சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.13 ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாண வர்கள் மனநலன் காக்கும் புதிய திட் டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில், கல்லூரி மாணவர்கள் மனநலன் காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) என்ற புதிய திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் அவர் மாணவர்களுக்கு 'மனம்' தூதுவருக்கான பதக்கத்தை அணிவித்தார். ஒன்றிய அரசின் 'லக் ஷயா' திட்டத்தின் கீழ் 161 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உத்தரவாத சான்றிதழ்களும் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியதாவது:- மனநல நல்லாதரவு மன்றத்தின் சுருக்கம் தான் 'மனம்'. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று (அதாவது நேற்று) (12.9.2022) முதல் தொடங்கப்பட்டுள்ளது. மனநலன் பாதுகாப்பு என்பது இன்றைய சூழ் நிலையில் அவசியமானது. குழந்தைகள் முதல் முதியோர் வரை மனஅழுத்தம் இல்லாதவர்கள் யாரும் இல்லை.

சாணிப் பவுடர் தற்கொலைகளை தடுப்பதற்கு அதன் காரணிகளை அழித்தாலே அதன் தாக்கம் பெருமளவு குறையும். மனஅழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கும் இளம் பெண்களில் 90 சதவீதம் பேர் சாணிப் பவுடரையே அதிகம் பயன்படுத்து கின்றனர். அதேபோல் எலி பாசனம், விவசாயிகளின் தேவைகளுக்கு பெரிதும் பயன்பட்டாலும் அதுவும் ஒரு உயிர்க் கொல்லியே. எனவே கடைகளில் உயிர்க்கொல்லி பொருட் களை வெளிப்படையாக வைத்து விற்க கூடாது. மறைத்து வைத்துதான் விற்க வேண்டும். எலி பாசனம் போன்றவற்றை வாங்க தனியாக வருபவர்களுக்கு அதனை விற்க கூடாது என்று வியாபாரி களுக்கு உத்தரவிட்டு, அதனை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். விரைவில் இது குறித்து அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. 

 நீட் தேர்வு மட்டுமில்லாமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் கூட தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 104 என்ற ஆலோசனை மய்யத்தின் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 564 மாணவர் களுக்கு மன அழுத்தம் இருப்பது தெரியவந்தது. அவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக தான் மாணவர்களுக்கு என இந்த 'மனம்' திட்டம் மருத்துவக் கல் லூரிகளில் முதலில் தொடங்கப்பட்டுள் ளது. இதன் மூலம் அந்தந்த மாண வர்களுக்கு கல்லூரிகளிலே பயிற்சி கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment