அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில் காரைக்கால் மண்டலத்திலிருந்து 100 இளைஞர்கள் பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில் காரைக்கால் மண்டலத்திலிருந்து 100 இளைஞர்கள் பங்கேற்க முடிவு

காரைக்கால், ஜூன் 1- கழக காரைக்கால் மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் காரைக் கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே 30 ஆம் தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் காரைக்கால் மண்டல இளைஞரணி அமைப்பாளர் முகஸ்டாலின் வரவேற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார் அப்போது, சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும் புதிதாக இணைந்த இளைஞர்கள் பெரியாரியலை  வாழ்க்கை நெறியாக எவ்வாறு ஏற்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பேசினார். பின்னர் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருவாரூர் மண் டல இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிடர் கழக காரைக்கால் மண்டல செயலாளர்  பொன். பன்னீர்செல்வம், காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி, காரைக்கால் மண்டல துணைச் செயலாளர் செ.செந்தமிழன் ஆகியோர் கருத்துரையாற்றினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

தீர்மானம் 1: 

மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள் 30.04.2022 அன்று சென்னை பெரி யார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 2: 

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து - நன்றி

எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 3 முதல் 25 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தி கோடை வெப்பம் உடல் நிலையை யும் பொருட்படுத்தாமல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத் திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர் களுக்கு காரைக்கால் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: 

திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு 2022 ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் காரைக்கால் மண்டலத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனி வாகனத்தில் சென்று, அம்மாநாட்டில் நடைபெறும் சீருடை அணிவகுப் பில் பங்கேற்பது எனவும், இம்மாநில மாநாட்டை விளக்கி மண்டலம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வது மற்றும் தெருமுனை கூட்டங் களை நடத்துவது எனவும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிக்கு 5 இளைஞர்களை அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

2022 ஜூன் 8,9,10,11 ஆகிய தேதியில் குற்றா லத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் காரைக்கால் மண்டலத்திலிருந்து அதிகப் படியான இளைஞர்களை பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: 

60 ஆயிரம் 'விடுதலை' சந்தா 

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. 60 ஆண்டு களாக அயராது பணியாற்றிவரும் தமிழர் தலைவர் அவர்களை ஊக்கப்படுத்திடவும், இனவுரிமை மீட்பு போரில் வாளாக போரிடும் விடுதலைக்கு 60000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளை ஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் மண்டல கழக பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை எட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 

கிராமப் பிரச்சாரம்

காரைக்கால் மண்டலத்தில் கொம்யூன்கள் தோறும் கிளைக்கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, இளைஞரணி அமைப்பை புதுப்பிப்பது எனவும், இளைஞர்களை இயக்கத்தி பால் ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் கிராமபிரச்சார கூட்டங்களை நடத்து வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கார்த்திக் வேல்முருகன் மணிகண்டன் மாணவர் அணி பொறுப்பாளர்கள் மோகன்ராஜ் சசிகுமார் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் முடிவில் காரைக்கால் மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.லூயிஸ்பியர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment