.திவ்யபாரதி, அரும்பாக்கம்

பதில் 7 : நீதிமன்றத்தில் வாசம் செய்யும் அவர்கள் அடுத்து காவிகளையே சரணாகதி அடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இணையக் கூடும் - அந்தோ பரிதாப நிலை!

---

கேள்வி 8: ஜனநாயகத்தின் தூணான பத்திரிகையாளர்களை மிரட்டும் விபீடணர்களுக்குத் தங்களது அறிவுரை என்ன?

- பா.ஓவியன், சென்னை

பதில் 8 : இப்படி மிரட்டிய வெத்து வேட்டு வாய்ச் சவடால் பேர்வழிகளை வரலாறு குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் என்பதுதான்.

---

கேள்வி 9:  மாறாத ஆன்மிகம், மாறிக் கொண்டேயிருக்கும் அறிவியல் என்கிறார்களே பக்த சிகாமணிகள்?

- கோ.நாராயணன், தாம்பரம்

பதில் 9 : வளர்ச்சிதான் மாறுதலின் இறுதி. மாறாதது தேக்கம் - குட்டைகள். ஜீவ நதி ஓடும் - அதுபோல அறிவியல். வளர்ச்சி அறிவியல் மூலம் ஏற்படும்.

---

கேள்வி 10:  இஸ்லாமியர் ஒருவர் தன்னுடன் குடும்பம் நடத்திய பெண்ணை  (Living Together)  கொலை செய்தது தொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் அறிக்கை விடுத்தனர்.  புத்தாண்டு அன்று தலைநகரில்  பாஜக பிரமுகரின் காரில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி எந்த ஒரு மகளிர் அமைப்பும் கண்டனம் தெரிவிக்கவில்லையே?

- ப.கேசவன், நெல்லை

பதில் 10 : மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி! புரியவில்லையா? இன்று அதுதானே நடக்கிறது!


No comments:

Post a Comment