புதுச்சேரி, ஜன.21 முன்பதிவு செய்யாவிட்டால் அனுமதியில்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர்.
புதுவை கோரிமேட்டில் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தற்போது புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மருத்துவமனைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கூட்டத்தை குறைக்க தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜிப்மர் மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள் ஜிப்மர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின் ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டும் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான விவரங்கள் தமிழ்நாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை. இதன் காரணமாக பலர் தங்கள் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்து அவர்களை அனுமதிக்காததால் ஏமாந்து செல்கின்றனர். ஏழை நோயாளிகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
No comments:
Post a Comment