இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி

சென்னை, ஜூன் 20  இந்தி வந்தால் நம் வரலாறும், பண் பாடும் அழிந்துபோகும் என்றார்  திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தினுடைய  தொடர் முயற்சிகள்

இந்தி எதிர்ப்பு மாநாடு என்பதும், தொடர்ச்சியாக இந்தியைத் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல், ஆட்சி, அதிகாரம் இவற்றைப் பயன்படுத்தி, ஊடுருவல் செய் கின்ற வடநாட்டு ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போரா டுகிற திராவிடர் கழகத்தினுடைய தொடர் முயற்சிகள், எப்போதெல்லாம் இந்த வேலையில் டில்லி அரசு தீவிர மாக இறங்குகிறதோ, அப்போதெல்லாம் அதைவிட தீவிரமாக, அதை எதிர்த்து நின்று முறியடிக்கின்ற பணியை செய்து வருகின்றது.

அதனுடைய இந்தக் காலகட்டத்தின் மிக அவசிய மான தொடக்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

எப்போதும் திராவிடர் கழகத்தினுடைய போராட்ட அணுகுமுறை என்பது - கிளர்ச்சி - பிரச்சாரம் - கிளர்ச்சி இவை மாறி மாறி வரும்.

இந்தி அழிப்புப் போராட்டம்

பிரச்சாரம் முதலில் நடக்கும். தொடர்ந்து கிளர்ச்சி நடக்கும். ஆனால், இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே, இந்தி அழிப்புப் போராட்டத்தை நடத்தி, தமிழர் தலைவர் உள்பட ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டு, அந்தப் போராட்டத்தை சென்ற மாதம் தமிழ்நாடு மிக ஒரு அதிர்வோடு பதிய வைத்திருக்கிறது.

இந்தப் போராட்டம் ஏன் நடக்கிறது என்பதற்குப் பதில், ஏன் இந்தித் திணிக்கப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன்னால், இந்த நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு நோக்கம் இருந்தது.

காங்கிரஸ் இயக்கம் விடுதலைக்காகப் போராடியது.

கம்யூனிஸ்ட் இயக்கம் பெறுகிற விடுதலை வர்க்க பேதம் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்கும் என்று நம்பியது.

ஆர்.எஸ்.எஸ். கட்சியோ, விடுதலை பெறுகின்ற இந்தியா, இந்துராஷ்டிரமாக இருக்கவேண்டும் என்று நினைத்தது.

சுயமரியாதையைப் பெறவேண்டும்  என்பதே குறிக்கோள்

ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்தியா விற்கு சுதந்திரம் வருகிறதோ, இல்லையோ - இந்திய மக்கள் சமத்துவத்தை அடையவேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்; தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை, வேலை வாய்ப்பை, சுயமரியாதையைப் பெறவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு, தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்திய தேசிய இயக்கமாக நடந்த காங்கிரஸ் கட்சியிலும், அதற்கு எதிர்க்கட்சியாக தன்னை நினைத்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சினுடய அமைப் பிலும் - இருந்த பார்ப்பனர்கள் - இரண்டு கட்சியிலும் இருந்த பார்ப்பனர்கள் - இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், இந்திதான் இந்தியாவினுடைய பொது மொழி - தேசிய மொழி - ஆட்சி மொழி என்று ஆக்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

இந்தியாவின் பெரிய தலைவர்களாக, நாம் அறிந்த தலைவர்கள் அத்துணைப் பேரும் வலிமையான இந்தியா இருக்கவேண்டும் என்றால், இந்தியாவிற்கு ஒரு ஆட்சி மொழி - பொது மொழி வேண்டும் - அது இந்தி மொழியாகத்தான் இருக்க முடியும் என்று பார்ப்பனர் களுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலே, அவர்களுடைய முயற்சி நடந்தது. அதற்கு ஆதரவாக, தென்னிந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியை ராஜாஜி ஆட்சி செய்தார். அதைவிட பொற்காலம் அவர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்?

ராஜாஜியின் முயற்சியை முறியடித்தார் தந்தை பெரியார்

வெள்ளைக்காரன் போவதற்கு முன்னாலேயே, தென்னிந்தியாவில் இந்தியை ஆட்சிமொழியாக்கிவிட வேண்டும் என்று ஆச்சாரியார் முயற்சி செய்தார்.

அதை, அன்று படை நடத்தி, இந்தி எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி, மிகப்பெரிய மாநாடு கூட்டி, மாபெரும் தமிழ் அறிஞர்களை அதில் தலைமை ஏற்கச் செய்து, முன்னிலைப்படுத்தி, ராஜாஜியின் முயற்சியை முறியடித்தார் தந்தை பெரியார்.

அது நடந்தது 1938 களில்.

இன்னும் ஒரு பத்து, பனிரெண்டு ஆண்டுகள் சென்றுவிட்டால், ஒரு நூற்றாண்டாக அவர்கள் இந்த முயற்சியை செய்கிறார்கள். ஒரு நூற்றாண்டாக நாம் அதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏன் அவர்கள் இந்தியை முன்வைக்கிறார்கள்?

இந்தியாவிலே எத்தனையோ மொழிகள் இருக்கின் றன; இந்தி ஏன் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது?

இந்திதான் தேசிய மொழி என்று சொல்லுகிற எல்லோ ருக்கும் தெரியும் இந்தி அப்படியொன்றும் பெரிய இலக்கிய மொழி அல்ல.

அதில் பெரிய காவியங்கள் எதுவும் மிகப்பெரியதாக தமிழ் இலக்கியம்போலவோ, வங்காள இலக்கியம் போலவோ இல்லை.

ஆனாலும், ஏன் இந்தி வேண்டும்? ஏன் இந்தி வேண்டாம்? அவ்வளவுதான் என்னுடைய உரை.

இந்தி மொழிக்கும் - சமஸ்கிருத மொழிக்கும் எழுத்து கிடையாது!

ஏன் அவர்களுக்கு இந்தி வேண்டும் என்றால், இந்தி தான் சமஸ்கிருதத்திற்கான முன்னோட்டம். குரங்கினு டைய குட்டி போன்று-கங்காருவினுடைய குட்டி போன்று.

இன்னும் சொல்லப்போனால், அந்த இரண்டு மொழி களுக்கும் எழுத்து கிடையாது. இரண்டுமே இரவல் எழுத்தைப் பயன்படுத்துகிற, தேவநகரி எழுத்தைப் பயன்படுத்துகிற மொழிகள்.

ஆகவே, இந்தியினுடைய தேவநகரி எழுத்தைப் படித்துவிட்டால், சமஸ்கிருதத்தை நம்முடைய மூளை யில் திணிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அவ்வளவுதான் இந்தி ரகசியம்.

தந்தை பெரியார் அவர்கள் ஏன் இந்தி வேண்டாம் என்று சொல்லுகிறோம் என்பதற்கு இரண்டு காரணங் களை சொன்னார்கள்.

எங்களுடைய வரலாறும், பண்பாடும் அழிந்து போகும்

ஒன்று, 

நாங்கள் படிக்கத் தொடங்கினால், அரசாங்கம் அதனை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொண்டால்,  நீங்கள் இந்தியா முழுக்க ஒரே தேர்வை - அதை இந்தியில் நடத்துவீர்கள்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனோடு, நாங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்படுவோம். எங்களுடைய வரலாறும், பண்பாடும் அழிந்து போகும்.

இது ஒரு காரணம்.

ஏன் உங்களால் முடியாது என்று கேட்டபொழுது,

தந்தை பெரியார் சொன்னார்,

அந்த மொழிக்கும், எங்கள் மொழிக்கும் தொடர்பு இல்லை. எங்களால் அதைப் படிக்க முடியாது என்று சொன்னார்.

வராததை வரும் என்று சொல்வதற்குத்தான் வெட்கப்படவேண்டும்

அப்பொழுது அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள், இந்தி படிக்க வராது என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பேசுகிறார்.

அதற்குப் பதில் தந்தை பெரியார் அவர்கள் சொன் னார், ''எனக்குப் படிக்க வராது, வராது என்று சொல்வதற்கு எதற்கு வெட்கப்படவேண்டும். வராததை வரும் என்று சொல்வதற்குத்தான் வெட்கப்படவேண்டும்.

எனக்குப் படிக்க வராது, எங்கள் மொழி வேறு, அந்த மொழி வேறு'' என்று அன்றைக்கு அய்யா அவர்கள் சொன்னது, இன்றைக்கு வரை பொருத்தமானது.

ஏன், மலையாளத்தவர்கள் படிப்பார்களே, தெலுங் கர்கள் படிப்பார்களே, கன்னடர்கள் படிப்பார்களே, உங்களால் படிக்க முடியாதா என்று கேட்டால், முடியாது.

அவர்களால் எப்படி படிக்க முடியும் என்றால், அந்த மொழிகள் எல்லாம் தமிழும், சமஸ்கிருதமும் கலந்து, பிரிந்து உருவான மொழிகள். எல்லா மொழிகளிலும் தமிழ்ப் பாதி - சமஸ்கிருதம் பாதி.

ஆகவே, அவர்களுக்கு சமஸ்கிருதம் படிப்பதோ, இந்தி படிப்பதோ புதிதாக இருக்காது.

இந்தி மொழி நமக்கு இயல்பானதல்ல

ஆனால், அந்த வாடையே படாத தூய்மையான தனக்கென்று ஒரு வரலாற்றைக் கொண்ட மொழி தமிழ் மொழி. நாம் அதைப் பேசி படித்து வளர்ந்தவர்கள்.

ஆகவே, நமக்கு அந்த மொழி இயல்பானது அல்ல. 

தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் நான்கு வகைச் சொற்களை சொல்கிறார்கள். தொல்காப்பியம் சொல்கிறது.

நான்கு வகையான சொற்கள்!

ஒரு சொல், எப்படி என்றால்,

இயற்சொல், திசைச் சொல், திரிசொல், வடசொல்

நான்கு வகையான சொற்கள் நம்முடைய வாயில் புழங்குகின்றன.

ஒன்று, இயற்சொல்

இரண்டாவது திசைச் சொல்

மூன்றாவது திரிசொல்

நான்காவது வடசொல்

இது எப்பொழுது உள்ளே வந்ததோ, அப்பொழுதே வடக்கு ஆகாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதற்குத்தான் இலக்கணம். அப்படிப்பட்ட வரலாறு அன்றைக்கு இருந்து தொடங்குகிறது.

இனி மிக ஆபத்தான காலத்தை நாம் எதிர்கொள் கிறோம். ஏனென்றால் இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்கிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஹிட்லரை தங்கள் முன்னுதாரணமாகக் கொண்டவர்கள்.

இவர்களுடைய குரு, காந்தியைக் கொலை செய்த கோட்சே!

உலகத்தில் நல்லவர்கள் என்று பட்டியல் வைத்தால், அந்தப் பட்டியலுக்குப் பக்கத்தில்கூட வரக்கூடாத ஒரு ஆபத்தான மனிதன். அந்த ஹிட்லரை தங்களுடைய முன்னோடியாகக் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்கள் கும்பிடுகிற  இவர்களுடைய குரு, காந்தி யைக் கொலை செய்த கோட்சே! நல்லவர்களுக்கும், அவர்களுக்கும் தொடர்பே கிடையாது.

மனித உரிமைப்பற்றி, மக்களைப்பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. 

அவர்களுடைய கவலை மாடுகளைப்பற்றியது; அதிலும் பசு மாடு பற்றியது.

அதற்காக மனிதனைக் கொல்லலாம் என்கிற தத் துவத்தைக் கொண்டவர்கள். தங்களுடைய வடநாட்டு ஆதிக்கத்தை வடவர் ஆதிக்கத்தை தமிழ்நாட்டிலே நடத்திக் காட்டுவதற்கு அவர்களுக்கு இந்தி என்பது ஒரு பெரிய ஆயுதம் - அரசியல்.

எச்சரிக்கை ஒலியை எழுப்புவதுதான் இந்த மாநாட்டினுடைய நோக்கம்

எனவேதான், இந்தக் கட்டத்தில் நாம் ஏமாந்தால், நம்முடைய அடுத்த தலைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை சந்திக்கும் என்கிற எச்சரிக்கை ஒலியை எழுப்புவதுதான் இந்த மாநாட்டினுடைய நோக்கம்.

இத்தனை ஆண்டுகள் போராடியதும், காப்பாற்றி யதும் பெரிதல்ல. இந்தக் காலகட்டத்தில் நம்முடைய மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதும், ஒன்றிய அரசுக்கு நம்முடைய எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிப்பதும்தான் காலத்தின் தேவை!

அந்தத் தேவையை நிறைவேற்றத்தான் இந்த மாநாடு என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள்  சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment