அய்.அய்.டி. - மத்திய பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு கிடையாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

அய்.அய்.டி. - மத்திய பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

அய்.அய்.டி, மத்திய பல்கலைக்கழகங்களில்  எஸ்.சி.,எஸ்.டி., ஓ.பி.சி.யினரின் பேராசிரியர் பணியிடங்களில் நிரப்பப்படாத நிலுவைக் காலி இடங்கள் 1400க்கும் மேல் உள்ளன என்று நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சியான பதில் அளித்துள்ளார். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "அய்.அய்.டிகள் மற்றும் மத்தியப்  பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு  காலக்கெடுவோடு 2021 செப்டம்பர் 5 அன்று பணி நியமனத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. எல்லா இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும் சொல்லப்பட்டது. 2022 செப்டம்பர் 4 அன்று ஓராண்டுக் கெடு முடிந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தேன். 

2021 செப்டம்பர் 5 அன்று இருந்த பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்  இட ஒதுக்கீடு காலி யிடங்கள் எவ்வளவு? எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டன? ஓராண்டு கெடு முடிந்த 2022 செப்டம்பர் 4 அன்று எவ்வளவு இடஒதுக்கீடு காலி யிடங்கள் இருக்கின்றன, இந்த நிறுவனங்கள் வெளியிட்ட பணி நியமன அறிவிக்கைகளில் நிலுவை இட ஒதுக்கீடு இடங்களின் எண் ணிக்கை தரப்பட்டனவா? என்று கேள்விகளை எழுப்பி இருந்தேன். (கேள்வி எண் 1848/ 19.12.2022).  அதற்கு பதில் அளித்த ஒன்றிய கல்வி  இணை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி, 23 அய்.அய்.டி.கள், 

45 மத்திய பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களை தந்துள்ளார்.  

இதில் கரக்பூர், வாரணாசி, கவுகாத்தி, அய்தராபாத், ஜோத்பூர், ரோபார், பாலக்காடு, ஜம்மு  ஆகிய 8 அய்.அய்.டிகள்  “நெகிழ்வு பதவி அமைப்பை” (Flexible Cadre Structure) கொண்டிருப்பதால் அவற்றில் இட ஒதுக்கீடு இடங்களை அடையாளம் காண இயலவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. பாட்னா  அய்.அய்.டியில் ரோஸ்டர் 2021 இல் பராமரிக்கப்படவில்லை என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மற்ற 14 அய்.அய்.டிகளில் கடந்த 05.09.2021 அன்று   மொத்த நிலுவை காலியிடங்கள் 342. அவற்றில்  ஓ.பி.சி 156, எஸ்.சி 98, எஸ்.டி 50 என இருந்துள்ளன. பிரிவு வாரி தகவல்கள் இல்லாதவை 38 காலியிடங்கள் ஆகும்.  

ஓராண்டு கழித்து  04.09.2022 அன்று மொத்த நிலுவை காலி யிடங்கள் 358 இருக்கின்றன. அவற்றில் ஓ.பி.சி 185, எஸ்.சி 113, எஸ்.டி 60 காலியிடங்கள் நிலுவையாக உள்ளன.  இதுதவிர நடப்பு ஆண்டு 151 காலியிடங்களில் 82 ஓ.பி.சி, 46 எஸ்.சி, 23 எஸ்.டி இடங்களை நிரப்பவில்லை.  சென்னை அய்.அய்.டியில் 2021 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 44. பணி நியமனங்களுக்கு பிறகு நிரம்பாத நிலுவை காலியிடங்கள் 16  ஆகும்.  கரக்பூர், ரூர்கி, தான்பாத், திருப்பதி, கோவா, தார்வார் ஆகிய அய்.அய்.டி களில் ஒரு எஸ்.டி, தேர்வர் கூட நியமனம் பெற வில்லை. அய்.அய்.டி ரூர்கியில் ஒரு எஸ்.சி. தேர்வர் கூட நியமனம் பெறவில்லை. பெரும்பாலான அய்.அய்.டி.கள் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவிகளுக்கு எஸ்.சி, எஸ்.டி, 

ஓ.பி.சி. தேர்வர்களுக்கு நியமனம் தரவில்லை. உதவி பேராசிரியர் பணியிடங்களில் மட்டுமே நியமனம் தந்துள்ளனர். 

அமைச்சர் 45 மத்திய பல்கலைக் கழகங்களின் விவரங்களையும் தந்துள்ளார். அவற்றில் 12 மத்திய பல் கலைக் கழகங்கள் இட ஒதுக்கீடு காலி யிடங்கள் ‘0’ என காண்பித்துள்ளன. இட ஒதுக்கீடு காலியிடங்கள் அடையாளம் காணப்படவில்லையா, நிலுவை இடங்களே இல்லையா என்பது அய்.அய்.டி. விவரங்களில் தரப்பட்டது போல இதில் சொல்லப்படவில்லை.  மற்ற 33 மத்தியப் பல்கலைக் கழ கங்களில் கடந்த 2021 செப்டம்பர் 5 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 1099.   அவற்றில் ஓ.பி.சி. 408, எஸ்.சி. 424, எஸ்.டி. 267 என இருந்துள்ளன. ஓராண்டு  கெடு வைத்து பணி நியமனங்கள் நடந்து முடிந்த பின்னர் 2022 செப்டம்பர் 4  இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 919. அவற்றில் ஓ.பி.சி 340, எஸ்.சி 341, எஸ்.டி 238 என இருந்துள்ளன. இந்த ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 212 மட்டுமே. அவற்றில் ஓ.பி.சி 84, எஸ்.சி 94, எஸ்.டி 34  இடங்கள் ஆகும். 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 24. அவற்றில் ஓ.பி.சி 9, எஸ்.சி 8, எஸ்.டி 7 என இருந்துள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 6 மட்டுமே (ஓ.பி.சி. 3, எஸ்.சி. 1, எஸ்.டி. 2).  புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 49. அவற்றில் ஓ.பி.சி 11,  எஸ்.சி 21,  எஸ்.டி 17 என இருந்துள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங் கள் 23 மட்டுமே (ஓ.பி.சி. 8, எஸ்.சி. 9, எஸ்.டி 6). 

அமைச்சரின் பதில் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அய்.அய்.டி களில் “இலக்கு இடப்பட்ட பணி நியமனங்கள்” துவங்கிய போது இருந்த இட ஒதுக்கீடு காலி இடங்களை விட ஓராண்டு கெடு முடிந்த பின்னர் நிலுவை காலியிடங்கள் அதிகரித்துள்ளன. பல மத்தியப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படுவதற்கான முனைப்பு இருந்ததாகவே தெரியவில்லை. கெடு கெடுவதற்கா என்ற கேள்வி எழுகிறது.  அய்.அய்.டி.களில் 342 இட ஒதுக்கீடு காலியிடங்கள் ஓராண்டில் நடப்பு இடங்களையும் சேர்த்து 509 இட ஒதுக்கீடு காலி யிடங்களாக அதிகரித்துள்ளன. 8 அய்.அய்.டி.கள் அதாவது 

30 சதவீதத்திற்கும் அதிகமான அய்.அய்.டி.கள் “நெகிழ்வு பதவி அமைப்பை” வைத்துள்ளோம் என்று சொல்லி இட ஒதுக்கீடு எண்ணிக் கையை தரவில்லை. பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரி யர் என எல்லாப் பதவிகளுக்கும் தனித் தனியாக இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.  இப்படி சில அய்.அய்.டி கள் தனி முறைமையை வைத்திருப்பது இட ஒதுக்கீடு கோட்பாடுகளை மீறுவது ஆகும். இதில்  அதை வெளிப் படுத்தாத மற்ற அய்.அய்.டிகளி லும் இந்த நடைமுறை இருக்கிறது என்றே நினைக்கிறேன். எல்லா நேரடி  நியமனங்களிலும் இட ஒதுக் கீடு ரோஸ்டர் தனித் தனியாக கடைப்பிடிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட  வேண்டும். உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். 

அய்.அய்.டி பாட்னாவில் இட ஒதுக்கீடு ரோஸ்டரே கடந்த ஆண்டு இல்லை என்று  பதிலில் உள்ளது. இது சட்டத்தை மீறுவது ஆகும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அய்.அய். டி.கள் இட ஒதுக்கீடு எண்ணிக்கையைத் தர  முடியவில்லை என்றால் பணி நியமன  அறிவிக்கையிலும் காண்பிக்கவில்லை என்று பொருள். நான்கு, அய்ந்து அய்.அய்.டி.கள் மட்டுமே பணி நியமன அறிவிக்கை யில் இட ஒதுக்கீடு விவரங்களை தந்திருந்ததாக அறிகிறேன்.  இப்படி இட  ஒதுக்கீட்டு விவரங்களை வெளியிடாமல் இருப்பது, விதிகளை மீறுகிறசெயல்.  இடஒதுக்கீட்டுப் பிரிவினர் விண்ணப்பம் செய்வதற்கான தகவல்களை மறைப்பதும் ஆகும். வெளிப்படைத்தன்மை அற்ற அணுகு முறை மாற்றப்பட வேண்டும். அறிவிக்கைகளில் நிலுவைக் காலியிடங்கள் காண்பிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட வேண்டும். இது குறித்து ஏற்கெனவே நான் 15.12.2021 அன்று கல்வி  அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அப்போதே அமைச்சகம் தலையிட்டு இருந்தால் இட ஒதுக்கீடு அமலாக் கத்தில் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டு இருக்காது. உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மத்திய பல்கலைக் கழகங்களிலும் பெரும் அநீதி நிகழ்ந்துள்ளது. 

05.09.2021 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 1099 (ஓ.பி.சி 408, எஸ்.சி 424, எஸ்.டி 267). இவற்றில் ஓராண்டில் நிரப்பப்பட்டவை 212 மட்டுமே. (ஓ.பி.சி 84,  எஸ்.சி 94, எஸ்.டி 34). 20 சதவீத நிலுவை காலியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை."

மதுரை மக்களவை உறுப்பினரின் முயற்சி பாராட்டத்தக்கது. ஒன்றிய அரசு அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. சமூகநீதிக்கு எதிரான இந்த ஒன்றிய அரசு மறுபடியும் தொடரலாமா? வெகு மக்களே சிந்திப்பீர்!


No comments:

Post a Comment