எமது அரசு, நமது அரசு என்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 15, 2021

எமது அரசு, நமது அரசு என்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதி ததும்பும் உரை!

சென்னை, ஆக.15   அடுத்த 100 நாள்களில் இரண்டு மடங்காக உழைப்போம் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் (14.8.2021) 100 நாள்கள் நிறைவான நிலையில், சட்டமன்றத்தில் திமுக அரசுக்கும் முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகின்றன. 

அந்தப் பெருமையின் அடையாளமாக திமுக ஆட்சியையும், என்னையும் பாராட்டி உரையாற்றி இருக்கக்கூடிய, முன்வரிசையில் அமர்ந்திருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள், உறுப்பினர்கள் அத்துணைபேருக்கும் முதலில் என்னுடைய இதயபூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அடுத்து வரும் காலத்தைப் பற்றி..

இந்த அரசு பொறுப்பேற்று, நூறு நாட்கள் கடந்ததைப் பற்றி நீங்களெல்லாம் இங்கே பெருமையோடு பேசினீர்கள். ஆனால், எனக்கு அடுத்துவரும் காலத்தைப் பற்றி நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கோ, எனக்கோ இருந்த எதிர்பார்ப்பைவிட, இந்த நூறு நாட்கள் எதிர்பார்ப்பு என்பது மேலும் அதிகமாகியிருக்கிறது. நீங்களெல்லாம் இப்போது பாராட்டுகின்றீர்கள் என்றால், பணியை முடித்துவிடுங்கள் என்பதற்காக அல்ல; இன்னும் பணியைச் செய்ய வேண்டுமென்று எங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்; உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதைத் தான் நான் உணருகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்காதவர்கள்கூட இப்போது தேர்தல் நடைபெற்றாலும் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்.  அந்தளவிற்கு ஒரு சிறப்பை, ஒரு பெயரை நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்தப் பெயரை காலமெல்லாம் நாங்கள் காப்பாற்ற வேண்டுமென்பதுதான் எங்களுடைய எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பணிக்கு தோளோடு தோள் நிற்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துணைபேருக்கும் நான் மீண்டும், மீண்டும் இந்த நேரத்திலே என்னுடைய நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

போர்க்கால அடிப்படையில்...

இந்த அரசு ஆட்சிக்கு வருகின்றபோது கரோனா என்ற ஒரு பெருந்தொற்று நம்மைச் சூழ்ந்திருந்தது என்று இங்கே நீங்களெல்லாம் குறிப்பிட்டீர்கள். அதனை எதிர்கொள்ள நாமெல்லாம் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான் வந்தது. அந்தச் சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை.

அதையும் தாண்டி, மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று, இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து நம்முடைய மனதை வாட்டி, வதைத்துக்கொண்டே இருந்தது.

இதையெல்லாம் சமாளிப்பதற்காகத்தான் உடனடியாக நாம் ஒரு war room-அய் ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டோம். முடிந்தவரைக்கும் நாம் அதை நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்லப்போனால், கோரிக்கைகளே வராத, வர முடியாத ஒரு சூழ்நிலையை இப்போது நாம் உருவாக்கியிருக்கிறோம். இலட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த நூறு நாட்களில் நாம் செய்த சாதனையைத்தான் பெரிய சாதனையாக நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்என்று சொன்ன வள்ளலாரைப் போல, இந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்று நம்முடைய வருங்கால தலைமுறையினர் நம்மைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

படிப்படியாக நிறைவேற்றப்படும்

தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லி, உங்களையும் ஏமாற்றி, என்னையும் ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. நாங்கள் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்; நிறைவேற்றுவோம். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது; அதிலே உறுதியாக இருக்கிறோம். நேற்றையதினம் முதல் நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் இங்கே தாக்கல் செய்திருக்கிறார்கள். நம்முடைய அரசின் நூறாவது நாளில் தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலே பதிவாகக்கூடிய வகையிலே, நீங்களெல்லாம் பெருமையோடு சொன்னதன் அடிப்படையிலே, வேளாண் துறையினுடைய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  அனைத்துத் துறைகளுக்கும் தாய் உள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வரியில்லாத நிதிநிலை அறிக்கையைக் கொடுத்திருக்கிறோம். இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம். இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இங்கே படமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது என்னுடைய மனதில் இன்னும் ஆழமாக இருக்கிறது. ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்‘. ‘அவர் இருந்து செய்ய வேண்டியதை, அவருடைய மகன் நிச்சயம் செய்வான்என்ற அந்த உறுதியை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அரசு செய்த சாதனைகள்

இந்த அய்ந்தாண்டுக் கால ஆட்சியில், 100 நாட்கள் என்பது 18இல் ஒரு சதவிகிதம்தான். ஆனால், நூறு நாட்களில், இந்த அரசு செய்த சாதனைகளை நான் இங்கே பட்டியல் போட்டால் உள்ளபடியே மூன்று மணிநேரம் ஆகும். அதனால், அதை நான் பட்டியல் போட விரும்பவில்லை. வரக்கூடிய காலக்கட்டங்களில், நேரம் கிடைக்கின்றபோதெல்லாம், வாய்ப்பு கிடைக்கின்றபோதெல்லாம் இந்த அரசின் சாதனைகளைப் பற்றி அமைச்சர்களும் சொல்வார்கள், நானும் சொல்வதற்கு காத்திருக்கிறேன்.  நாள் முழுக்க நாம் நாட்டுக்காக உழைக்கிறோம்.

ஒவ்வொரு நொடியும்...

ஒவ்வொரு நொடியும் மக்களுக்காக சிந்திக்கிறோம்.  தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்திருக்கிறது. 

நிதி நிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.  அதையும் விரைந்து சீர்செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக் கிறது.  உங்களுடைய ஒத்துழைப்போடுதான்.  சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.  இந்த பெரும் பொறுப்பை நான் என் தோளில் சுமக்க தயாராகிவிட்டேன்.  நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு எனது பயணத்தை நான் தொடங்குகிறேன்.  

எனது அரசாகத்தான் முதலில் உருவானது.  இப்போது நான் சொல்கிறேன், எனது அரசு அல்ல, நமது அரசு. (மேசையைத் தட்டும் ஒலி)  இதுதான் என்னுடைய கொள்கை. ஆக, எமது அரசு, நமது அரசு என்று சொல்லக்கூடிய அளவிற்குத்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.  எனவே, வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.  வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க, அடுத்த நூறு நாட்களில் இரண்டு மடங்காக நாங்கள் உழைப்போம், உழைப்போம், உழைப்போம். 

இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment