சேது சமுத்திரம் திட்டத்தை முடக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

சேது சமுத்திரம் திட்டத்தை முடக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையா?

தொல்.திருமாவளவன் பேட்டி

தூத்துக்குடி ஜன. 22- கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் 20.1.2023 அன்று தூத்துக் குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட மன்றத்தில் கண்டித்து உள்ளார். இதுபோன்ற அநாகரீக செயல்க ளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரும் புக்கரம் கொண்டு நசுக்குவோம் என உறுதியளித்து உள்ளார். மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக முதலமைச்சர் சி.பி.சி.அய்.டி விசார ணைக்கு உத்தரவிட்டு உள்ளார். 

அந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படு வார்கள் என்ற நம்பிக்கை இருக் கிறது. இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கு தனி உளவுப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். தீவிரவா தத்தை தடுக்க எவ்வாறு கியூ பிரிவு இருக்கிறதோ அதுபோல ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நடைபெறுவதை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கையாக கண்கா ணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவ லாக உள்ளது. அதனை கண்டறிவ தற்கு சிறப்பு விசாரணை ஆணை யத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

ஒன்றிய அமைச்சர் ஒருவர் தான் அங்கு இருப்பது ராமர் பாலம் இல்லை என்று பேசியதை ஊடகங்களில் பார்த்தோம். மீண் டும் அவர்கள் அதை ராமர் பாலம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.

சேது சமுத்திர கால் வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கருதக்கூடியவர்கள் மீண் டும் ராமர் பாலம் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக மீனவர்கள், மக்களின் கருத்துகளை கேட்ட றிந்து, அதன் அடிப்படையில் திட் டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட தி.மு.க. இடமளித்து உள்ளது. 

அந்த தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் தீவிரமாக பணியாற் றுவோம். அ.தி.மு.க. தற்போது சின்னத்தையே இழந்து நிற்கிறது. ஒரே அ.தி.மு.க.வாகவும் இல்லை.

தாட்கோ மூலம் மானியம் வழங்க முன்வந்தாலும் வங்கிகள் கடன் வழங்கத் தயாராக இல்லை. வங்கிகளும் ஒத்துழைத்தால் தான் தாட்கோ கடனுதவியை ஆதி திராவிட மக்கள் பெற்று பயன்பெற முடியும்.

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையிலான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுக்க வேண்டும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

No comments:

Post a Comment