10 சதவிகித இடஒதுக்கீடு: தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு: தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, நவ.9 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ் நாடு நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன் னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ‘‘சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்துக்கு ஏற்பட் டுள்ள பின்னடைவு'' என்று தி.மு.க. தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி யு.யு.லலித், ‘‘செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல்'' நீதிபதி ரவீந்திர பட்டின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாக தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. 

தி.மு.க.வை பொறுத்தவரை இந்த வழக் கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் ‘‘கேசவானந்த பாரதி'', ‘‘இந்திரா சகானி'' (மண்டல் ஆணைய தீர்ப்பு) உள்ளிட்ட வழக்குகளில் இந்த அமர்வைவிட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக் கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அர சமைப்புச் சட்டத் திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ள பொன்வரிகள் ஆகும்.

சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பதுபோல...

அரசமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள சமத்துவத்துக்கு எதிராக எந்த சட்டத் திருத் தங்களும் அமைந்து விடக்கூடாது என்பது தான் காலம், காலமாக கவனமாக நிலை நாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள். ஆனால், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படையான சமத் துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது. அதனால்தான், ‘‘இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னே றிய பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்ட மைப்பை மீறுகிறது'' என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டி தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் நீதிபதி ரவீந்திர பட், தனது தீர்ப்பின் தொடக்கத்திலேயே ‘‘நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறை யாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதி மன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்து கிறேன்'' என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். 

இறுதியில் ‘‘இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டமைப்பை தகர்க்கும் விதத்தில் உள்ளது'' என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக் கிறார். 

ஆகவே நாட்டில் உள்ள 82 சதவிகித தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத் தப்பட்ட இன மக்களின் சமூகநீதியை காப் பாற்றிட, அரசமைப்புச்  சட்டத்தின் அடிப் படை கட்டமைப்பை பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, சமூக நீதிக்காக தொன்று தொட்டுப் போராடி வரும் தி.மு.க.வின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment