திமுகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள தோழர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்!
மாண்புமிகு அமைச்சர் பொறுப்பை தோழர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுள்ளதற்காக அல்ல; அண்மையில்,' ஒரு கேள்வி- ஒரு சொல் பதில்' நிகழ்வில், 'கடவுள்' என்றதற்கு 'இல்லை' என்று தன்னுடைய நிலைப்பாட்டைத் துணி வோடு மீண்டும் அறிவித்ததைப் பாராட்டி மகிழ்கிறோம்!
இந்தப் பதில் இல்லாது போய்,'எனக்குப் பெருமாளும் வேண்டும்; பெரியாரும் வேண்டும்' எனக் கூறாமல், ஒற்றைச் சொல்லில் உலகத் தோற்றத்திற்குக் காரணமாகக் கற்பிக்கப்பட்டுள்ள கடவுள் எனும் கருத்தியல் மீது சம்மட்டி கொண்டுத் தாக்கித் தகர்த்துள்ள செயலை திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரகடனமாகவே நாம் பார்க்கிறோம்!
தோழர் உதயநிதி ஸ்டாலின் இப்படி அறிவிக்காது விட்டிருந்தால் இந்நேரம் பலர், காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, மேல்மருவத்தூர் அம்மா, தில்லை நடராஜர், திருவாரூர் தியாகராயசாமி, திருப்பதி ஏழுமலையான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, மருதமலை உள்ளிட்டதிருமுருக சேத்திரங்கள், மயிலை கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கேரள அய்யப்பன் வகையறா உள்ளிட்ட இஷ்ட-நிஷ்ட பரிகாரப் பரலோக கடவுளர்களின் சந்நிதியில் விழுந்தும், உருண்டும், பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி தூக்கி ஆடியும், மூக்குல,நாக்குல அலகு குத்தி, உடலை வருத்திப் பறவைக் காவடியாகத் தொங்கியும் தோழர் அமைச்சரானதற்கு பக்தி ரசம் சொட்டச் சொட்ட தத்தமது வேண்டுதல்களை நிறைவேற்றி, காவிவண்ணம் பள பளக்கும் சீருடையோடு வரிசை வரிசையாக அணிவகுத்து வந்து, குங்குமம்-விபூதிப் பிரசாதங்களைக் குன்றெனக் குவித்துத் தோழரை திக்குமுக்காடச் செய்திருப்பர்.
இன்னும் சிலர்,'எந்தச் சாமி சின்னவர் விரும்பும் சாமி' என ஆராய்ந்து, அந்தச் சாமியே எங்கள் சாமி எனக் காட்டித் திரியவும், தோழரை வாழ்த்தி வரவேற்கும் திமுக விளம்பரங்களில் அவற்றைப் பதிவிட்டும் நெகிழ்ந்து
போயிருப்பர்.
இந்தப் பேராபத்துகளையெல்லாம் அண்ட விடாது அதிரடியாக, Ôஎனக்குப் பிடித்த சாமி ஈரோட்டு இராமசாமி' எனத் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு சூளுரைத் துள்ள தோழர், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!
- ஓ. சுந்தரம் முகநூல் பதிவு
No comments:
Post a Comment