புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

புரட்சிக் கவிஞர் தான் கூறினார்: நன்கு ஆழ்ந்து கேட்டார். அதன்பிறகு "உன் முடிவு சரியானதுதான்; பிரெஞ்ச் மொழி இருக்கிறதே - அது இலக்கியத்தில் மிகுந்த மொழி மட்டுமல்ல... உலக சமாதான உடன்படிக்கைகளில் அந்த நாளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் மொழிதான் - அவரவர்கள் மொழியில் இருந்தாலும்கூட. காரணம் அந்த மொழியில் பல மாற்றப்பட முடியாததாக இருக்கும் வசதியை அது உள்ளடக்கியது; அஃறிணைப் பொருள் என்று நாம் அழைக்கும் கட்டில், மேஜை போன்றவைகள் ஒவ்வொன்றையும் ஆண் பாலா, பெண் பாலா எனப் பகுத்துப் பார்த்து பெயர் வைத்துப் புழங்கும் மொழி" என்று அதன் பெருமையை, முக்கியத்தை, அதனைக் கற்று, அறிவை பெறுவதின் தேவையை எனக்கு சில மணித்துளிகள் பாடம் எடுப்பதைப்போல் சொல்லியதோடு,

"நீ உன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் தமிழைவிட, கழகத்தினரால், நம்ம ஏடுகள், நம்ம பேச்சாளர்கள், எழுத்தாளர்களால் அறிந்து கற்கும் தமிழ் கூடுதலாக - "தூக்கலானது" (இது அவர் மொழி). எனவே நீ தமிழ் வகுப்புக்குப் போய்தான் அதனைக் கற்று வரப்போவதில்லை - அதிகம் தானே கற்றுக் கொள்ள முடியும். அதனால் நீ பிரெஞ்ச் எடுத்துப்படி - புதுச்சேரியில் இருந்து வரும் அந்த பிரெஞ்ச் வாத்தியார் அபெல் குளோவியை எனக்குத் தெரியும்; நானும் அவரைப் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர என்னை மிகவும் ஊக்கப்படுத்தி சேரச் சொன்னார்!

சிறிதும் தயக்கமின்றி நான் பிரெஞ்ச் வகுப்பில் அந்த வாரமே சேர்ந்து, பாட புத்தகங்களைப் பெற்று படிக்கத் துவங்கி விட்டேன்.

என் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாக, எவ்வளவு பெரிய மேதையிடமிருந்து, தமிழ்ப் பெய்த தனிப்பெரும் இமயப் புலவரிடமிருந்து கிடைத்தது என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

மற்றொரு செய்தி. புரட்சிக் கவிஞருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. பிரெஞ்ச் முப்பட்டை வண்ணம் போட்ட நேஷனல் சிக ரெட்டு தான் பிடிப்பார்; ‘நேசுனால்‘ என்ற பிரெஞ்ச் உச்சரிப்பை அவர் கூறுவார்.

கடலூர் வந்து தோழர் பி.ஏ.இளங்கோவன் சக்தி சீயக்காய் தொழிற்சாலையில் தங்கும்போது அவரிடம் பேச, பழக, விருந்தில் கலந்துகொள்ள ஒரு பெரிய “ஜமாவே‘ சேர்ந்து விடும்!

இறைச்சி உணவு, மீன், நண்டு, கோழி - இவைகள் எல்லாம்  விருந்து இலைகளில் அணி வகுத்து அடுத்தடுத்து வரும்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால் அதனையும் தோழர் இளங்கோ நன்றாக (உயர்வகை) ஏற்பாடு செய்து, பக்கவாத்தியங்களும் இருக்கும். என்னைப் போன்றவர்கள் கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்று அல்லது உணவுப் பந்தி வரிசையில் தள்ளி அமர்ந்து உண்போம்.

எவ்வளவு அருந்தினாலும் நிலை தடுமாற்றறமோ, அதிகமான குரல் உயர்த்தியோ, சில ‘குடிமக்கள்' உளறுவதைப்போல எதையுமே அவரிடம் காணவே முடியாது. கண்டதில்லை - அமைதி, புலால் உணவை சுவைத்துச் சுவைத்து நிதானமாக, பொறுமையாகச் சாப்பிடுவார்.

ஆங்கிலத்தில் "Mindfulness" (எதைச் செய்தாலும் அதிலேயே லயித்து ஈடுபாடு கொண்டு செய்வது) - (புத்தரின் அறிவுரைகளில் இதுவே முதன்மை) மனதை முழுமையாக அதற்கே அப்போது கொடுத்ததில் - வேறு கவனச் சிதறல் இல்லாத நிலை - அப்படியே உண்ணுவார் - அளவறிந்தே எல்லாம்!

பரிமாறிய ஒரு நண்பர் - அவரை ‘நாயிடு நாயிடு' என்றே தோழர்கள் கூப்பிடுவார்கள். அவர் மதுவைக் கூடுதலாக அருந்தி விட்டு, கவிஞருக்குப் பரிமாற தட்டை எடுத்து, இலையில்  உணவு வகைகளைப் போடத் துவங்க, ‘போதும்' என்றார் மெதுவாகக் கவிஞர். அவரோ "இல்லிங்கோ - இன்னும் கொஞ்சம்" என்று இளித்தபடி தள்ளாடி மேலும் எடுத்து வைக்க முனைந்தார். 

"ஏய், போதுன்னேன், போதுன்னேன், என்ன பரிவு என் மேலே? அறைவேன், அறைவேன் தெரியுமா?" என்று எச்சில் கையோடு குரலை உயர்த்திக் கூறினார். அவர் - அத்தனை பேரும் நடுங்கிவிட்டனர் - அவரை (நாயுடுவை) மற்றவர் அழைத்துச் சென்றனர். "ஏம்பா இவன் சாதாரண நேரத்தில் இப்படி உபசரிப்பானா? அவன் மேலே தப்பில்லை; அது பேசுகிறது அய்யா!" என்று தலை யில் அடித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார். 

- (தொடரும்)


No comments:

Post a Comment