தமிழ்நாட்டில் சனாதனம் வாலை ஆட்ட முடியவில்லை - காரணம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

தமிழ்நாட்டில் சனாதனம் வாலை ஆட்ட முடியவில்லை - காரணம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

திராவிட அரசியல் என்பது - பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல், 

ஆரிய எதிர்ப்பு அரசியல், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அரசியலே!

திருவாரூர் செப்.10  தி.மு.க.வும் - திராவிட தேசியம் பேச வில்லை; திராவிடர் கழகமும் திராவிட தேசியம் பேச வில்லை. திராவிட அரசியலைப் பேசுகின்றன.  திராவிட அரசியல் என்பது, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல். திராவிட அரசியல் என்பது ஆரிய எதிர்ப்பு அரசியல்; திராவிட அரசியல் என்பது பி.ஜே.பி எதிர்ப்பு அரசியல்; திராவிட அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு;  அர சியல் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடை பெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மோடியின் வித்தை  தமிழ்நாட்டில் எடுபடவில்லை!

தமிழ்நாட்டில் நாம் அனைவரும் இந்தி பேசக் கூடியவர்களாக இருந்திருப்போம்; வடமாநிலங்களிலே இந்த மாய்மால வித்தைகளைக் காட்டுகின்ற மோடி, தமிழ்நாட்டில் வந்து வாலாட்ட முடியில்லை, காரணம் இங்கே இந்தித் திணிக்கப்படவில்லை என்பதுதான். இந்தித் தடுக்கப்பட்டது என்பதுதான்.

ஒருவேளை உனக்கும், எனக்கும் இந்தி தெரிந் திருந்தால், மோடி வித்தைக்கு நாமும், மகுடிக்குப் பாம்பு ஆடுவதுபோல் ஆடியிருப்போம்; மயங்கி இருப்போம். இந்தியாவிலேயே இன்றைக்கு ஒரு தீவு போல இருப்பது - தமிழ்நாடுதான் - பக்கத்திலே கேரளாதான்.

தமிழ்நாட்டிற்குள்ளே அவர்களால் வாலாட்ட முடியவில்லை; காரணம், தந்தை பெரியார்!

எல்லா மாநிலங்களிலும் இந்தக் கும்பல், தம் விருப்பம் போல், தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக் கிறார்கள். தமிழ்நாட்டிற்குள்ளே அவர்களால் வாலாட்ட முடியவில்லை. அதற்குக் காரணம், பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

நான் கூட்டணிக்காக பேசவில்லை; இந்த மேடையில் நாம் பேசுவது, திருமாவளவன் பேச்சல்ல -  திருமா வளவன் பேசுவது முழுக்க முழுக்க பெரியாரின், அம் பேத்கரின் கருத்துகள். நான் இங்கே பேசுகிறேன் என் றால், இது என்னுடைய பேச்சே அல்ல. நான் ஒரு இன்டர்பிரட்டர் (மொழி பெயர்ப்பாளன்) விளக்கிச் சொல்லுகிறேன்.

கருத்துகளை எதிரொலிக்கிறோம் - பிரதிபலிக்கிறோம்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்ன பேசினாரோ - புரட்சியாளர் அம்பேத்கர் என்ன பேசி னாரோ - அந்தக்  கருத்துகளை எதிரொலிக்கிறோம் - பிரதிபலிக்கிறோம் -எடுத்துச் சொல்லுகிறோம் - விளக்கிச் சொல்லுகிறோம், அவ்வளவுதான்.

திருமாவளவன் பேசுவது பிழை என்றால், பெரியார் பிழை என்று பொருள்; எம் பிழையல்ல. திருமாவளவன் பேசியது சரியல்ல என்றால், அம்பேத்கர் பேசியது சரியல்ல என்று பொருள்.

அவர்கள் என்ன பேசினார்களோ, அதைத்தான் நாம் பேசுகிறோம்.

பெரியார் பேசியதை மிக அழகுத் தமிழில், அடுக்குத் தமிழில், அலங்காரத் தமிழில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், விளக்கிச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா.

யாகத்தால் பிரிட்டிஷ் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை; ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை!

நீங்கள் எல்லாம் யாகம் நடத்துகிறீர்கள், யாகம் நடத்தினால் நாட்டைக் காப்பாற்றலாம், உயிரைக் காப்பாற்றலாம் என்று சொல்லுகிறீர்கள், சனாதனிகளே - 24 மணிநேரமும் நீங்கள் யாகம் நடத்திக் கொண்டிருக் கும்பொழுதுதான் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிற்குள் வந்தான்; நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டான்.

ஏன், அந்த யாகத்தால் பிரிட்டிஷ் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை; ஆக்கிரமிப்பைத் தடுக்க முடிய வில்லை. ஒன்று, கடவுளுக்கு ஆற்றல் இல்லை என்று பொருள்; அல்லது கடவுளும் பிரிட்டிஷ்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டான் என்று பொருள்.

இதைச் சொன்னது, திருமாவளவன் இல்லை; கலைஞர் இல்லை. பேரறிஞர் அண்ணா சொன்னார். அண்ணா எப்படி சொன்னார் என்றால், பெரியார் சொன்னார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்ற ஒரு பேரியக்கம்!

இப்படி நாம் பேசுவதால், நாம் திராவிட இயக்கங் களுக்கு முட்டுக்கொடுக்கிறோம் என்று சில அற்பர்கள் பேசுகிறார்கள்.

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத கழகம். அதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்கிற கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து இயங்கக் கூடிய வல்லமை பெற்ற ஒரு பேரியக்கம்.

எவ்வளவோ பாதிப்புகள், எவ்வளவோ எதிர்ப்புகள், எவ்வளவோ சோதனைகள், எவ்வளவோ நெருக்கடி களை எல்லாம் கடந்து நிமிர்ந்து நிற்கும் ஓர் இயக்கமாக அது நிற்கின்றது.

பெரியார் காலத்திலிருந்து, ஏன், அண்ணா என்றைக் குத் தி.மு.க.வை உருவாக்கினாரோ, அன்றைய நாளி லிருந்து தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்று ஒரு கும்பல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அண்ணாவிற்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி னார்கள்,  தி.மு.க.வை வீழ்த்தப் பார்த்தார்கள், முடிய வில்லை.

இதோ நான் இருக்கிறேன் என்று தலைமை ஏற்றவர் தலைவர் கலைஞர்!

அண்ணா மறைந்தபொழுது, ஒழிந்தது இனிமேல் திராவிட அரசியலே தலைதூக்காது என்று நினைத் தார்கள்.

பெரியாரும் மறைந்தார், அண்ணாவும் மறைந்தார் இனி அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். அவர் களின் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு, நிமிர்ந்து நின்று, இதோ நான் இருக்கிறேன் என்று தலைமை ஏற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழ்நாடு அரசியலை தன் சுண்டுவிரலில் வைத் திருந்தார்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே யாருக்கும் இருந்திருக்க முடியாது!

கடுமையான அவதூறுகள் இந்திய அரசியல் வரலாற் றிலேயே, ஒரு தலைவருக்கு எதிரான அவதூறுகள் கலைஞருக்கு இருந்ததுபோன்று யாருக்கும் இருந்திருக்க முடியாது.

கலைஞருக்கு எதிரான அவதூறுகள், இந்திய அரசியல் வரலாற்றிலேயே இருந்திருக்காது. அவ்வளவுக் கடுமையான அவதூறுகள்.

கலைஞர் உள்வாங்கிக் கொண்ட பெரியார் சிந்தனைகள்தான் காரணம்!

அவர் இந்த இந்திய சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில், எந்தப் பெரும்பான்மை சமூக அடையாளத்தையும் கொண்டவர் அல்ல. ஜாதி அடையாளம் என்பதல்ல. அவருக்கு இருந்த ஒரே அடையாளம் பெரியார் அடை யாளம்தான். அவருக்கு இருந்த ஒரே அடையாளம் அண்ணா அடையாளம்தான். பெரியாரின் பிள்ளை, அண்ணாவின் தம்பி என்ற அடையாளம்தான்.

ஜாதி அடையாளம் அவருக்கானதாக இருந்திருந் தால், இங்கே பெரும்பான்மை சார்ந்த ஜாதி யார்? ஜாதி யைச் சார்ந்தவர்கள் அவரைத் தூக்கி எறிந்திருப்பார்கள். 

அவரைத் தூக்கி எறிய முடியாத அளவிற்கு, இந்த மண்ணிலே அவர் காலூன்றி நின்றதற்குக் காரணம், அவர் உள்வாங்கிக் கொண்ட பெரியார் சிந்தனைகள் தான்; அவர் எடுத்துப் பரப்பிய அண்ணாவின் சிந்தனைகள்தான்.

அது என்ன?

யாரும் முட்டுக் கொடுக்கக் கூடிய அளவிற்கு தி.மு.க. பலவீனமாக இல்லை!

அதைத்தான் நாம் இங்கே பேசவேண்டியது. விடுதலைச் சிறுத்தைகள் முட்டுக் கொடுக்கக் கூடிய அளவிற்கு தி.மு.க. பலவீனமாக இல்லை.

இடதுசாரிகள் முட்டுக் கொடுக்கக் கூடிய அளவிற்கு தி.மு.க. பலவீனமாக இல்லை.

நாங்கள் எல்லாம் கொள்கை சார்ந்து ஒரு களத்தில் கைகோத்து நிற்கின்றோம்.

பதவிகளைப்பற்றி கவலைப்படாமல், சனாதன சக்திகளை வீழ்த்தவேண்டுமானால், தி.மு.க. என்ற வலிமை பெற்ற ஒரு பேரியக்கத்தோடு, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து நின்றாக வேண்டும் என்ற தேவையை உணர்ந்து களத்திலே நிற்கின்றோம்.

பொறுப்பை உணர்ந்து கைகோத்து நிற்கின்றோம்!

பெரியாரை உணர்ந்துகொண்டதால், அண்ணாவை உணர்ந்துகொண்டதால், கலைஞரைப் புரிந்துகொண்ட தால், மார்க்சியத்தில் நமக்கு ஒரு பார்வை இருப்பதால், தெளிவு இருப்பதால், பாட்டாளி  வர்க்கத்தை ஒருங் கிணைக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்து கைகோத்து நிற்கின்றோம்.

ஒன்று ஆரிய மாடல் - இன்னொன்று திராவிட மாடல்!

‘திராவிட மாடல்' என்று சொல்லுவதற்குக் காரணம், இந்திய மண்ணில் இரண்டே இரண்டு இனம்தான் இருந்தன. இரண்டே இரண்டு இனத்தின் மாடல்கள்தான் உண்டு. ஒன்று ஆரிய மாடல் - இன்னொன்று திராவிட மாடல்.

ஆரிய மாடல் என்னவென்பதையும் தெரிந்து கொண்டால்தான், திராவிட மாடலைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆரிய மாடலைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சனாதனத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். சனாதனம் என்பதுதான் ஆரிய மாடல்.

சனாதனம் என்கிற இந்தச் சொல்லுக்கு அவர் சொல்லுகிற பொருள் வேறு.

பொதுவாக அகராதியில் சொல்லப்படுகிற பொருள் நிலையானது என்று பொருள்.

அடிப்படையில் அறிவியலுக்கு முரணானது சனாதனம்!

சனாதனம் என்ற சொல்லின் பொருள் - நிலையானது - மாறாதது - தொடக்கமில்லாதது - முடிவில்லாததது என்பதுதான்.

அப்படி இருந்தால் என்ன தவறு? என்று நீங்கள் கேட்கலாம்.

இது தவறுதான்.

இது அடிப்படையில் அறிவியலுக்கு முரணானதாகும்.

மாற்ற முடியும் என்பதுதான் திராவிட மாடல்!

எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் என்பதுதான் மார்க்சியம்.

எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான் விலங்கியல்.

எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான்  பவுத்தம்.

எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான் பெரியாரியம்.

எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் - மாற்ற முடியும் என்பதுதான் திராவிட மாடல்.

மாற்ற முடியும், மாற்றிக் காட்டுவோம் அதுதான் திராவிட மாடல்.

சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பதை சட்டமாக்கிக் காட்டியிருக்கிறோம்!

அய்யர் வந்துதான் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்பதை மாற்றிக் காட்டி, நீயே அய்யராக மாறி திருமணத்தை நடத்தலாம் என்பதை இந்த மண்ணிலே நிலைநாட்டி இருக்கிறோம்.

அவர்கள் சமஸ்கிருதத்திலே ஏதோ கடவுளிடம் பேசினால்தான் சொர்க்கம் கிடைக்கும் என்று எண்ணி யிருந்த நிலையையெல்லாம் மாற்றி, இன்றைக்கு சாதா ரணமான முறையிலே சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பதை சட்டமாக்கிக் காட்டியிருக்கிறோம்.

இதெல்லாம் மாறாது என்று சொல்லி வைத்தி ருந்தார்கள்; மாற்ற முடியாது என்று சொல்லி வைத்தி ருந்தார்கள்; இது கடவுளின் கட்டளை என்று சொல்லி வைத்திருந்தார்கள்.

அதை மாற்றிக் காட்டியிருக்கின்றோம்.

வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் சூத்திரர்கள் படிக்கக் கூடாது; சூத்திர வர்க்கத்திலும் சேராத பஞ்சமர்களும் படிக்கக் கூடாது. இவர்கள் உடலுழைப்பு மட்டுமே செய்யக்கூடியவர்கள். கல்விச் சாலைக்கோ, கோவிலுக்கோ போகக்கூடாது. இது மாறாது. இது இறைவன் கட்டளை - ஆண்டவன் கட்டளை.

இதை மாற்றிக் காட்டியது திராவிட மாடல்.

இந்தியா முழுவதும் திராவிட மாடல் உண்டு!

பள்ளிக்குப் போகலாம்; பல்கலைக் கழகத்திற்குப் போகலாம்; படிக்கலாம், ஆசிரியர்களாக ஆகலாம்; பேராசிரியர்களாக ஆகலாம்; வழக்குரைஞராகலாம்; நீதிபதியாகலாம், துணைவேந்தராகலாம், சட்டமன்ற உறுப்பினராகலாம், நாடாளுமன்ற உறுப்பினராகலாம், நாடாளுமன்றத்திற்குள்ளேயே போகலாம், உன் கோரிக்கையைப் பேசலாம்.

இதெல்லாம் இன்றைக்கு இந்தியா முழுவதும் நிகழ்கிறது என்றால், இந்தியா முழுவதும் திராவிட மாடல் உண்டு - தமிழ்நாட்டில் மட்டுமல்ல.

சனாதன எதிர்ப்பாளர் அவ்வளவு பேரும் திராவிடர்கள்தான்!

ஆரியர் அல்லாதவர்கள் இருக்கிற அமைப்புகள் அனைத்தும் திராவிட அமைப்புகள்தான்.

ஆரியர் அல்லாதவர்களின் ஆட்சி நிர்வாகம் அனைத்தும் திராவிட ஆட்சி நிர்வாகம்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கிற கருத்து திராவிட அரசியல்.

புரட்சியாளர் அம்பேத்கர் மராட்டிய மண்ணைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, அவர் சனாதனத்தை எதிர்த்துத்தான் போராடினார். சனாதன எதிர்ப்பாளர் அவ்வளவு பேரும் திராவிடர்கள்தான்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அல்லது தென்னிந்தி யாவில் இருப்பவர்கள் மட்டும்தான் திராவிடர்கள் என்று இல்லை. இந்திய வரலாறு என்பது வெறும் நூறாண்டு கால வரலாறு அல்ல; அல்லது 500 ஆண்டுகால வரலாறு அல்ல.

நாகர்கள் என்பவர்கள்தான் திராவிடர்கள்

திராவிடர்கள் நாகர்களாக இந்தியா முழுவதும் வாழ்ந்தார்கள். ஆரியர்கள் இங்கே வருவதற்கு முன்பு, இந்த மண்ணில் பூர்வீகக் குடிகளாக இருந்தவர்கள் அவ்வளவு பேரும் நாகர்கள் - நாகர்கள் என்பவர்கள்தான் திராவிடர்கள். திராவிடர்கள் என்பவர்கள்தான் இன் றைக்குத் தமிழர்களாக சுருங்கிப் போயிருக்கிறார்கள்.

தமிழர்கள்தான் ஒரு காலத்தில் திராவிடர்கள்; திரா விடர்கள்தான் ஒரு காலத்தில் நாகர்கள். நாகர்கள்தான் இந்தியா முழுவதும் வாழ்ந்த பூர்வீகக் குடிகள். இந்த வரலாற்றை யாரும் மறுக்க முடியாது - மறைக்க முடியாது.

ஆக, பார்ப்பனர்கள் என்கிற ஒரு மரபினமும், இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக இருந்த திராவிடர்கள் என்கின்ற  ஒரு மரபினமும் இந்த மண்ணில் இருந்தது. இரண்டே இரண்டு மரபினம்தான்.

தேசிய இனம் வேறு; மரபினம் வேறு.

திராவிட தேசிய இனம் என்று நாம் சொல்லவில்லை. திராவிட மரபினம். தமிழ்த் தேசிய இனம்.

இல்லாத ஒன்றை, அவர்களே கற்பனை செய்துகொண்டிருக்கின்றனர் சிலர்!

சில பேர் திராவிட தேசியம் என்று இல்லாத ஒன்றை, அவர்களே கற்பனை செய்துகொண்டு, திராவிடர் கழகம், திராவிட தேசியம் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது அடிமுட்டாள்தனம்.

திராவிட அரசியல் என்பது, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல்!

தி.மு.க.வும் திராவிட தேசியம் பேசவில்லை; திராவிடர் கழகமும் திராவிட தேசியம் பேசவில்லை. திராவிட அரசியலைப் பேசுகிறது.

திராவிட அரசியல் என்பது, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல். 

திராவிட அரசியல் என்பது ஆரிய எதிர்ப்பு அரசியல்

திராவிட அரசியல் என்பது பி.ஜே.பி எதிர்ப்பு அரசியல்

திராவிட அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு அரசியல்

அதற்குள் ஆட்டுக்குட்டிகளும் வந்துவிடுவார்கள். தனியே ஆட்டுக்குட்டிகளுக்குக் கல்லெடுத்து வீசவேண் டியதில்லை.

(தொடரும்)


No comments:

Post a Comment