ஹிந்தி திணிப்பு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ஹிந்தி திணிப்பு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,அக்.17- ஹிந்தியைத் திணிக் கும் முயற்சிகளைக் கைவிட்டு, ஒற்று மையை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பிரதமரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடா ளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் ஒர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், அய்அய்டி, அய்அய்எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதே போல, கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்டவற்றிலும் ஹிந்தி மொழியேபயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆள்சேர்ப்புக்கான தேர் வில், கட்டாயத் தாள்களில்ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய் யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நமது அரசமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை. நாட் டின் பன்மொழிக்கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இவை அமைந்து விடும். அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில், தமிழ் உள் ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள் ளன. இவை அனைத்தும் சம உரிமை யைக் கொண்டவை. ஹிந்தியாவில், ஹிந்தி பேசும் மக்களைவிட, பிற மொழிகள் பேசும் மக்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக அங்கீகரிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது. அனைத்து மாநில மொழிகளின் உரிமைகள், பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.

மக்களின் உணர்வுகளை மதித்து, மேனாள் பிரதமர் நேரு, ‘ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்’ என்று உறுதி யளித்தார். இந்த நிலைப்பாடு நீடிக்க வேண்டும். ஹிந்தியைத் திணிப்பதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்படும் முயற் சிகள் நாட்டை பிளவுபடுத்தும். மேலும், ஹிந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்கள்போல பிரித்தாளும் தன்மைகொண்டவை. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்துக்கும் ஏற்புடையதாக இருக் காது. அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்ட வேண்டும்.

‘ஒரே நாடு' என்ற பெயரில், ஹிந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற் கொள்வது, பல்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட ஹிந்திய மக்களின் சகோதரத்துவத் தைச் சிதைப்பதுடன், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என அஞ்சுகிறேன். தமிழ் உட்பட அனைத்து மொழி களையும் அலுவல் மொழியாக 8ஆவது அட்டவணையில் சேர்ப்பதும், அனைத்து மொழிகளையும் ஊக்குவிப் பதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பை வழங்குவதும் தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். பல்வேறு வழிகளில் ஹிந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல்மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு வின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லாமல், பெருமைவாய்ந்த ஹிந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும்.

-இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment