7 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தீண்டாமைச் சுவர் இடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

7 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தீண்டாமைச் சுவர் இடிப்பு

 திருவள்ளூர், அக். 4- திருவள்ளூர் அருகே கட்டப்பட்டிருந்த ஜாதித் தீண்டாமை சுவர் காவல்துறையினர் பாதுகாப்புடன் இடிக்கப் பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆரம் பாக்கம் அருகே தோக்கமூரில் சுமார் 100க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரவுபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்ட இந்த சுவரால் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ, கூலி வேலைக்கு அந்த வழியாக செல்லவோ முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த ஜாதி தீண்டாமை சுவரை இடித்து அகற்றுமாறு தாழ்த்தப்பட்ட சமூக மக்களும், அப்பகுதி யைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து இந்த சுவரை இடிப்பதற்காக அந்த கிராம மக்களிடையே பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங் களில் பல கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், அந்த தடுப்புச் சுவரை இடித்து அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று (3.10.2022) அதிகாலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர். அசம்பாவித நிகழ்வுகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment