பார்ப்பனர் அக்கிரமம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

பார்ப்பனர் அக்கிரமம்

21.08.1927- குடிஅரசிலிருந்து....

பார்ப்பனர்கள் உத்தியோகத்திலும், சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங்கள் இன்னவை என்பது நமது மக்களுக்குச் சரிவர விளங்குவதே இல்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள், அதனால் உத்தியோகம் பார்க்கிறார்கள், யார் உத்தியோகம் பார்த்தால் என்ன, யார் சட்டசபைக்குப் போனால்தான் என்ன? கவுன்சிலர் ஆனால்தான் என்ன? என்பதாகத் தர்மநியாயம் பேசிவிட்டுப் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்துவிடுகிறார்கள். இந்த ஏமாளித்தனத்தைப் பார்த்தே பார்ப்பனர்களும் நம்மவர்களை சுலபமாய் ஏமாற்றி, பதவியைப் பெற்று நம்மையே அழிக்கப் பாடுபடுகிறார்கள். எந்தப் பதவியில் பார்ப்பனர் இருந்தாலும் அதன் மூலம் நமது கழுத்தை அறுக்க அதை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நமது ஜனங்கள் உணருவதே இல்லை. அல்லாமலும், நம்மில் அனேகர் கொஞ்சமாவது சகோதர அபிமானமின்றி மானம், வெட்கம் எல்லாவற்றையும் துறந்து பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி, பார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமைக்குக் கையாயுதமாக இருந்து நமக்குக் கெடுதி செய்தும் வாழ்கிறார்கள்.

நமது நிலை, நமது நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்கள் நிலை மிகமிக இழிவான தன்மையில் இருக்கிறதற்கு இதுவே போதுமான உதாரணமாகும். நிற்க சென்னைக் கார்ப்பரேஷனில் சிலகாலமாக பார்ப்பனரல்லாதார் கவுன்சிலராகவும், அக்கிராசனராகவும், கமிஷனராகவும் இருந்து பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்மை புரிந்து வருவதைக் கண்ட பார்ப்பனர்கள் இவற்றை ஒழிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் தேசத்தின் பேரால், காங்கிரசின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் நம்ம ஆள்களிலும் சில அயோக்கியர்களையும், பைத்தியக் காரர்களையும் சேர்த்துக் கொண்டு,நமது மக்களுக்கும், நமது இயக்கத்துக்கும் விரோதமாகப் பிரசாரங்கள் செய்து மக்களை ஏமாற்றி, ஓட்டுப் பெற்றுக் கார்ப்பரேஷனுக்கு வந்து, அவர்கள் செய்த அக்கிரமங்களும், அயோக்கியத் தனங்களும் கொஞ்சமல்லயென்பது கவனித்து வந்தவர்களுக்கு விளங்காமல் போகாது. ஸ்ரீமான் தணிகாச்சலம் செட்டியார் தலைவராயிருந்தபோது அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராகவும், பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் கவலை செலுத்துபவராகவும் இருந்ததற்காக அவருக்குப் பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமைகள் செய்தார்கள் என்பதும், அடுத்தாற்போல் ஸ்ரீமான் சாமி வெங்கடாச்சலம் செட்டியார் பார்ப்பன சிஷ்யராகவும், பார்ப்பனர்கள் போடு தோப்புக்கரணம் என்றால் இதோ போடுகிறேன் எண்ணிக்கொள் என்றும், எவ்வளவோ பொய்யும் புரட்டும் பேசிவந்தும் கொஞ்சமும் சுயமரியாதை இல்லாமல் நடந்து வந்ததால் அவரை ஆதரித்தும், அதற்குப் பிறகு ஸ்ரீமான் ஜி.நாராயணசாமி செட்டியார் பிரசிடெண்டாய் வந்தவுடன் அவர் பார்ப்பனர்கள் சொற்படி கேட்காததால் அவர்மீது பலரை ஏவிவிட்டு கார்ப்பரேஷன் யோக் கியதையைக் கெடுத்துக் கள்ளுக்கடை, சாராயக்கடைகள் போல் சதா சர்வ காலமும் கூச்சலும், குழப்பமுமாகவே இருக்கும்படி நடந்து வந்ததும் யாவருக்கும் தெரிந்ததுதான்.

தவிர, சென்னை கார்ப்பரேஷனில் கமிஷனராயிருக்கும் ஸ்ரீமான் வெங்கட்   நாராயணா அவர்கள் பார்ப்பனரல்லாதவராய் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக அவரை இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமை செய்கிறார்கள் என்பது கவனித்து வருபவர்களுக்கு விளங்கி இருக்கும். ஸ்ரீமான் வெங்கட்ட நாராயணா அவர்கள் ஒரு ஜில்லா கலெக்டர், உத்தியோகஸ்தர். அவர் இன்ஸ்பெக்டர் ஆப் ரிஜிஸ்ட்ரார் என்கிற பத்திரப்பதிவு இலாகாவுக்கு இந்த மாகாணத்திற்கே தலைவராக இருந்தவர். அவருடைய யோக்கியப் பொறுப்பைப் பற்றியாவது   நாணயக் குறைவைப் பற்றியாவது இதுவரை அவருடைய பார்ப்பன எதிரிகள் ஒரு வார்த்தையாவது சொன்னது கிடையாது. அவர் கார்ப்பரேஷனுக்குக் கமிஷனரான பிறகு, வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய் சென்னை முனிசிபாலிட்டிக்கு லாபம் வருகிறது. ஆபிசு சிப்பந்திகளின் அக்கிரமங்கள் ஒழிக்கப்பட்டு யோக்கியமாய் நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்கின உத்தியோகஸ்தர்களை மிக தயவாகவும், நிதானமாகவும் தண்டித்து வருவார். அப்படி இருந்தும் ஸ்ரீமான் வெங்கட் நாராயணா மிகவும் கடுமையாய்த் தண்டிக்கிறார் என்றும், பார்ப்பனரைக் கொடுமைப்படுத்துகிறார் என்றும் அவர்பேரில் பார்ப்பனர்கள் குற்றம் சுமத்தினதின் பேரில் சில குற்றங்களைக் கோர்ட்டுக்கு இழுத்துவிட்டதில் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் மாதக்கணக்காய் கடுங்காவல் தண்டனை தண்டிக்கப்பட்டு விட் டார்கள். இவ்வளவுக் கிரமமாய் வேலைபார்த்து வருபவரை அவமானப் படுத்துவதும், அற்பத்தனமாய் பேசுவதும், வேண்டுமென்றே குறைவுபடுத்துவது மாய் குறும்பு செய்து வருகிறார்கள். இந்த விஷயம் வரவர முற்றிப்போய்விட்டதால், பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துத் திரிந்துகொண்டிருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் கூட இந்தக் கொடுமை சகிக்காமல் இப்போது புத்தி வந்து அவர்களே ஸ்ரீமான் வெங்கட் நாராயணா விஷயத்தில் தாராளமாய்த் தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டுவிட்டார்கள். சுத்தமான பார்ப்பனரல்லாத இரத்தம் கடுகளவு எந்தப் பார்ப்பனரல்லாதார் சரீரத்தில் ஓடுவதாயிருந்தாலும், அவர்களுக்கு எப்போதாவது பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வந்தே தீரும் என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணமாகும். பார்ப்பனர்களின் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் சிங்காரவேலு செட்டியாரும், கெ. கங்காதரய்யா நாயுடுவும், ஜி. வெங்கட்ட நாராயணா விஷயமாய் பார்ப்பனர்களின் கூற்றைப் பற்றி பேசியிருக்கும் விஷயமாவது நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். எதிர்க்கட்சிக்காரன் ஆனபோதிலும், என் கடிதங்களுக்கு கமிஷனர் ஸ்ரீமான் வெங்கட் நாராயணா அவர்கள் ஆறுமணி நேரத்திற்குள்ளாகவே பதில் எழுதிவிட்டு அப்போதைக்கப்போது நான் எழுதும் குறைகளையும் நிவர்த்தி செய்து எனது வேண்டுகோளை நிறைவேற்றி இருக்கிறார். அவர் யாரிடத்திலும் பட்சபாதகமாக நடந்தது கிடையாது.

ஸ்ரீமான் கங்காதரய்யா நாயுடு பேசியதாவது நான் இச்சபைக்கு மெம்பராக வந்ததிலிருந்து எவ்விஷயத்தைக் குறித்தறிவித்தாலும் கமிஷனர் உடனே அதைக் கவனித்து நிறைவேற்றி வருகிறார். அவ்வாறிலிருந்து அவர் பட்ச பாதகமாக நடந்து வருவதாய்ச் சொல்வது முற்றுந்தவறு என்பதாக பேசியிருக்கிறார்கள்.

மற்ற ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள நிர்வாகத்தலைவர்கள் இந்த இரட்டை ஆட்சியிலும் அதிலும் தற்கால சுப்பராய மந்திரி ஆட்சியில் நடக்கும் அக்கிரமங் களுக்குக் கணக்கு வழக்கு இல்லை. அவைகளைப் பற்றி ஒரு பார்ப்பனராவது கவனிப்பதில்லை. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்துவிட்டால் அந்த நிர்வாகஸ்தர் என்ன அக்கிரமம் செய்தாலும் கேள்வி கிடையாது. பார்ப்பனர்க்கு அடிமையாகாவிட்டால் அவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும் அவர்களை ஒழிக்க எவ் வளவு இழி செயலையும் செய்திருக்கிறார்கள் என்பதற்கு இதை ஓர் உதாரண மாகவே எழுதினோம்.

No comments:

Post a Comment