கோவில் பூட்டு, உண்டியல் உடைப்பு, நகை பறிபோனது
தருமபுரி, அக். 18- தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை அடுத்த எட்டியானூர் கிராமத்தில் பட்டணத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராமத்துக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்து உள்ளது. கடந்த 14.10.2022 அன்று காலை கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் பெண் கடவுளர் சிலையிலிருந்த தங்கத் தாலியும் மற்றும் இதர தங்க ஆபரணங்களும் என 5 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளாகத் திறக்கப்படாத கோவில் உண்டியல் காணாமல் போய் இருந்தது.
இதுகுறித்து பூசாரி அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கும் மற்றும் கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 14.10.2022 அன்று நள்ளிரவு திருடர்கள் கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்கு உள்ளே சென்ற தும் 5 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. மேலும் உண்டியலை பெயர்த்து எடுத்ததுடன் அதை உடைத்து ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணத்தை திருடிய பின்னர் உண்டியலை கோவில் அருகே முட்புதரில் வீசிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கோவிலில் நகை பணத்தை திருடிச் சென்ற திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்றால் காவல் துறையால் தான் முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
No comments:
Post a Comment