நிதி நிறுவன அதிபர்கள் மோசடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

நிதி நிறுவன அதிபர்கள் மோசடி!

சென்னை, நவ. 25 தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த நிதிநிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளன. 

அந்த வகையில் ஆரூத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் என்ற நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எல்.என்.எஸ். பன்னாட்டு நிதி சேவை என்ற நிறுவனம் போன்றவை முக்கியமானவை ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுமக் களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தருவோம் என்று கவர்ச்சிகரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.  பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர் களையும், பணியாளர்களையும் மேற் கண்ட நிறுவனங்கள் நியமித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி, பொது மக்களை கவரும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் அறிவித்தபடி, மாதந்தோறும் வட்டித் தொகையையும் மற்றும் முதலீட்டு தொகையையும் முறையாக திரும்பித் தரவில்லை என்று புகார்கள் வந்தன

புகார்களின் அடிப்படையில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.   இந்த நிறுவனம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப் படையில் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் செலுத்திய மொத்த முதலீட்டு தொகை சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி ஆகும்.  இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.   3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இதேபோல், எல்.என்.எஸ். பன் னாட்டு நிதி சேவை என்ற நிறுவனத்தில்  சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. முதலீட்டு தொகையாக மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பொது மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட தாகவும் தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மற்ற வர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்.  

அதேபோல், சென்னை கீழ்ப்பாக் கத்தில் செயல்பட்ட 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மீதும்  வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். 

4 ஆயிரத்து 500 பொது மக்களிடம் முதலீட்டு தொகை பெற்று, சுமார் ரூ.600 கோடி அளவுக்கு வசூல் நடந் திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத் தப்பட்டவர்களில் ஒருவர் கைது செய் யப்பட்டு இருக்கிறார்.மற்றவர்கள் தலை மறைவு குற்றவாளிகளாக உள்ளனர்.  

மேற்கண்ட 3 நிறுவனங்களில் முத லீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொது மக்கள் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் கொடுக் கலாம். இந்த 3 நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படை யில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப் பிரிவுக்கு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல், உறுதியாக இருப் பின் அவர்களுக்கு தக்க சன்மானம், ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசி யமாக வைக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment