‘திராவிட மாடல்’ ஆட்சியை எதிர்ப்போம்; ஆட்சியைக் கவிழ்ப்போம் என்கிறார் ஒருவர் புரியாமல் -
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் இரும்புக்கோட்டை - இதில் மோதினால் அவர்களின் மண்டைதான் உடையும்!
செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை
செஞ்சி, ஜூன் 25 திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப் போம்; ஆட்சியை நாங்கள் கவிழ்த்துவிடுவோம் என்கிறார் ஒருவர். எந்தக் கொம்பனாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. இது ஓர் இரும்புக் கோட்டை - செஞ்சிக்கோட்டையிலிருந்து சொல்கிறேன் - இது இரும்புக்கோட்டை - இதில் யாரா வது மோதினால், அவர்களுடைய மண்டைதான் உடையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு
கடந்த 19.6.2022 அன்று மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற் றினார்.
அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சனாதன தர்மம் என்று சொல்கிறார்களே, அப்படி சொல்லும்பொழுதே, அது நமக்கு சம்பந்தப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரியும்.
தந்தை பெரியார்தான் மிக அழகாக சொன்னார், நீ எதையாவது அடையாளம் காணவேண்டும் என்றால், அந்தப் பெயரைப் பார் என்பார். எப்பொழுதும் அவர் மிக எளிமையாக சொல்லிக் கொடுப்பார் அந்தப் பாடத்தை.
ஒரு பண்டிகையின் பெயரா? அந்தப் பண்டிகை நம்முடைய பண்டிகையா? பிறருக்குக்கு உரியதா? இறக்குமதி செய்யப்பட்டதா? நமக்கு சொந்தமா? என்று கேட்டால்,
தீபாவளி - ஆயுதப் பூஜை, இராமநவமி, அட்சய திருதியை என்று சொன்னால், வாயில் நுழையாது. அதன்படியே, அது நமக்கு சம்பந்தமில்லை. தமிழுக்கும், தமிழருக்கும், திராவிடருக்கும் சம்பந்தமில்லை என்ப தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பொங்கல், திருநாள் என்றால், மிகத் தெளிவாகத் தெரியும், அது நம்முடையது என்று. மிகச் சுருக்கமான அடையாளம் இது. இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.
அதுபோன்று வரும்பொழுது, ஆத்மா என்ற சொல்லை, ஆன்மா என்று ஆக்கினார்கள் நம்முடைய புலவர்கள்.
மன்னிப்பதற்குத் தயாராக இல்லை என்றார் பெரியார்!
பெரியார்தான் கேட்டார், கடவுளை நம்பச் செய்து, பிரச்சாரம் செய்து அவர்தான் ஜாதியை உண்டாக்கினார், அவர்தான் பேதத்தை உண்டாக்கினார் என்று சொன்ன வனைக்கூட நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்; அவனை குழப்பவாதி என்று விட்டுவிடலாம். ஆனால், ஆத்மா என்ற ஒன்றைக் கண்டுபிடித்தான் பாருங்கள், அவனை நான் மன்னிப்பதற்குத் தயாராக இல்லை என்று சொன்னார்.
ஏனென்று கேட்டால், கற்பனையிலேயே மோசமான கற்பனை அது.
ஆத்மா என்றால் என்னவென்று கேட்டால், அதற்கு சாவே கிடையாது.
கைலாசத்திற்குப் போனார் நித்தியானந்தா - அவ ரைக் காவல்துறையினரும், அவருடைய பக்தர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘எல்லோரும் வாங்க, கைலாசத்திற்கு, விசா கொடுக்கிறேன்’’ என்கிறார்.
ஆத்மா என்பது மாறாததாம்; ஒவ்வொருவருக்கும் ஆத்மா இருக்கிறதாம்.
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறீர்கள்; உடலுக்குத்தான் அழிவு என்று சொல்கிறீர்கள், சரி.
ஆத்மா அழியவே அழியாது என்று சொல்கிறார்கள்
ஒருவர் இறந்து போனவுடன் அந்த உடலை எரிக்கிறோம் அல்லது புதைத்துவிடுகிறோம்.
ஸ்கைபுரியர்கள் இறந்தால் அவர்களுடைய உடலை கழுகுக்கு வைத்துவிடுகிறார்கள்.
எரிப்பதும், புதைப்பதும்தான் நம்முடைய நாட்டில் பெரும்பாலும்.
உடல் நம் கண் முன்னால் எரிக்கப்படுகிறது - எலும்பு களை எடுத்து நீரில் கரைத்துவிடுகிறார்கள். புதைத்தால், அது அப்படியே மண்ணுக்கடியில் மக்கிப் போகிறது.
ஆனால், ஆத்மா என்பது அங்கிருந்து கிளம்பி, இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்துகொள்கிறதாம். அதுதான் திரும்பி ரொட்டேஷனில் வருகிறதாம். ஆகவே, ஆத்மா அழியவே அழியாது என்று சொல் கிறார்கள்.
தந்தை பெரியாரின் கேள்வி
பெரியார் ஒரு கேள்வி கேட்டார், அதுதான் பகுத்தறிவு.
சரி, அப்படியொன்று இருப்பதாக நான் ஒப்புக் கொள்கிறேன்; நான் மறுக்கவில்லை. ஆரம்பத்தில் 20 கோடி ஜனத்தொகை இருந்தால், அதே ஜனத்தொகை தானே இன்றைக்கும் இருக்கவேண்டும்; அது எப்படி 130 கோடியாக ஆனது? என்று கேட்டார்.
அது என்ன கட்டிப் போட்டால், குட்டிப் போடுகிற செடியா? என்று.
ஆத்மா என்றால், அது ரொட்டேஷன் - ஒரு உடலை விட்டு இறங்கினால், இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்துவிட்டது என்று சொன்னால், அதை நம்ப முடியுமா?
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறார்கள்.
சனாதன தர்மம் என்று சொல்லிக்கொண்டு இன் றைக்கு அலைகிறார்களே, நம் மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு விரோதமாக இருக்கக்கூடிய ஓர் ஆளுநர், அவர் மீண்டும் மீண்டும் சனாதன தர்மா என்று சொல்கிறார்.
சனாதன தர்மம் என்பது ஆரியர்களுக்கு - முழுக்க முழுக்க மனுதர்மத்திற்காக இருக்கக்கூடியது.
மனுக்குலத்தினுடைய ஒரு நீதி அது.
காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு...
இது காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு, பாடப் புத்தகமாக வைத்திருக்கின்ற அதிகாரபூர் வமான சனாதன விளக்கம்.
அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. மற்றவர்கள் போன்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிறவர்கள் அல்ல நாங்கள். எதையும் ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவர்கள்.
ஆரியர்களுடைய தர்மம்தான் சனாதன தர்மம். 106 ஆண்டுகளுக்கு முன்பு பாடத் திட்டமாக வைத்தி ருந்தார்கள். இன்றைக்கு அதைக் கொண்டு வந்து நம்முடைய தலையில் கட்டினால் என்ன அர்த்தம்?
ஆரிய தர்மத்திற்கு என்ன அடிப்படை என்றால், குலதர்மம்.
குலதர்மம் என்றால் என்ன?
தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்பதுதான்.
போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்
ஏன் அப்படி பிறந்தார்கள் என்று கேட்டால், அவர வர்களுடைய ஆத்மாவினுடைய பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்கிறார்கள்.
ஏன் கீழ்ஜாதியாகப் பிறந்தான் என்று கேட்டால், அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்.
நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, என்றால்,
உன் கர்மா அப்படி செய்தது என்கிறார்கள்.
இப்படி ஒன்றும் புரியாததைச் சொல்லி, உளறிக் கொட்டுகிறார்கள். எதைப்பற்றியும் கேள்வி கேட்காதே, நம்பு, நம்பு என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது அதை வைத்துத்தான் நம்மை கீழ் ஜாதியாக்குகிறார்கள்.
சகோதரர் முத்தரசன் அவர்கள் அருமையான ஒரு கருத்தை சொன்னார். புரட்சியாளர் அம்பேத்கரைப்பற்றி சொல்லும்பொழுது, ‘‘ஒருவன் அடிமையாகவே இருந் தால், அது அவனுக்குப் புரியவேண்டும். புரியாமல் அடிமையாக இருந்தால், அவனால் எதிர்த்துச் பேச முடியாது; அந்த அடிமை விலங்கை உடைக்க முடியாது’’ என்று சொன்னார்.
அதனால்தான் நாம் சொல்கிறோம், அடிமையாக இருக்காதே என்று.
நாங்கள் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம்; எங்களுக்குக் கீழே யாரையும் அடிமையாக்க மாட்டோம் என்று அம்பேத்கர் சொன்னார்.
நம்முடைய மக்களை அழுத்தி வைத்திருந்தனர்
‘திராவிட மாடல்’ ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு, இந்தக் கட்டுக்கதைகள் எல்லாம், அதாவது ஜீவாத்மா, பரமாத்மா, அண்டர் ஆத்மாக்களை யெல்லாம் சொல்லி, நம்முடைய மக்களை அழுத்தி வைத்து, கீழ்ஜாதியாக்கி, படிக்காதவனாக்கி, படிக்கக் கூடாதவனாக்கி வைத்திருந்ததை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அடிமையாக இருப்பதில் போட்டி போடுகிறார்கள்
பெரியார்தான் கேட்டார், நீ அடிமையாக ஆனது பற்றிகூட கவலையில்லை. அடிமையாக இருப்பதில் போட்டி போடுகிறாயே என்றார்.
அவர் சொன்னதுபோல், இன்றைக்கும் அதுபோன்ற நிலை இருக்கிறது; அரசியலிலும் இருக்கிறது.
அடிமையாக இருப்பவர்களின் விலங்கை உடைக்க வேண்டும் என்று சொல்வது ‘திராவிட மாடல்’. அடிமை யாக இருப்பதில் போட்டிப் போடுவது மட்டுமல்ல, துரோகம் செய்கிறார்கள்; தன்னை விற்றுக் கொள் கிறார்கள்.
புரட்சிக்கவிஞர்கூட கவிதை எழுதினார் - ‘‘உன்னை விற்காதே!’’ என்ற தலைப்பில்.
பெரியார் கேட்டார், ‘‘உன்னை விற்றுத் தொலை - ஒரு நல்ல விலைக்காவது விற்றுத் தொலை; குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறாயே’’ என்று.
இங்கே ஒருவர் புரியாமல் பேசுகிறார், தமிழ்நாட்டில் காவிக் கட்சி மிகவும் பலமாக இருக்கிறது; நாங்கள் திராவிட மாடல் ஆட்சியை எதிர்ப்போம்; ஆட்சியை நாங்கள் கவிழ்த்துவிடுவோம் என்கிறார்.
எங்கள் கோட்டை சரியாது; கோட்டையிலே ஓட்டை போட முடியாது
எந்தக் கொம்பனாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது.
ஏனென்றால், இது சாதாரண விஷயமல்ல - இது ஒரு மணல் வீடல்ல சரிவதற்கு. இது ஒரு இரும்புக் கோட்டை - செஞ்சிக்கோட்டையிலிருந்து சொல் கிறேன் - இது இரும்புக்கோட்டை - இதில் யாராவது மோதினால், அவர்களுடைய மண்டை உடையுமே தவிர - நாங்கள் உடைக்கமாட்டோம் - எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கைக் கிடையாது. மோதி னால் அவர்களுடைய மண்டை உடையுமே தவிர, எங்கள் கோட்டை சரியாது; கோட்டையிலே ஓட்டை போட முடியாது என்பதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் திராவிட மாடல்.
நம்முடைய மக்கள் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் சனாதனத் தைப்பற்றிப் பேசுகிறார்.
முகத்தில் பிறந்த ஜாதி, தோளில் பிறந்த ஜாதி, தொடை யில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி என்கிறார்கள்.
பாரதிதாசன்தான் கேட்டார், ‘‘ஏண்டா, முட்டாள் பயல்களாக இருக்கிறீர்களே, இத்தனை இடத்தில் பிறக்க முடியுமா?’’ என்று கேட்டார்.
தாய்மார்கள், சகோதரிகள் மன்னிக்கவேண்டும்.
என்னுடைய மனம் புண்பட்டு இருக்கிறது
நாம் இதுபோன்று கேட்கும்போது, ஆகா, எங்கள் மனம் புண்பட்டுவிட்டது என்பார்கள். உன் மனம் புண்படுவதற்காக நான் பேசவில்லை; என்னுடைய மனம் புண்பட்டு இருக்கிறது. ஏனென்று கேட்டால், எங்கள் சகோதரர்களை கேவலப்படுத்தி இருக்கிறாயே - உன்னுடைய மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறாயே!
தமிழ்நாடு ஆளுநர், முனிவர்களைப்பற்றியும், ரிஷிகளைப்பற்றியும் பேசுகிறார்.
நீதிபதிகள்கூட, இந்து லாவில் தீர்ப்பு எழுதுகிற பொழுது, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று எழுதும்பொழுதுகூட,
யக்ஞ வல்லியர் சொல்கிறார்,
நாரதர் ஸ்ருதி சொல்கிறார்,
சாபச் சஞ்சா சொல்கிறார் என்று சொன்னார்கள்.
இதோ இந்த சிறிய புத்தகத்தில் பெரியார் கேட்டார், ரிஷிகள் பிறப்பு எப்படிப்பட்டது?
புராணத்தில் இருப்பதைத்தான் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவரும் பதில் சொல்லவில்லை
பெரியாரை நோக்கி மற்றவர்கள் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் பெரியார் பதில் சொன்னார். பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவரும் பதில் சொல்ல வில்லை.
கலைக்கோட்டு ரிஷிகளின்மூலம் பிறப்பெல்லாம் இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும், அசிங்கமும் நிறைந்தவையாக, அறிவுக்குப் பொருந்தாதவையாக இருக்கின்றன.
முனிவர்களின் பிறப்பைப் பாருங்கள்
எடுத்துக்காட்டாக,
கலைக்கோட்டு ரிஷி மானுக்குப் பிறந்தார்
ஜம்புக ரிஷி நரிக்குப் பிறந்தார்
அகஸ்தியர் குடத்திற்குப் பிறந்தார்
வசிஷ்டர் ஊர்வசிக்குப் பிறந்தார்
சாதன்யவர் விதவைக்குப் பிறந்தார்
மாண்டவியர் தவளைக்குப் பிறந்தார்
சுவர் கிளிக்குப் பிறந்தார்
ஜாம்புவந்த ரிஷி கரடிக்குப் பிறந்தார்
அஸ்வத்தாமன் குதிரைக்குப் பிறந்தார்
ஏண்டா, மனுஷனுக்குப் பிறந்தவன் ஒரு ஆள்கூட இல்லாதவனை வைத்துக்கொண்டு, இதுதான் தத்துவம் என்று சொல்லி, இதுதான் இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்று சொல்கிறீர்களே நியாயமா? என்று கேட்டார்.
அந்த வளர்ச்சி போய்க் கொண்டிருக்கின்ற நேரத்தில், முன்னோக்கி போகவேண்டிய இடத்தில், பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய வேலை என்ன?
பகுத்தறிவாளர் கழகங்கள் நாடுதோறும், ஊர்தோறும், வீதி தோறும் உருவாக்கப்படல் வேண்டும்.
அரசியலை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நம்முடைய வேலை என்ன?
கோட்டைக்குள்ளே போவது இல்லை.
கோட்டைக்கு வெளியே இருந்து, கோட்டையில் எவரும் ஓட்டை போடாமல் பார்த்துக் கொள்வதுதான் நம்முடைய வேலை.
ஆகவே, பகுத்தறிவாளர் கழக மாநாட்டினை ஏன் நடத்துகிறோம்?
பகுத்தறிவாளர் கழக மாநாட்டில், இப்படிப்பட்ட அறிஞர்களை அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறோம்!
அரசியல் கல்வியைக் கொடுப்பதே தமிழ்நாடுதான்!
தோழர்களே, இரவில் இவ்வளவு நேரம் அமர்ந்து பொதுக்கூட்டம் கேட்கின்ற ஒரே ஒரு மாநிலம் எதுவென் றால், தமிழ்நாடுதான். வட நாட்டில் எல்லாம் இப்படி பார்க்க முடியாது.
இந்த மாதிரி ஒரு அரசியல் கல்வியைக் கொடுப்பதே இங்கேதான்.
முற்போக்கான மாநிலமான கேரளாவில்கூட, இவ்வளவு நேரம் கூட்டம் நடத்தமாட்டார்கள். அப்படி கூட்டம் நடந்தாலும், நாற்காலிகள் எல்லாம் காலியாகத் தான் இருக்கும்.
அண்ணா சொன்னாரே, பெரியார்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று. அவருடைய வகுப்பு மாலை நேரக் கல்லூரியாகத் தொடங்கும். மாலையில் ஆரம் பித்து 3 மணிநேரம் பேசுவார்.
உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும்,
நான் சொல்றேன் என்பதற்காக நாம்பாதீர்கள்! என்று சொல்வார்.
இப்படி சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா?
நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்கு சரி என்று பட்டதை சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்.
பெரியார் அவர்கள், குடியாத்தத்தில் உரையாற்றும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் கேட்டார், யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் சொல்வதை நம்புவதா? இல்லையா? என்று.
(தொடரும்)
No comments:
Post a Comment