பெரியாரியம்தான் தமிழ்நாடு அரசியலை வழிநடத்துகிறது - சனாதன சக்திகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

பெரியாரியம்தான் தமிழ்நாடு அரசியலை வழிநடத்துகிறது - சனாதன சக்திகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!

பெரியாரியம்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியலின் மய்யமாக இருக்கிறது!

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரை

சென்னை செப்.14   பெரியாரியம்தான் தமிழ்நாடு அரசி யலை வழிநடத்துகிறது; பெரியாரியம்தான் சனாதன சக்திகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது; பெரியாரியம் தான் இங்கே ஒட்டுமொத்த அரசியலின் மய்யமாக இருக்கிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  அவர்கள்.

‘விடுதலை’ சந்தா வழங்கு விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை’ ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியாரின் நேரடி கவனத்தில் வளர்ந்த கருத்தியல் தலைவர்

பெரியாருக்குப் பிறகு பேரறிஞர் அண்ணா, அண்ணா விற்குப் பிறகு கலைஞர் என்று அந்த மகத்தான தலை வர்கள் இன்று  நம்மிடையே இல்லை. எஞ்சியிருக்கும் தலைவர், பெரியாரின் நேரடி கவனத்தில் வளர்ந்த கருத் தியல் தலைவர் - அய்யா தமிழர் தலைவர் அவர்கள், இன்னும் பல பத்தாண்டுகள் நீடூழி வாழவேண்டும்.

‘விடுதலை’யைத் தேடிப் படிக்கிற வழக்கம் திருமாவளவனுக்கும் உண்டு

‘விடுதலை' என்ற ஏடு அன்றைக்கு நிறுத்தப் பட்டு இருந்தால், பெரியார் அதை மூடியிருந்தால், என்னாகியிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். தோழர்கள் இங்கே சொன்ன தைப்போல, ஒவ்வொருவருக்கும் அந்த வரலாறு உண்டு. நூலகங்களுக்குப் போனால், ‘விடுத லை'யைத் தேடிப் படிக்கிற வழக்கம் திருமாவள வனுக்கும் உண்டு. பெரியார் திடலுக்கு வந்து தேடிப் படிக்கின்ற வழக்கம் எனக்கும் இருந்தது.

இந்தி எதிர்ப்பு மாநாடு திராவிடர் கழக மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெற்றபொழுது, அப்பொழுது அந்த மேடையில், தோழர் அருள்மொழி, நான் மற்றும் பல பேர் பேசியிருக்கின்றோம். அப்பொழுது நாங்கள் பேசிய பேச்சு, ஒரு முழு பக்கத்தில் வெளிவந்தது. பெரிய தலைப்பாகப் போட்டு - மாணவர்கள் சூளுரை என்று ‘விடுதலை'யில் செய்தி வந்திருந்தது - அதில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பதை எண்ணி அப் பொழுது  நான் பெருமைப்பட்டேன்; மகிழ்ச்சியடைந் தேன்.

இன்னும் சொல்லப்போனால், நான் பேசிய பேச்சு தான் தலைப்பாக இருந்தது. நாங்கள் இந்தப் போராட் டத்திற்காக ரத்தத்தையும், சதையையும் தர தயாராக இருக்கின்றோம். மாணவர்களாக இருக்கின்ற நாங்கள் இந்தித் திணிப்பைத் தடுப்பதற்கு நாங்கள் எத்தகையப் போராட்டத்திற்கும் தயாராக இருக்கின்றோம்; எங்களை வழிநடத்துங்கள் என்று 1987-1988  அந்தக் காலகட்டங் களில் நாங்கள் பேசிய அந்தப் பேச்சு ‘விடுதலை'யில் செய்தியாக வந்திருக்கிறது.

அதை ‘விடுதலை'யில் பார்த்தபொழுது, நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஆகவே, ‘விடுதலை’க்கும் எங்களுக்கும் அப்படிப் பட்ட ஒரு தொடர்பு. அய்யாவிற்கும், எங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு தொடர்பு.

சனாதன சக்திகளை எதிர்க்கின்ற 

ஒரு துணிச்சலைத் தருகிறது

அதுதான் எங்களுக்கும் ஓர் உந்துதலைத் தருகிறது; ஓர் ஊக்கத்தைத் தருகிறது; ஓர் ஆற்றலைத் தருகிறது;  எல்லாவற்றையும்விட சனாதன சக்திகளை எதிர்க்கின்ற ஒரு துணிச்சலைத் தருகிறது. அந்தத் துணிச்சலை நாங் கள் உங்களிடமிருந்துதான், உங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டோம்.

பதவி ஆசை இல்லாமல், தன்னலம் இல்லாமல், கருத்தியலுக்காக இன்றைக்கு ஓர் இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்றால், அது திராவிடர் கழகம்தான் என்பதை எண்ணி நாம் பெருமைப்படுகின்றோம். மற்ற வையெல்லாம் அரசியல் கட்சிகள், தேர்தல் கட்சிகள்.

தேர்தல் கட்சியில் ஒருவர் பொறுப்பில் இருக்கிறார் என்றால், ஏதோ ஒரு பதவியை, அரசியல் பதவியை எதிர்பார்க்கிறார் என்று நாம் கருதலாம். திராவிடர் கழகத்தில், இன்றைக்கு மேடையில் தளபதிகளை அமர வைத்து, தலைவர் எதிரே அமர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டபொழுது, நான் உள்ளபடியே சிலிர்ப் படைந்தேன்.

ஆற்றல் வாய்ந்த தளபதிகளை இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்

திராவிடர் கழகத்தின் தளபதிகளாக இருக்கின்ற வர்கள் யாரும், சட்டமன்ற உறுப்பினர்களாக அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்கிற ஆசை எதுவும் இல்லாமல், பெரியாரியலைப் பரப்பவேண்டும்; அதுவும் தமிழர் தலைவர் தலைமையில், அவருடைய ஆணையை ஏற்று, களப்பணி ஆற்றவேண்டும் என்கிற ஒன்றைத் தவிர, அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

அவர் கேட்கிறபொழுதெல்லாம், அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த தளபதிகளை இன்றைக்கு அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

60 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து, 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்ட வேண்டும்; இந்த ‘விடுதலை’யை மேலும் மேலும் உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்லவேண்டும்; அடுத்தடுத்த தலைமுறைக்கு அது சென்றடைய வேண்டும்; பரவலாக மக்களிடத்தில் போய்ச் சேரவேண்டும் என்பதற்கான ஒரு பெரும் பணி. அதைவிட ஒரு பெரிய வியப்பு - அவருக்கு 90 வயது. ஆனால், அவர் எடுத்திருக்கிற பணி - பிரம்மாண்டமான ஒரு செயல் திட்டம். 

பெரியார் உலகம் என்கிற 

மிகப்பெரிய ஒரு செயல்திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்

பெரியார் உலகம் என்கிற மிகப்பெரிய ஒரு செயல் திட்டத்தை - மாபெரும் ஒரு செயல் திட்டத்தை - ஒரு மகத்தான செயல் திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார். எப்படி அவர் சாதித்துக் காட்டப் போகிறார் என்பதை நினைத்தாலே நமக்கு வியப்பாக இருக்கிறது.

பல ஏக்கர் பரப்பளவில், பெரியார் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை, காலாகாலத்திற்கும் நிலைப்படுத்தக் கூடிய வகையில், அடுத்தடுத்து வரக் கூடிய தலைமுறையினர் அதைப் பார்த்து, உணர்ந்து கொள்ளக்கூடிய வகையிலே, பெரியார் உலகத்தை அவர் கட்டமைக்கப் போகிறார்.

இதெல்லாம் சாதாரணமான ஒரு செயல் அல்ல. ஏதோ ஒப்புக்கு ஒரு பத்திரிகையை நடத்துகின்றோம்; ஓர் இயக்கத்தை நடத்துகின்றோம்; 10 பேரை வைத்து ஓர் ஆப்பாட்டத்தை நடத்துகின்றோம் என்று எண் ணாமல், இந்தக் கருத்தியலை மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்; அடுத்தடுத்த தலைமுறைக் குப் போய்ச் சேரவேண்டும் என்கிற  தொலைநோக்குப் பார்வையும், பொறுப்புணர்வும், தலைமைப் பண்பின் மிகச் சிறந்த கூறுகள்.

பெரியாரியத்தைப்பற்றிப் பேசுகின்றோம்; 

சனாதன சக்திகளை எதிர்த்துப் பேசுகிறோம்

அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கின்ற அந்தப் பண்புதான், உண்மையான தலைமைப் பண்பு. ஆக, பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன; பெரியார் மறைந்து அரை நூற்றாண் டுகள் ஆன பிறகும், பெரியாரைப்பற்றி இன்றைக்கு நாம் பேசுகின்றோம்; பெரியாரியத்தைப்பற்றிப் பேசுகின்றோம்; சனாதன சக்திகளை எதிர்த்துப் பேசுகிறோம் என்றால், அரை நூற்றாண்டு காலமாக அந்த அனலை, அந்தக் கனலை அப்படியே அடைகாத்து வைத்திருக்கிற ஆற்றல், இன்றைக்குத் தமிழர் தலைவரிடத்திலே பார்க்க முடிகிறது. அவர் ஒருவர் சுற்றிச் சுழன்று பணியாற்று வதன்மூலம்தான், இன்றைக்குப் பெரியாரியம் என்பது உயிர்ப்போடு, எதிரிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தருவதாக இருக்கிறது.

அதுதான் அவர்களுக்கான சிக்கலே. தி.மு.க.வை எதிர்க்கிறார்கள் என்றால், வெறும் தி.மு.க. எதிர்ப்பு அல்ல. தேர்தல் கட்சி என்கிற அடிப்படையில் மட்டுமே அவர்கள் தி.மு.க.வைப் பார்க்கவில்லை. ஒரு சராசரி தேர்தல் கட்சியாக மட்டுமே தி.மு.க.வைப் 

பார்க்கவில்லை.

தி.மு.க. பெரியாரியம் என்ற நாற்றங்காலில் வளர்ந்த 

ஓர் இயக்கம்

தி.மு.க. பெரியாரியம் என்கிற தொட்டிலில் வளர்ந்த ஓர் இயக்கம். பெரியாரியம் என்ற நாற்றங் காலில் வளர்ந்த ஓர் இயக்கம். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள், ‘‘உங்கள் ராமன் எந்த என்ஜினியரிங் காலேஜில் படித்தான்?'' என்று கேள்வி எழுப்பக்கூடிய ஒரு துணிச்சலை அவர் பெற்றிருந்தார்.

அதனால்தான் கலைஞர், ‘‘நீ மிசா போட்டாலும் அதை எதிர்ப்பேன்; மாநில உரிமைகள் எமக்கு முக்கியம்'' என்று எதிர்க்கின்ற துணிச்சலைப் பெற்றார்; பெரியாரின் பிள்ளை என்பதினால்தான். இவையெல்லாம் பெரியாரிடம் இருந்து வந்தது.

பெரியார் நினைவு சமத்துவபுரம் என்கிற பெயரில், கலைஞரால் உருவாக்க முடிந்தது

அதனால்தான், எல்லா சமூகத்தினரும் ஜாதியைக் கடந்து ஒரு வாழிடத்திலே குடியிருக்கவேண்டும் என்கிற கனவுத் திட்டம் ஒன்றை, பெரியார் நினைவு சமத்துவபுரம் என்கிற பெயரில், கலைஞரால் உருவாக்க முடிந்தது. இந்தியாவில் எந்த முதலமைச்சரும் சிந்திக்காத ஒன்று. யாருக்கும் தோன்றாத ஒரு சிந்தனை. 

இந்தியா முழுவதும் அக்கிரகாரங்கள் தனியே இருக்கின்றன; இந்தியா முழுவதும் ஜாதி இந்துக்களின் குடியிருப்புகள் தனியே இருக்கின்றன. இந்தியா முழு வதும் பூர்வீக ஒடுக்கப்பட்ட குடிகளின் குடியிருப்புகள் தனியே இருக்கின்றன. இப்படி இந்த வாழிடங்களைப் பிரித்து கட்டமைத்து இருக்கிறது - சனாதன சமூகக் கட்டமைப்பில். 

அக்கிரகாரத்திற்குள்ளே ஜாதி இந்துக்கள் நுழைய முடியாது; குடியிருக்க முடியாது. உயர்ஜாதியினர் வசிக்கின்ற தெருக்களில் பிற சமூகத்தைச் சார்ந்த உழைக்கின்ற மக்கள் குடியிருக்க முடியாது.

இதற்கு என்ன செய்வது?

கலைஞர் - பெரியாரியத்தில் 

ஊறியவர் என்பதால் சிந்தித்தார்

எல்லோரும் கடந்து போனார்கள்; இப்படித்தான் என்று கடந்து போனார்கள்; இதுதான் சமூகம் என்று கடந்து போனார்கள். இதை மாற்ற முடியாதா? என்று சிந்தித்தார் கலைஞர் - பெரியாரின் பிள்ளை என்பதால் சிந்தித்தார் - பெரியாரியத்தில் ஊறியவர் என்பதால் சிந்தித்தார் - அதனால் தோன்றிய திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரம்.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பெரியார் இயக்கத்தின் தொடர்ச்சி என்பதினால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றைக்கும் அவர்கள் இலக்காக குறி வைத்து விமர்சிக்கிறார்கள்.

ஏன், அ.தி.மு.க.வை அந்த அளவிற்கு அவர்களால் விமர்சிக்க முடியவில்லை? அல்லது வேறு இயக்கங்களை அவர்கள் பெரிய அளவிலே இலக்காகக் கொள்ள வில்லை.

அது ஆட்சி அதிகாரத்திற்கு வருகிற இயக்கம் என்பதற்காக மட்டுமல்ல நண்பர்களே, பெரியாரியம் என்கிற கருத்தியலும்தான் அதற்குக் காரணம் - அதுதான் மிக முக்கியமானது.

ஆகவே, இங்கு பெரியாரியம்தான் தமிழ்நாடு அரசியலை வழிநடத்துகிறது.

பெரியாரியம்தான் சனாதன சக்திகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

பெரியாரியம்தான் இங்கே ஒட்டுமொத்த அரசியலின் மய்யமாக இருக்கிறது.

அதற்கு இப்பொழுது வேட்டு வைக்கவேண்டும் என்கிற திட்டத்தோடு குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள். எனவேதான், இன்னும் அதிகமான வீரியத்தோடு, நமக்குத் தமிழர் தலைவர் அவர்களின் செயற்பாடு தேவைப்படுகிறது. இன்னும் இன்னும் அதிகமான வீரியத்தோடு அவருடைய பங்களிப்பு நமக்குத் தேவைப்படுகிறது.

தமிழர் தலைவருக்கு நிகர் 

தமிழர் தலைவர்தான்!

இன்னும் பல பத்தாண்டுகள் அவர் இங்கே நம்மோடு வாழவேண்டும் - நம்மை வழிநடத்த வேண்டும் என்கிற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்துள்ளதாக நாம் கருதுகின்றோம்.

தமிழர் தலைவர் அவர்கள், உடனுக்குடன் நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில், அவருக்கு நிகர் அவர்தான்.

புதிதாக என்ன புத்தகங்கள் வெளிவருகின்றன, எதிரிகளின் தரப்பிலிருந்து. என்ன செய்துகொண்டி ருக்கிறார்கள்? பகை சக்திகள் என்பதை உட னுக்குடன் அறிந்துகொள்கிற, நவீன தொழில்நுட்பத் தின்மூலமாகவும் அறிந்துகொள்கின்ற ஆற்றல் பெற்ற ஒரு தலைமை - தமிழர் தலைவரின் தலைமை. உடனுக்குடன் அவருக்கு எதிர்வினை ஆற்றுகிற போர்க்குணம்.

ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தி, கடுமையான எச்சரிக்கையை விடுத்தவர் தமிழர் தலைவர்

தருமபுரியில் நடைபெற்ற சம்பவம் உங்களுக்குத் தெரியும். நாயக்கன் கொட்டாய் பகுதியில் மூன்று கிராமங்கள் குறி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட நேரத்தில், உடனடியாக அங்கேயே ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தி, கடுமையான எச்சரிக்கையை விடுத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அதைவிட, முக்கியமாக திருமாவளவன் ஜாதி ஒழிப்பு மாநாட்டில், தருமபுரியில் பேசுவார் என்று பிரகடனப்படுத்தினார்.

திருமாவளவனை அழைத்துச் சென்று, ஒரு நெருக் கடியை உண்டாக்கவேண்டும் என்று அவர் நினைக்க வில்லை. அந்த வன்முறையை செய்தவர்கள், திருமா வளவனைக் குறி வைக்கிறார்கள்; அந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிக்கிறார்கள்.

தமிழர் தலைவரின் துணிச்சல் - 

பெரியாரிடம் பெற்ற துணிச்சல்

அந்த இடத்தில், ஜாதி வெறியாட்டம் தாண்டவமாடிய இடத்தில், தலைவிரித்தாடிய இடத்தில், ஒரு சில வாரங் களுக்குள் ஜாதி ஒழிப்பு என்கிற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தி, அந்த மாநாட்டில், யாரை நீங்கள் குறி வைத்து விமர்சிக்கிறீர்களோ, அதே நபர் - திருமாவளவன் வந்து பேசுவார் என்று பிரகடனப்படுத்திய துணிச்சல் - அய்யா தமிழர் தலைவரின் துணிச்சல் - பெரியாரிடம் பெற்ற துணிச்சல்.

அதுபோலத்தான், அண்மையில் நடைபெற்ற  திருவாரூரில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு. திருவாரூரில் உள்ள தெற்கு வீதிக்குக் கலைஞர் பெயரைச் சூட்டவேண்டும் என்று அங்கே இருக்கிற நகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள், சனாதன சங்கிகள்.

கலைஞரின் பெயரை சூட்டக்கூடாது என்று. அதே வீதியில், அவர்கள் கூட்டிய கூட்டத்தை விட, ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் பங்கேற்ற பெருங்கூட்டத்தைக் கூட்டி, சனாதனிகளுக்கு எச்சரிக்கை விடுத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

சமூகநீதிக்கு ஆபத்து என்றால், 

சுட்டிக்காட்டத் தயங்கவாதவர்

எந்த இடத்தில் சங்கிகள் வாலாட்டுகிறார்களோ, அந்த இடத்திற்கே சென்று, அவர்களின் வாலை ஒட்ட நறுக்குகிற வலிமை கொண்டவராக இன்றைக்கு நம்மு டைய தமிழர் தலைவர் அவர்கள் விளங்குகிறார். அதுதான் அவருடைய தலைமைப் பண்புக்கான சிறப்பு.

உடனுக்குடன் எதிர்வினை ஆற்றுவது. கருத்தியல் பகைவர்களை அடையாளப்படுத்துவது, அம்பலப்படுத் துவது. சமூகநீதிக்கு ஆபத்து என்றால், உடனே போர் வாளைச் சுழற்றுவது. எவ்வளவுதான் நட்பாக இருந் தாலும், உறவாக இருந்தாலும், சமூகநீதிக்கு ஆபத்து என்றால், சுட்டிக்காட்டத் தயங்கவாதவர்; அதைச் சுட்டிக்காட்டுகின்ற துணிச்சலையும் பெற்றவர்.

திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும், நாகரிகத்தோடு சுட்டிக்காட்டக் கூடியவர்.

பெருந்தன்மை கொண்ட தலைமை, நாகரிகம் கொண்ட தலைமை-

தமிழர் தலைவரின் தலைமை

விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிற ‘தமிழ்மண்' இதழில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் ரவிக்குமார் அவர்கள் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அதில், தந்தை பெரியார்பற்றிய சில விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களைப் பார்த்தவுடன், பெரியாரிய சிந்தனையாளர்கள் சிலர் கொந்தளிப்புக்கு ஆளானார் கள். நான் பெரியார் திடலில் வளர்ந்தவன் என்று அவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ - என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள்; இயக்கத்திற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள். தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு, அவரை எழுதவேண்டாம் என்று சொல் லுங்கள் என்று சொல்லியிருந்தால்கூட, அது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரிந்திருக்காது. ஆனால், கடுமை யான விமர்சனங்கள். 

அந்த நேரத்திலும் நிதானம் தவறாமல், விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிக்காத, திருமாவளவனை விமர் சிக்காத பெருந்தன்மை கொண்ட தலைமை, நாகரிகம் கொண்ட தலைமை தமிழர் தலைவரின் தலைமை.

ஒரு நாள்கூட திராவிடர் கழகத்தின் தரப்பிலிருந்து அல்லது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களோ, அல்லது தமிழர் தலைவர் அவர்களோ, என்ன ‘தமிழ் மண்'ணில் எழுதுகிறீர்கள்? ஏன் எழுதுகிறீர்கள்? என்று கேட்ட தில்லை; விமர்சித்ததில்லை.

அவருக்குத் தெரியும், திருமாவளவன் யார்? திருமாவளவன் வளர்ப்பு எப்படி? திருமாவளவன் எந்த மண்ணிலிருந்து வளர்ந்தான் என்பது தெரியும்.

அம்பேத்கர் இருக்குமிடமெல்லாம் பெரியார் இருக்கவேண்டும்; பெரியார் இருக்குமிடமெல்லாம் அம்பேத்கர் இருக்கவேண்டும்!

நான் தொடக்கத்தில் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன், நான் அடித்த துண்டறிக் கைகளிலும், சுவரொட்டிகளிலும் மதுரை மண்ணிலே அம்பேத்கர், பெரியார் இருவரின் புகைப்படங்களை அச்சிட்டு நான் பரப்பினேன். அம்பேத்கர் இயக்கங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்தன. என்ன நீங்கள், அம்பேத்கர் படத்தோடு, பெரியார் படத்தைப் போடு கிறீர்கள்? என்று.

எனக்கு யாரும் இப்படி அச்சிடுங்கள் என்று சொல்ல வில்லை. அது எனக்குள் ஊறிய அரசியல் - நான் உள்வாங்கிய அரசியல்.

அம்பேத்கர் இருக்குமிடமெல்லாம் பெரியார் இருக்கவேண்டும்; பெரியார் இருக்குமிடமெல்லாம் அம்பேத்கர் இருக்கவேண்டும். இருவரும் நேர்க் கோட்டில் பயணம் செய்தவர்கள் - வயதில் முன்னே பின்னே இருப்பார்கள், அவ்வளவுதான். 

நேர்க்கோட்டில் பயணம் செய்தவர்கள் - ஓர் இலக்கை நோக்கிப் பயணம் செய்தவர்கள் - ஒற்றைக் குறிக்கோளை நோக்கி  தன் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட போராளிகள்.

அதனால்தான் இனம் இனத்தை அறியும் என்பதைப் போல, பெரியாரை அம்பேத்கர் அடையாளம் கண்டார். அம்பேத்கரை, பெரியார் அடையாளம் கண்டுகொண் டார்.

அப்படிப்பட்ட அந்த மாமனிதர்களின் கொள்கை களை உள்வாங்கிய ஓர் இயக்கமாக இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களத்திலே நிற்கிறது.

கருத்தியலால் எல்லோரையும் 

வென்றெடுக்கக் கூடிய ஆற்றல்

அந்தச் சூழலில், ‘தமிழ்மண்' இதழில் வந்த கட்டுரை உடனே நிறுத்தப்பட்டது. ஒரு நாளும், தமிழர் தலைவர் அவர்கள், ரவிக்குமார் அவர்களைப்பற்றியோ  அல்லது என்னைப்பற்றியோ எந்த இடத்திலும் காயப்படும்படி ஒரு சொல் சொன்னதில்லை. எல்லோரையும் அர வணைக்கக்கூடிய பெருந்தன்மை - பரந்த உள்ளம். கருத்தியலால் எல்லோரையும் வென்றெடுக்கக் கூடிய ஆற்றல்.

நம்முடைய கருத்தியல் பகைவர்களைத்தான்  குறி வைத்து வேலை செய்யவேண்டுமே தவிர, ஆதரவு சக்திகளை விமர்சித்து இழந்துவிடக் கூடாது என்கிற ஒரு புரிதல் - அதுதான் மிக முக்கியமானது.

சின்னச் சின்ன முரண்பாடுகளுக்காக விமர்சனம் என்கிற பெயரால், நம்முடைய நேச சக்திகளை, ஜன நாயக சக்திகளை ஆதரவு சக்திகளை இழந்துவிடக் கூடாது. 

இன்னொன்றையும் சொல்லி நான் என்னுரையை முடிக்க விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகள், தமிழ்நாட்டில் எல்லா இயக் கங்களும், காங்கிரஸ் உள்பட அத்துணை இயக்கங்களும் ஈழ விடுதலைப் போரை ஆதரித்துக் கொண்டிருந்த காலம் - யாரும் எதிர்ப்பு இல்லை 1991 ஆம் ஆண்டிற்கு முன்பு.

ஆக, எந்த இயக்கம் சரியாக இருக்கும் - எந்த இயக்கம் கடைசிவரையில் நிலைக்கும் - எந்த இயக் கத்தை ஆதரிக்கவேண்டும் என்கின்ற கணிப்பு தமிழர் தலைவரிடமிருந்தது என்பதற்கு ஒரு சான்று.

எம்.ஜி.ஆர். பிரபாகரனை அழைத்துப் பேசுகிறார்; கலைஞர் சிறீ சபாரத்தினத்தை அழைத்துப் பேசுகிறார். அங்கே அய்ந்துக்கு மேற்பட்ட இயக்கங்கள் விடுதலை இயக்கங்கள்.

யாரை ஆதரிப்பது? யாரை கைவிடுவது? போன்ற சூழல் உருவாகிய காலச் சூழல் அது.

அந்த நேரத்தில், விடுதலைப் புலிகளால்தான் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்கிற பார்வை - தமிழர் தலைவரிடத்தில் இருந்தது என்பதை அன்று மாணவனாக இருந்த என்னால் உணர முடிந்தது. அவர் அறிவித்த ஓர் இரயில் மறியல் போராட்டத்தில் நானும் ஒரு மாணவனாகப் பங்கேற்று, சைதை ரயில் நிலையத்தில் கைதாகி ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தேன். இரவு 7 மணிக்கு மேல் எங்களை விட் டார்கள்; அதன் பிறகு பெரியார் திடலுக்கு வந்து, தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து, நாங்களும் மாண வர்கள், இப்படி கைதானோம் என்று சொல்லிவிட்டு, நான் விடைபெற்ற நிகழ்வு என் வாழ்க்கையில் நிகழ்ந்தது.

அன்றைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மு.க.முத்து அவர்களின் குடும்பத் திருமண நிகழ்ச்சி ஒன்று எழும்பூரில் நடந்தது.

ரயில் மறியலில் கலந்துகொண்டவர்கள் வெறும் 5 மாணவர்கள்தான். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், ரயிலில் உள்ள கம்பியைப் பிடித்து இழுத்து, மறியல் செய்து, வண்டி நின்றதும், ரயிலுக்கு முன்னால் தண்ட வாளத்தில் அமர்ந்து, முழக்கங்களை எழுப்பியபோது, ரயில்வே காவல்துறையினரும், மற்ற காவல்துறையினரும் எங்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள்; பகல் முழுவதும் பல்லாவரம் பகுதியில் உட்கார வைத் திருந்தார்கள். இரவில்தான் விட்டார்கள்; பிறகு ரயில் ஏறி, பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அய்யா அவர்களைப் பார்த்துவிட்டுப் போனோம்.

பெரியார் திடலுக்கும், 

தமிழர் தலைவருக்கும், திருமாவளவனுக்கும் உள்ள உறவு ஒரு நீண்ட நெடிய உறவு!

ஆக, விடுதலைக்கும், பெரியார் திடலுக்கும், அய்யா தமிழர் தலைவருக்கும், திருமாவளவனுக்கும் உள்ள உறவு ஒரு நீண்ட நெடிய உறவு - அந்த உறவின்மூலம் கிடைத்த உணர்வு - அந்த உணர்வின்மூலம் கிடைத்த துணிவு - ஆகவேதான் உங்கள் பிள்ளைகளாக விடு தலைச் சிறுத்தைகள் இந்தக் களத்திலே நின்று, சனாதன சக்திகளுக்கு எதிராக உரத்து முழங்குகின்றோம்.

மூன்றாவது குழலாக இருந்து, இந்த மண்ணிலே தொடர்ந்து முழங்குவோம் - வெடிப்போம்!

எங்களுக்கு நீங்கள் தேவை - வழிகாட்டத் தேவை - தலைமைத் தாங்க தேவை. 

தேர்தல் அரசியல் எங்களுக்கு இரண்டாம் பட்சம்-

கருத்தியல் போர் முதலாவது பட்சம் - அதற்கு எப்பொழுதும் உங்கள் சொற்படி, மூன்றாவது குழலாக இருந்து, இந்த மண்ணிலே தொடர்ந்து முழங்குவோம் - வெடிப்போம் என்பதைச் சொல்லி, அய்யா அவர் களைப் பாராட்டி, வாய்ப்புக் நன்றி கூறி, என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment