தமிழ்நாடு ஆளுநரை நீக்குக! குடியரசுத் தலைவரிடம் தி.மு.க. கூட்டணி எம்.பி.,க்கள் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

தமிழ்நாடு ஆளுநரை நீக்குக! குடியரசுத் தலைவரிடம் தி.மு.க. கூட்டணி எம்.பி.,க்கள் மனு

சென்னை,நவ.10 தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடி யரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநரின் பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரை திரும்பப் பெற வலி யுறுத்தி, திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் கையெழுத்திட்ட மனு, குடி யரசுத் தலைவர் அலுவலகத்தில் நேற்று (9.11.2022) அளிக்கப்பட்டது. 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும், செயல் பாட்டு அளவிலும் எதிர்ப்பது அரச மைப்புச் சட்டத்தை மீறியதாகும்.

அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது தொடர்கிறது

2021 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சி உரிமையை மக்கள் திமுகவுக்கு வழங் கினர். எனினும், தமிழ்நாடு அரசும், சட்டப்பேரவையும் மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகை யிலும், அரசின் கொள்கைகளுக்கு எதி ராகவும் ஆளுநர் பேசுவது தொடர்கிறது.

குறிப்பாக, மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் தேவையின்றி காலம் தாழ்த்து கிறார். இது மாநில நிருவாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாகும்.

ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயல்

தமிழ்நாடு ஆளுநர் தமது முதன் மையான பணியைச் செய்வதில்லை. கூட் டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தச் சட்டம், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு 10 மாதங்களாக, பரி சீலிக்கப்படாமல் உள்ளது. ‘நீட்' விலக்கு சட்ட மசோதா கடந்த ஆண்டு செப்.13 இல் அவருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்கள் காலம் தாழ்த்தினார். இது குறித்து அப்போதைய குடியரசுத் தலை வர், ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஆளுநர், அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப் பினார். இது ஆளுநருக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும். இதனால் சிறப்புக் கூட் டத்தை கூட்டும் சூழல் உருவாகி, மீண்டும் ‘நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது போன்ற செயல்பாடுகள் ஆளுநருக்கு அழகல்ல.

பல்வேறு மதங்கள், மொழிகள், ஜாதி களைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், ஆளுநர் அடிக்கடி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். மதச் சார்பின்மையில் பற்று கொண்ட அரசுக்கு இது சங்கடமாக உள்ளது.

சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துகள்

சனாதன தர்மத்தைப் போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழ்ப் பெரு மையையும் விமர்சிப்பது என சர்ச் சைக்குரிய பல்வேறு கருத்துகளைத் தெரி வித்துள்ளார். தமிழர்களின் உணர்வு களையும், பெருமையையும் ஆளுநரின் இத்தகைய பேச்சுகள் புண்படுத்தி உள்ளன.

ஆளுநரின் சிந்தனை, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு அவர் இணங்கிச் செல்லவேண்டும். தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார். மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்கிறார். தனது நடத்தை, செயல்களால் ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டும்!

எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங் களைக் காப்பாற்ற வேண்டும்.

-இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment