தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் பொழுது போக்கா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் பொழுது போக்கா?

வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,நவ.29- எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய விசைப் படகு மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து நேற்று (28.11.2022) 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று (நவ.29) கரை திரும்ப இருந்தனர்.

இந்நிலையில், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பி.வளர் செல்வம், கே.ஜெவிலா, எம்.மகேந்திரன், கே.சிவபிரகாஷ் ஆகியோரது 4 படகுகள், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த எம்.துரைராஜின் படகு என மொத்தம் 5 படகு களில், நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக் குமாறு ஒன்றிய வெளியுறவுத் துறைஅமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 5 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் நவ.28ஆம் தேதி (நேற்று) சிறை பிடித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 221 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழ்நாடு மீனவ சமூகத்தினரிடம் கடும் மன அழுத்தம், வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர் கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்துக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடி படகுகள் தற்போது இலங்கைவசம் உள்ளன. தொடர் முயற்சிகளின் காரண மாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட் டாலும், அவர்களது மீன்பிடி படகுகள் இன்னும் இலங் கையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், தற்போது இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடி யாக விடுவிக்கவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 221 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment