பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

பதிலடிப் பக்கம்

எது வகுப்பு வாதம்?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

வகுப்புத் துவேஷம் - வகுப்புவாதம் என்ற சொற்கள் தமிழ்நாட்டில் உச் சரிக்கப்படுவதற்கும், மற்ற மற்ற பகுதிகளில் ஒலிப்பதற்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு.

இந்த நாட்டிலே நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக் கக் கூடிய ஒரு சிறு கூட்டம் பிறப்பால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்றும், பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே எங்களுக்குத்தான் என்றும் சாஸ்திரங் களை எழுதி வைத்து - அவற்றைக் கடவுள் உண்டாக் கினார் - மதம் இப்படித்தான் கூறுகிறது - அதனை மீறக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் மத்தியில் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து, ஜாதி கூடாது என்றும், பிறப் பின் அடிப்படையில் பேதம் கூடாது என்றும் பெரும் பான்மையான மக்கள் சூத்தி ரர்கள் என்று இழிவுபடுத் தப்பட்டு கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப் பட்ட மக்களுக்காக உரிமையைக் கோருபவர்களை, போராடுபவர்களைப் பார்த்து ஆண்டாண்டுக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் அந்த ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் உரிமைக் காகக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து இயக்கம் நடத்துபவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புவாதிகள் என்று தூற்றுவதுண்டு.

லாலா லஜபதிராய் ஒருமுறை அழகாகச் சொன்னார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர் களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று சொல்லி யிருக்கிறார். அதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்று கிறது. மற்றும் அந்த தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தை களுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையை கொடுத்து,

மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தை யாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறை வான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். அந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

(விடுதலை 1.1.1962, பக்கம் 1)

இந்த மனிதாபிமான உணர்வைப் புரிந்துகொள்ளா மல், புரிந்திருந்தும்கூட தங்களின் ஆதிக்கத்திற்கும் இது சம்மட்டி அடியாக இருக்கும் என்ற காரணத்தால் பிராமணத் துவேஷி என்று அவருக்கு முத்திரை குத்தினார்கள்.

கொசு கடிக்கிறது என்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் கொசுத் துவேஷியா என்று பதில் அடிகொடுத்து அடக்கினார் பெரியார்.

பெரியார் அன்று கொடுத்த குரல் எச்சரித்தது - அதைத்தான் வேறு பெயர் கொடுத்து இன்றைக்குப் பலரும்  கையில் எடுத்துக்கொண்டு இருக் கிறார்கள்.

1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் காங் கிரஸ் கட்சியில் இருந்த போதே சேலம் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ‘இந்து' ஏடு தனது நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்ட மலரின் 337ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை இங்கு நினைவூட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

While speaking at a public meeting, at Salem, E.V.Ramasami Naiker said that they must settle the brahmin question while the British supremacy lasted; otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy.

"வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டு ஆட்சியில் இருக்கும்போதே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்; அவ்வாறு காணாவிட்டால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் மற்றவர்கள் அவதிப்பட நேரும்" என்றார் - இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன்.

இன்றைக்கு ஹிந்துத்துவா என்பதும், இந்து ராஷ்டிரம் என்பதும், ராமராஜ்ஜியம் என்பதும் அன்று பெரியார் சொன்னதுதானே!

இந்துத்துவா கோட்பாடு என்பது வருணாச்சிரமம் தானே? அன்று சம்பூகன் என்பவன் தவம் இருந்தான் - அவ்வாறு சூத்திரன் தவம் இருப்பது வருணாசிர மத்துக்கு எதிரானது என்று கூறி இராமன் அவனை வாளால் வெட்டினான். 

இன்று..... பாபர் மசூதியை இடிக்கவில்லையா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஆட்சி அதிகாரம் கொண்டு படுகொலை செய்ய வில்லையா?.

அந்த முதல் அமைச்சர் ஆளும் மாநிலத்தில் மனுதர்மம் பாடமாக வைக்கப்படுகிறது. பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில் நான்கு வருணத்தையும் நானே படைத்தேன் என்று கூறும் கிருஷ்ணனின் கீதை பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் அவர் களின் சித்தாந்தப் படியேதான் செயல்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் ‘Bunch of Thoughts’  என்ற அவர்களின் வேதப் புத்தகத்திலே கூறுவது என்ன?

நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம் இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள். இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதிகளை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவை நன்மை பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே வாழ்க்கைக்குக் கொண்டு வந்தது நாம்தான்!

அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர் களாகவே இருந்தனர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில் - நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்

(The origin of our People is unknown to scholors of history. In a way we are anadhi; without a beginning or we existed when there was no need of any name. We were the good, the enlightened people. We were the people who know about the laws of nature the laws of spirit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive name was given to us. Sometimes in trying to distinguish or people from others, we were called the enlightened - the Aryas - and the rest the melachas’.

-(From “Bunch of Thoughts”)

ஆரியர்கள்தான் பூர்வீகக் குடிகள் என்றும் ஆரியர் களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல் வால்கர் எழுதியுள்ளாரே!

வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக ஏற்றத்தாழ்வு அல்ல; பிற் காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார் தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும், அவரவர்கள் - சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்க லாம் என்பதுதான் இதன் தத்துவம்.

பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள்; சத்தி ரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள்; தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத் துக்கு சேவை செய்பவர்கள் சூத்தி ரர்கள். இந்த நான்குப் பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு; இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறை தான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

- என்கிறார் கோல்வால்கர் (Bunch of Thoughts) (8ஆவது அத்தியாயம் பக். 107, 108)

குருஜி கோல்வால்கர் வரையறுக்கப் பட்ட நமது தேசியம் (We or our nationhood defined) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

"ஹிந்துஸ்தானில் உள்ள ஹிந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண் டும். அவர்கள் தங்களை அயல்நாட்டி னராகக் கருதக் கூடாது. அப்படி இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை தராமல் குடிமக்கள் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோரு டைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஒடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். (ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் - தினமணி 16.10.2000)

நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந் தவர் - பார்ப்பனரை முன்னிறுத்தாமல் ஒரு பிற்படுத்தப் பட்டவரை முன்னிறுத்துகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?

ஆர்.எஸ்.எஸின் சிந்தனைக் கர்த்தா (Think Tank) என்று சொல்லப்பட்ட கோவிந்தாச்சார்யா அளித்த திட்டம் Social Engineering என்பது; பார்ப்பனத் தலைவர்களை நீக்கி பிற்படுத்தப்பட்ட வர்களைத் தலைவர்களாக நியமித்தது. அதன் விளைவே, உத்தரப்பிரதேசத்தில்   கல்நாத் மிஸ் ராவுக்குப் பதில் கல்யாண்சிங், மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, குஜராத்தில் நரேந்திர மோடி, பீகாரில் சுசில் மோடி முதலிய மாற்றங்களாகும்.

(ஏ.எஸ்.பன்னீர்செல்வம் - 

நக்கீரன் கட்டுரை - பக்கம் 161)

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி (தாழ்த்தப்பட்ட வர்) அகில இந்திய பா.ஜ.க. தலைவராக பங்காரு லட்சுமண் (தாழ்த்தப்பட்டவர்) அறிவிக்கப்பட்டதும் அந்த அடிப்படையில்தான்.

பிற்படுத்தப்பட்டவரான மோடி பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும்போது அவர் களின் வேலை இலகுவாகிவிட்டதே.

பார்ப்பனர்பற்றி மோடியின் அபிப் பிராயம் என்ன? இதோ ஓர் எடுத்துக் காட்டு.

Brahmins kept Indian culture alive

- NARENDRA MODI

(Daily news and analysis)

Brahmins are custodians of Indian culture and shastras. The brahmin community has helped & preserved Indian culture. If our culture is still thriving, it is because of brahmins. He said that social system can be created by two methods - by the gun or shastras.

(சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனத்தில் நரேந்திர மோடி)

இந்தியக் கலாச்சாரத்துக்குப் பார்ப்பனர்கள்தான் பாதுகாவலர்கள் என்கிறார். மோடியையும் சேர்த்துத் தான் சூத்திரன் என்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லையே!

தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார். நிஜப் புலியை விட வேஷம் கட்டிய புலி அதிகமாகக் குதிக்கும் (விடுதலை 21.5.1954) அந்த வகையைச் சேர்ந்த வர்தான் குஜராத் மோடி!

குஜராத்தை இந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமாகப் பயன்படுத்தி அதில் வெற்றி பெற்று விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பாணியை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவது என்பதுதான் அவர்களின் திட்டம்.

மோடி மாதிரி ‘முரட்டு' மனிதர் கிடைத்து விட்டால் அவர்கள் கெட்டிக்காரத் தனமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தானே செய்வார்கள்? அதுதானே இப் பொழுது நடக்கிறது.

குஜராத்தில் கிராமம் ஒன்றில் நுழை யும்போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழைகிறீர்கள் என்ற ஓர் அறிவிப்புப் பலகை வரவேற்கும்.

(சமநிலைச் சமுதாயம் - மே 2011 பக்கம் 62, 63)

(தொடரும்)

No comments:

Post a Comment