படித்தவர்களே பலியாகும் மூட நம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 1, 2020

படித்தவர்களே பலியாகும் மூட நம்பிக்கை

 ‘‘அலாவுதீன் அற்புத விளக்கு''  என்று கொடுத்த மோசடிக்காரர்களிடம் கோடிகளைப் பறிகொடுத்த  மருத்துவர்



மீரட்,  நவ.1  உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், இங்கிலாந்தில் மருத்துவம் படித்த மருத்துவர் ஒரு வரிடம் இரண்டு பேர் தாங்கள்  மந் திரக்காரர்கள் என்று கூறி, தங்களிடம் அலாவுதீனின் அற்புத விளக்கு இருப் பதாகவும்,  அது யாரிடம் உள்ளதோ  அவருடைய விருப்பங்கள் அனைத் தையும் நிறைவேற்றும் என்றும் தெரிவித்து 2.5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாய்க்கஹன்.  இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து பிரபல மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவராக பணி புரிந்து வருகிறார். 
சில ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம்  சமீனா என்ற பெண் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் மூலம் மருத்துவருடன் அவரது குடும்பத்தினர் அறிமுகமானார்கள்.  சமீனாவின் கணவர் இஸ்மாயில் மருத்துவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது விலை உயர்ந்த பொருட்களை கொடுத்துள்ளார். 
இது குறித்து மருத்துவர் கேட்ட போது, ‘‘எங்கள் குடும்பத்தின் மூதா தையர் அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள். அப்படி வரும் போது தங்களிடம் இருந்த அலாவுதீன் அற்புத விளக்கையும் கொண்டு வந்துள்ளனர். அதை நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். எங்களுக்கு நேரம் இருக்கும்போது அந்த விளக்கைப் பயன்படுத்தி எங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வோம், அந்த விளக்கின் மூலம் கிடைத்த பொருட்கள் தான் இவை'' என்று கூறி ஏமாற்றி உள்ளார். 
 வெளிநாடுகளில் படித்திருந்தாலும் மூடநம்பிக்கை காரணமாக சிந்திக் காமல் அவரின் பேச்சை அப்படியே நம்பிய மருத்துவர் அதை தனக்கு விலைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் 10 கோடி ரூபாய் கொடுத்தால் அந்த விளக்கை நான் தருவேன் என்று கூறினார். மேலும் அரபு நாடுகளில் இதை வாங்க நூறு கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று ஏமாற்று வார்த்தைகளை இஸ்மாயில் கூறினர் 
தான் 10 கோடி ரூபாய் உடனடியாக தர முடியாது, ஆரம்பக் கட்டமாக 2 கோடி ரூபாய் தருகிறேன் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு இணங்கவில்லை. பின்னர் 2 கோடி 50 லட்சத்திற்குப் பேசி முடித்து  அந்த  விளக்கினை கொடுத்துள்ளார்.
மேலும் அவரை தங்களின் வீட் டிற்கு அழைத்து விளக்கை காட்டி வேண்டியதைக் கேளுங்கள் என்று கூறினார். சில நிமிடங்களில் அந்த அறை முழுவதுமே புகையாக பரவியது. பின்னர் பூதம் போன்று வேடம் அணிந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டு இருந்தார். உடனே மருத்துவர் சில பொருட்களைக் கேட்க அனைத்தும் உங்கள் வீட்டில் வைத்துவிட்டேன் என்று அந்த பூதமாக வேடம் போட்டவர் கூறினார். அதன் பிறகு மீண்டும் புகை தோன்ற அந்த பூதம் வேடமிட்டவர் ஓடி ஒளிந்துகொண்டார், 
இதனை அடுத்து மருத்துவர் விளக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு பல எதிர்பார்ப்புகளோடு சென்ற அவர் அங்கே ஒன்றுமே இல்லாதது கண்டு பின்னர் பலமுறை விளக்கைப் பார்த்து பூதமே வெளியேவா? என்று கூறியுள்ளார். ஆனால் பூதம் எதுவும் வரவில்லை. இதனை அடுத்து தான் ஏமாற்றப் பட்டதை மிகவும் தாமதாகத் தெரிந்துகொண்டார். 
இதனை அடுத்து பிரம்மபுரி காவல் நிலையத்தின் கீழ் வரும் கைர்நகர் பகுதியில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மருத்துவர் லாய்க்கஹன் புகார் அளித்தார்  
இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் சமீனாவின் கணவர் இஸ்மாயில் மற்றும் அவரின் நண் பரைக் கைது செய்துள்ளனர்.  மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சமீனா  என்ற அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment