சென்னை, ஜூன் 16- தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் கைதிகள் மரணம் அடைவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட வரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும். காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவை யான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவ மனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும். உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்தி கொள்ள வேண்டும்.
காவல்நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது காவல்துறை சித்ரவதை பற்றிய தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் வலிப்பு நோய் தொடர்பான வரலாறு குறித்து முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும். சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும்போது, அவரை நிகழ்வு இடத்தில் இருந்து நேரடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை காவல்துறை நிலையத்திற்குள் கொண்டு வரவோ அல்லது காவல்துறை காவலில் எடுக்கவோ கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக காவல்நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரக்கூடாது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை சரியாக வேலை செய்கிறதா என உறுதி செய்ய வேண்டும்”. -இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment