வேதங்கள் - பேதங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

வேதங்கள் - பேதங்கள்

சு.அறிவுக்கரசு

சென்ற இதழ் தொடர்ச்சி....

நசிகேதன் தன் மூன்றாவது வரத்தைக் கேட்டான். பூத உடலைவிட்டுக் கிளம்பிய உயிர் எங்கே போகிறது? எப்படி இருக்கிறது? இதுதான் மூன்றாவது கேள்வி. யமன் திக்குமுக்காடிவிட்டான். வெளியேறும் வழி இல்லாத முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டவனைப் போல் ஆனான். “இது மிகவும் நுட்பமானது சொன்னால் விளங்காது. இதை விட்டுவிட்டு வேறு எதையாவது கேள்என்கிறான் யமன். எவராலும் விளங்கிக் கொள்ள முடியாததை விளக்கிக் கூறும் தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு என்பதால் இதனை விளக்குங்கள் என்றான் நசிகேதன். யமனோ, வேண்டாம். இதை விட்டுவிடு, மிகப்பெரிய சாம்ராஜ்ய சக்ரவர்த்திப் பதவி கேள். 100 வயது வரை வாழக்கூடிய புத்திர பாக்கியம் கேள், இதை மட்டும் கேட்காதே என்கிறான். நசிகேதனும் உறுதியாக இருந்தான்.

அணுவைவிட மிகச்சிறியதும் பிரபஞ்சத்தைவிட மிகப் பெரியதுமான ஆத்மா உயிரினங்களின் இதயக்குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதைப் பார்க்கிறான். ஆத்மாவை அடைய, உண்மையான மன ஏக்கம் வேண்டுமாம். பரபரப்பு இல்லாமல் அமைதியான சாந்தமான ஒருமுகப்பட்ட தியானமே மனத்தையும் புலன்களையும் அடக்கி ஆளும். இது ஆத்மாவை அடைய ஒரு வழியாகும். உடம்பில் ஆத்மா ஒரு பெருவிரல் அளவில் உள்ளதாம். அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டுமாம். என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கையே இதன் ஆணிவேர். இதைக் கேட்ட நசிகேதன், யமனால் சொல்லப்பட்ட வித்யைகளையும் யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு தூயவனாகிறானாம். மரண மற்றவள் ஆனானாம். பிறகு இறைவனை அடைந்தானாம்.

இதை விவரிப்பதுதான் கடோப நிஷத். அதாவது கடைசி உபநி ஷத், அதாவது கடைசி உபநிஷத். ஆஹா, ஊஹூ என்று பாவ்லா காட்டுவார்கள். ஏமாற்றுக்காரன் ஒன்றும் இல்லாத வித்தையைக் காட்டும்முன் ஆர்ப்பாட்டம். செய்வது போலக் குழப்பங்கள், குழறுபடிகள். அதுதானே வேதாந்தம்!

சாம வேதம்

ரிக் வேதம் விஞ்ஞான மயம். யஜூர் வேதம் வீரம் விளங்குவது. அனலையும் அறிவையும் மூட்டுவது அதர்வணம். உலக நாயகனின் துதி மந்திரச் சேர்க்கையே ஸாம வேதமாம்.

சிவனுக்கும் பார்வதிக்கும் விருப்பமானவை ஸாமவேதம் பாடல்களாம். இராவணன் ஸாம வேதம் பாடித்தான் சிவனின் அருளைப்பெற்றான். ஸாமவேதம் என்பதே ஸாமகானமாம். கருநாடகச் சங்கீதம் ஸாம வேதத்திலிருந்து பிறந்ததாம். சத்யம், ஞானம், அனந்தம், பிரம்மம் என்பது ஸாம வேத ரகஸ்யமாம். ஸாமவேதம் இரு பிரிவுகள். ஒன்று பூர்வார்சிதம். மற்றொற்று உத்தரார்சிதம். பூர்வாசிதத்தில் ஆறு பிளவுகள். உத்திரார் சிதத்தில் ஒன்பது பிரிவுகள். மொததம் 30 அத்யாயங்கள். ஸாமவேத உபநிஷத்கள் 1) சாந்தோக்யம், 2) கேனோபநிஷதம் ஆதியில் ரிஷிகள் சாமவேதத்தைப் பாடல்களாக ஸ்வரங்களுடன் அமைத்தார்கள். சாமகானம் எனும் இந்நூலில் நான்கு பிரிவுகள். இதன் மொத்த மந்த்ரங்கள் 1878. பெரும்பாலும் யாகம் செய்வதைப் பற்றியும் சோமபானம் தயாரிப்பது பற்றியுமே பேசப்படுகிறது. சோமச்செடிகளைஅபிஷவணஎனப்படும் இரண்டு பலகைகளின் நடுவில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, “தசாபவித்ரம்எனப்படும் கம்பளித்துணியால் வடிக்கட்டிதுரோணகலசம்எனும் பாத்திரத்தில் சாறைப் பிடித்து சேமித்துப் பருகுவார்களாம். அடிக்கடி சோமபானம் பற்றியே வருவதாலும் யாகம் செய்யும் ஆரியர்களும் செய்விப்பவர்களும் தேவர்களுடன் சேர்ந்து, குடித்துக் கும்மாளம் அடித்த விவரங்கள் தவிர வேறெதுவும் நடக்க வில்லையோ எனும் எண்ணமே தோன்றுகிறது. நிலைத்த புத்தியுடன் சோமபானம் செய்யும் ஹடயோகி நிச்சயமாய் 17 நாள்களுக்குள் மரணத்தை வெல்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுவைக் குடித்தால் மரணம் இல்லாப் பெருவாழ்வு உண்டென்று கூறிக்குடிப்பழக்கத்தைத் தூண்டுகிறது இவ்வேதம். மொத்தம் உள்ள 64 காண்டங்களும் சோமபானம் குடித்துவிட்டு உளறும் சொற்களைப் போலவே, ஒரே விஷயமே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. உலகில் உள்ள ஜீவன்களை வாழவைத்திடும் தேவதைகள் பற்றிய புகழ்ச்சிப் பாடல்களே சாமவேதம். இந்திரன் முக்கிய தேவதை. அடுத்ததாக அக்னி. பின் வாயு. பிறகு வருணன். ஹிந்து மதத்தில் கடவுள்களே 33 கோடி எனும்போது தேவதைகளுக்குப் பஞ்சமா, என்ன! “விருந்திராசுரன்என்பானைக் கொல்ல இந்திரன் சண்டையிட்டபோது இந்திரனின் அனைத்து ஆயுதங்களாலும் சாகடிக்க முடியவில்லையாம். ததீசி எனும் ரிஷி தன் உடலில் உள்ள எலும்புகளால் ஆயுதம் தயாரித்துத் தந்தாராம். அது தான்வஜ்ராயுதமாம்“. அந்த ஆயுதத்தால் தாக்கும்போது, இடியும் மின்னலும் ஏற்பட்டதாக சாமவேதம் புளுகுகிறது.

அய்ந்திர வ்யாகரணம்என்பது இந்திரனால் செய்யப் பட்ட மொழி இலக்கணமாம். சிறந்த யானை கஜேந்திரன் எனப்படுவதுபோல, தேவர்களின் தலைவன் தேவேந்திரன் எனப்படுகிறானாம். எனவே. “அய்ந்திராவ்யாகரணம்என்றால் இந்திரனால் செய்யப்பட்ட மொழி இலக்கணம் எனப்பொருளாம். மனிதர்கள் பேசும் வாக்கில், நான்கில் ஒரு பங்குக்கு மட்டுமே இந்திரன் இலக்கணம் செய்தானாம். எப்படி சாத்தியம்? இலக்கணம் செய்யப்பட்ட கால்பாகத்தை எப்படிக் கணக்கிடுவது? குடிகாரன் பேச்சு என்பார்களே, அதுபோல, இது குடிகாரன் எழுத்தா? இன்னொரு கால் பாகத்தை விலங்குகள் இலக்கணம் இல்லாமலே பேசுகின்றனவாம். பறவைகள் மற்றொருகால் பாகத்தைப் பேசுகின்றனவாம்.

சத்வாரி வாக் பரிமிதி பதானி தானி

                விதுர்பிராம்ணா யே மனிஷண

குஹாத்குணி நிஹிதா தேஹ்யந்தி துரியம்

                வாகோ மனுஷ்யா வதன்தி

என்பது இதற்கான ஸாமவேத மந்த்ரம்.

மனிதன், மிருகம், பறவை, பாம்பு ஆகிய நான்கும் பேசுவது ஒரே மொழி! நான்கும் பங்குபோட்டுக் கொண்டன சம்ஸ்கிருதத்தை என்கிறது வேதம். நீரில் வாழும் மீன்களுக்கு மொழி கிடையாதா? வேதம் பதில் கூறவில்லை.

பாம்பும் பல்லியும் பறவையும் நாயும் பேசும் மொழியைத்தான் தேவபாஷை என்கிறான். அதனால்தான் விபி இல்லையோ? அதனால்தான் எழுதாக் கிளவியோ? அதனால்தான் மனப்பாடம் செய்து மற்றவனுக்கும் கக்கும் முறையோ?

கேகய நாட்டு மன்னன் தன் பட்டத்து ராணியுடன் படுக்கையறையில் இருந்தபோது இரண்டு எறும்புகள் பேசிக் கொண்டதைக் கேட்டானாம். கணவனும் மனைவியுமான எறும்புகளாம். பெண் எறும்பை வேறொரு ஆண் எறும்பு அணுகிப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதைத்தன் கணவனிடம் முறையிட்டதாம். முறையீட்டைக் கேட்ட மன்னன் சிரித்து விட்டானாம். எறும்புகளுக்குக் கூடக் கற்பா? என நினைத்துச் சிரித்து விட்டானாம். சிரித்ததற்கேக் காரணம் கேட்ட பட்டமகிஷியிடம் எதுவும் பதில் கூறவில்லை. பலமுறை மனைவி கேட்டபோதும் கணவன் பதில் கூறவில்லை. சொன்னால் தலை வெடித்துவிடுமாம். அதனால் சொல்லவில்லையாம். ராணிக்குச் சந்தேகம் வலுத்தது நிம்மதி இழந்த மன்னன் துறவு பூண்டு காட்டுக்குப் போய்விட்டான் என்கிற கதை ராமாயணத்தில் உள்ளதாம். அக்னிப் புராணம், துலா காவேரி மகாத்மியத்தில் கூறப்படுகிறதாம். மூடத்தனத்திற்கு முட்டுக் கொடுக்க, மடத்தன நூல்களும் உள்ளன. இது உலகின் முதல் மொழியாம். காட்டுமிராண்டி மொழி. தமிழ்நாடு தவிர மற்ற பகுதிகளில் பேசப்பட்ட மொழியாம்.

ஸாமவேதத்தின் எல்லாக் காண்டாங்களுமே ஸோமபானத்தை அடைவதற்காக துதிகளும் அதைக் குடிப்பதற்காகத் தேவர்கள் துடிப்பதையும் விளக்கும் பாடல்களும் நிறைந்துள்ளன.

நாப்ஸூ மூத்ரபுரீஷம் குர்யாத்

நிஷ்டிவேத் நவிவஸன ஸ்நாயாத்

குஹ்யோ வா ஏஷேஸூக்னி ஏதஸ்யா

க்னேநோ நதி தாஹாயா

சோமபானம் குடிப்பதல்லாமல், ஸாமவேதம் சொல்லும் புத்திமதி இதுதான். நீரில் மலஜலம் கழிக்கக்கூடாது. காரி உமிழக்கூடாது. ஆடை இல்லாமல் குளிக்கக்கூடாது. ஜலம் என்பது அக்னியே. இவற்றையெல்லாம் செய்தால் அக்னி சுட்டுவிடும். பாவக என்றால் அக்னி, பாவகா என்றால் ஜலம், ஆகாயத்திலிருந்து வாயு, அதிலிருந்து அக்னி, அக்னியில் இருந்து ஜலம், ஜலத்திலிருந்து மண்ணும் தோன்றுகின்றன என்கிறதாம் வேதம்.

ஆகாசாத் வாயு வாயோரக்னி

அக்னேராப அத்ப்ய பிருத்வி

எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்று வேதம் கூறுகிறதாம். “ ஹிம்சியாத் ஸர்வ பூதானிஎன்று. பிற உயிர்களைக் கொள்வதால் விளையும் பாவத்தைப் போல் பத்து மடங்கு பாவம் பசுமாட்டைக் கொல்வதால் வருமாம். பசுவை வேதத்தில் அக்னியா என்ற சொல்லால் குறிக்கிறார்கள்.

கேன உபநிஷத்

ஸாம வேதத்திற்குரிய உபநிஷத், கேன உபநிஷத் எனப்படுகிறது. தொடக்கமே, யாரால் எனும் கேள்வியாம். உலகம் இயங்குகிறது. உயிரினங்கள் இயங்குகின்றன. மனிதர்கள் இயங்குகின்றனர். மனித உடல் இயங்குகிறது. மனித மனம் இயங்குகிறது. பிராணன் இயங்குகிறது. யாரால் இயங்குகிறது என்று சொல்ல முடியுமா?

No comments:

Post a Comment