சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்துவரி உயர்வு செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்துவரி உயர்வு செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை,டிச.28- சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் மாநக ராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்துவது தொடர் பாக தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து,  மாநகராட்சிகளில் கடந்த மே 30ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் டி.வி.ராமானுஜம், கே.எம்.விஜயன், பி.எச்.அரவிந்த் பாண் டியன், வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

‘‘ஒன்றிய நிதிக்குழு அறிக்கை அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. சொத்து வரியை உயர்த்த, மாநகராட்சி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். இதை அரசு தீர்மா னிக்க முடியாது. சொத்து வரியை உயர்த்த முறையான கணக்கீடுகளோ, நடை முறையோ மேற்கொள்ளப் படவில்லை. எனவே, அர சாணை, மாநகராட்சி தீர்மா னங்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட் டனர்.

மாநகராட்சி தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்குரைஞர் சி.சங்கமித்திரை ஆகியோர் ஆஜராகினர்.

‘‘சென்னையில் 1998-க்கு பிறகு சொத்து வரி உயர்த்தப் படவில்லை. மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கும் சொத்து வரியை உயர்த்துவதே தீர்வாக அமை யும். மொத்தவிலை குறியீடு, உள்நாட்டு மொத்த உற்பத்தி, பணவீக்கம், சந்தை நிலவரம் என பல அம்சங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு நிதித் துறை செயலர் குழு அளித்த பரிந்துரையின் பேரிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த 1977 முதல் பின்பற்றப் படும் நடைமுறையே தற்போதும் பின்பற்றப் பட்டுள்ளது. இவ்வாறு கூறி, அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு:  நலத் திட்டங்கள், அரசின் செலவி னங்கள் உள்ளிட்டவற்றுக்காக வரி விதிப்பு என்பது மக்கள் நல அரசுக்கு அவசியமாக உள்ளது. 

அதேநேரம், வரி விதிப்பை சந்தேகத்துக்கு இடம்தராமல் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்தி அரசாணை பிறப்பித்ததில் தவறு இல்லை. 

வரியை உயர்த்த அரசு தெரிவித்த காரணங்களும் ஏற்கும் படி உள்ளன. மேலும் அரசா ணைகூட, நீண்ட இடை வெளிக்கு பிறகு சொத்து வரியை உயர்த்துவது குறித்த ஆலோசனையாகவே உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை. எனவே, தமிழ்நாடு அரசாணை மற்றும் மாநகராட் சிகளின் தீர்மானங்கள் செல்லும்.

சென்னையில் சொத்து வரி செலுத்தும் 15 லட்சம் பேரில் 30 பேர் தெரிவித்த ஆட்சேபங் களை அதிகாரிகள் முறையாக பரிசீலித்து உடனுக்குடன் பதில் அளித்திருந்தால், இவ் வளவு வழக்குகள் நீதி மன்றம் வந்திருக்காது. 

அதிகாரிகளின் செயல் அதிருப்தி அளிக்கிறது. சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடை முறையை குறைகூற முடியாது. 2022-_2023 ஆண் டின் 2ஆவது அரையாண் டுக்கான சொத்து வரியை செலுத்தக் கோரி மனுதாரர்களுக்கு அனுப்பப் பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. 

அவர்களுக்கு 2023-2024 ஆண் டின் 1ஆவது அரையாண்டு முதல், அதாவது வரும் 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும்.

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் உடனுக் குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதள சேவையை மாநகராட்சி நிர்வாகங்கள் மேம்படுத்த வேண்டும்.

-இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment