திருவாரூர் மாவட்ட பி.ஜே.பி. தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மோசடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

திருவாரூர் மாவட்ட பி.ஜே.பி. தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மோசடி

பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் பாஸ்கர் உள்பட மூவர் கைது!

திருவாரூர், ஆக.14 திருவாரூரில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பாக பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு இரு நாள்கள் நடந்து வருகிறது. நேற்று (13.8.2022) மதியம் பி.ஏ. அரசியல் அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் சந்தேகத்தின் பேரில் தேர்வு எழுத வந்திருந்த ஒரு வாலிபருடைய ஹால் டிக்கெட்டை தேர்வு மய்ய அலுவலர் பரிசோதித்தார். 

அப்போது பாஸ்கர் என்பவர் பெயரில் ஆள் மாறாட்டமாக அவர் தேர்வு எழுது வதற்கு முயன்றது தெரியவந்தது. இதை யடுத்து தேர்வு மய்ய அதிகாரி உடனே அந்த வாலிபரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினார். 

மேலும் திருவாரூர் தாலுகா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காவலர்கள் கல்லூரிக்கு சென்று ஆள் மாறாட்டமாக தேர்வு எழுதிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் என்பதும், உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்பை முடித்து மாட்டிறைச்சிக் கடை வைத்து நடத்தி வருவதும், பி.ஏ. அரசியல் அறிவியல் தேர்வில், திருவாரூர் பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் பாஸ்கருக்குப் பதிலாக ஆள் மாறாட்டமாக அவர் தேர்வு எழுத முயன்றதும் தெரிய வந்தது. 

மூவர் கைது! 

மேலும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர் திருவாரூர் மாவட்டம் தோட்டச்சேரி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறை திவாகரன் மற்றும் பல்கலைக்கழகத்தின் படிப்பு மய்யத்தின் நிர்வாகியும், பா.ஜனதா கட்சி நிர்வாகியுமான ரமேஷ்குமார் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில், மூவரும் கைது செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment