நெல்லை மண்பானைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

நெல்லை மண்பானைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி

நெல்லை, டிச.15, பொங்கல் விழாவிற்காக நெல்லையில் இருந்து மலேசியா வுக்கு மண்பானைகள் விமானத்தில் அனுப்பப் படுகின்றன. தென்காசி மாவட்டங்களில் சுமார் 3,500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் உள்ள குளங்களில் தரமான கரம்பை மண் கிடைப்பதால் இந்த பகுதியில் தயாராகும் மண்பாண்டங்கள் அழ காக ஜொலிக்கிறது. அதாவது அகல்விளக்கு, தேநீர் கோப்பை, வாட்டர் பாட்டில், கார் முதல் வீடுகள் வரை வைக்கப்படும் அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டி, பொங்கல் வைப்பதற்காக மண்பானைகள், கலயம் என பலவகையான பொருட்கள் நேர்த்தியாக செய்யப்படுகின்றன. இவற்றிற்கு உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளது. நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு மண் பாண்ட சங்கத்தில் இருந்து சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளுக்கு மண்ணில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், பிரியாணி சட்டி மற்றும் சாம்பிராணி கிண்ணம் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்படுகின்றன.

தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதனால் இந்த நாடுகளில் பொங்கல் விழாக் காலத்தில் மண்பானைகளுக்கு அதிக கிராக்கி ஏற்படும். தமிழ்நாட்டில் இருந்து பொங்கல் வைப்பதற்கு மண்பானைகள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் செய்யப்படுகின்ற மண்பானைகள் நல்ல கலைநயத்துடன் தரமாக இருக்கும் என்பதால் இந்த மண்பானைகளுக்கு மலேசியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து பொங்கல் விழாவையொட்டி மலேசியாவுக்கு அனுப்புவதற்காக தரமான மண்பானைகள் தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த மண்பானைகள் நெல்லையில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு லாரிகள் மூலமும், அங்கிருந்து விமானம் மூலமும் மலேசியாவுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த மண்பானைகள் நெல்லையில் ரூ.150 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 3000-க்கும் மேற்பட்ட பானைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த மண்பானைகளுக்கு மலேசியாவில் அதிக வரவேற்பு உள்ளதால் வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக மண்பானைகளை தயார் செய்து அனுப்பப்படுகிறது.


No comments:

Post a Comment