திராவிடரும் - ஆரியரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

திராவிடரும் - ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... 

திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம். அதாவது ஆரியரல்லாத, தற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம். திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டுமென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோ, அல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள்; ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம், வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காக, என்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.

சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே

சூத்திரர் என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர். சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும், சாதிரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள். இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர். கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். ஆகவே, இது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்ல, பார்ப்பனர் கற்பித்ததுதான்.

திராவிடர் என்பது கற்பனையல்ல

திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்டதல்ல. ஆரியர் என்ற பெயரும் அப்படித்தான்  என்று, மக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப, அமைந்திருந்த அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனரோ, அன்று இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட பெயர்தான் திராவிடர், ஆரியர் எனப்படும் பெயர்கள், இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும், நீக்ரோக்கள் என்பதும். உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடுமுரடான மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்தனர். நல்ல குளிர்ப் பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர். அதற்கடுத்தாற்போல் சற்று குட்டையாகவும் சப்பை மூக்குடனும் சீனா, ஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர். இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.

பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி பிறப்பு வேறுபாடல்ல

ஆகவே, அன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார்களேயொழிய, ஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோ, மற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன், காதிலிருந்து வந்தவன், மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லை. இதை நான் பேர் ஊர் தெரியாத எவனோ, மாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாதிரங்களைப் பார்த்தோ, வேதங்களைப் பார்த்தோ கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சி நிபுணர்களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதும், அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகமாக இருந்து வருவதும், அசல் ஆரியப் பார்ப்பனர்களால் எழுதப்பட்டிருப்பதுமான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.

பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை

என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம் என்று யாராவது இன்று ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பாரானால், அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமா? எவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம். அவன் மைலாப்பூர் பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட்டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம். அதிலிருந்து பார்ப்பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான். அதுக்கேன் போப்போறீங்க. அவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும் என்றே கூறியிருப்பான். அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.

யார் என்ன கூறியிருந்தாலும் சரியே. நான் கேட்கிறேன், பண்டிதர்கள், பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.

இந்தியா, இந்து இன்று வந்த பெயர்கள்

இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும், சூத்திரர் என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 


No comments:

Post a Comment