அய்ரோப்பிய செர்ன்  அறிவியல் மய்யத்தில் நடராஜர் சிலை வந்ததெப்படி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

அய்ரோப்பிய செர்ன்  அறிவியல் மய்யத்தில் நடராஜர் சிலை வந்ததெப்படி

அய்ரோப்பிய செர்ன்  அறிவியல் மய்யத்தில் நடராஜர் சிலை வந்ததெப்படி? சங்கிகள் புரட்டும் வெளிப்பட்ட குட்டும்



இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற பல தவறான கூற்றுகள், அறிவியல் என்னும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான கார ணங்கள் என்ன என்பதை விளக்கி ‘மித் பஸ்டர்’ (போலியை அழிப்பது) எனும் பெயரில் பிபிசி தமிழ் இணையதளம் தொடராக வெளியிடுகிறது. அந்த வரிசையில் முதல் போலிச் செய்தியாக பிபிசி வெளியிட்டிருப்பது இந்துத்துவ புரட்டுக் கம்பெனிகளின் பீலாக்களுள் ஒன்று.


நடராஜர் ஆடுவது, காஸ்மிக் டான்ஸ், அணுவின் அசைவும், நடராஜரின் நடனமும் ஒன்று போல் இருப்பதால் இதைக் கண்டு வியந்த அறிவியல் அறிஞர்கள் இந்தச் சிலையை செர்ன் ஆய்வுக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்கின்றனர்; வழிபடுகின்றனர்... ப்ளா..ப்ளா..ப்ளா...!


இதே போல பல செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப் பீர்களே... சனிக்கிரகத்துக்கும் திருநள்ளாறுக்கும் உள்ள தொடர்பு, சிதம்பரம் தான் உலகின் மய்யப்புள்ளி, ஒரே நேர்க்கோட்டில் ஒன்பது கிரகங்கள்.... அந்த வரிசையில் ஒன்று தான் இதுவும்.


சரி, எப்போதும் நாசாவைத் தானே துணைக்கழைப்பார்கள்? இப்போதென்ன செர்ன் ஆய்வுக் கூடம் என்று தோன்றுகிறதா? ‘அண்டப் புளுகையும் அவிழ்த்து விடுங்கள். ஆனால், நீங்கள் சொல்லும் பொய்யில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்க வேண்டும்’ என்பது தான் இவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள பால பாடம்.


அப்படி செர்ன் ஆய்வுக் கூடத்தில் இருக்கும் நடராஜர் சிலை குறித்து இணையத்தில் உலவும் இரண்டு பொய்களுள் 1. அணுவின் ஆட்டமும், சிவனின் ஆட்டமும், 2. அங்கு இலுமினாட்டிகளால் நரபலி கொடுக்கப்பட்டது. ஆனால் இவையிரண்டும் உண்மையில்லை என்று மறுக்கிறது செர்ன் ஆய்வுக்கூடம்.


ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்சு எல் லையில் அமைந்துள்ள அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை ஆய்வு   செய்வது தான் இந்த ஆய்வுக் கூடத்தின் பணி.


‘கடவுள் துகள்கள்’ என்ற பெயரில் ஊடகங்களால் பரப் பப்பட்ட ‘ஹிக்ஸ் போசான்’ துகள்கள் இருப்பது வெறும் அனுமானமாக இருந்த சூழலில், ஹிக்ஸ் போசான் அளவில் நிறையுடைய துகள்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆய்வுகள் இங்குதான் செய்யப்பட்டன. (உண்மையில் ஹிக்ஸ் போசான் பற்றிய புத்தகத்துக்கு முதலில் இடப்பட்ட பெயர் காட் டேம்ன் பார்டிகிள். அதன் பதிப்பாளர் தான் அதற்கு காட் பார்டிக்கிள் என்று பெயர் மாற்றினார். அது ஈர்ப்பாக இருக்கிறது என்று ஊடகங்கள் ஹிக்ஸ்போசானுக்கு அந்தப் பெயரையே பயன் படுத்தத் தொடங்கிவிட்டன. இது குறித்தும் இந் நிறுவனத்தின் இணையதளம் விளக்கமளித்துள்ளது.)


அறிவியல் ஆராய்ச்சியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய ஆய்வு நிறுவனத்தின் வளாகத்தில் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


இந்தச் சிலை 2004ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அங்கு நிறுவப்பட்டது. அதற்குப் பிறகான 16 ஆண்டுகளில், இணைய வசதிகள் பலரையும் சென்று சேர்ந்துள்ளதால், சமூக ஊடகங் களின் பரவல் அதிகமாக அதிகமாக அந்தச் சிலை அங்கு ஏன் வைக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் போலியான கார ணங்களும் அதிகமாகி வருகின்றன. சமூக  ஊடகங்களில் பரப்பப்படும் போலியான காரணங்கள் என்ன? அந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளதன் உண்மையான காரணம் என்ன? என்பதையும் பிபிசி தமிழ் வெளிப்படுத்தியுள்ளது.


போலிக் காரணம்


இந்துக் கடவுளான நடராஜர் சிலை அணுவின் அமைப்பை விளக்கும் வகையில் உள்ளதைக் கண்டு வியந்த விஞ்ஞானி களால், மிகப்பெரிய நடராஜர் சிலை ஒன்றை அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தின் நடுவில் வைக்கப் பட்டுள்ளது என்றும், “சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டி ருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப் படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. ஒட்டு மொத்த அண்டத்தின் குறி யீடாக நடராஜர் அமைந்துள்ளார்,” என்பதைக் குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் அய்ரோப்பிய ஆராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.


இதே போன்ற உறுதிசெய்யப்படாத மற்றும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத எண்ணற்ற காரணங்கள் சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகின்றன.


உண்மையைக் கூறும் அறிவியல் ஆய்வு மய்யம்


ஆனால், உண்மை என்ன? திரும்பத் திரும்பக் கேட்கப் படும் கேள்விகளுக்கான பதில் வழங்கும் FAQ பக்கத்தில் இது குறித்து தெளிவாக விளக்குகிறது அதன் இணையதளம். இந்தியா மற்றும் அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) இடையில் 1960களில் ஏற்பட்ட தொடர்பு பல் லாண்டுகளாக நீடித்து வருவதைக் கொண்டாடும் வகையில் இந்தியா அளித்த பரிசுதான் நடராஜர் சிலை என்கிறது அந்த ஆய்வு மய்யத்தின் அலுவல்பூர்வ இணையதளம். அந்தச் சிலை தான் 39 மற்றும் 40 என எண் இடப்பட்ட கட்டடங்களுக்கு இடையே உள்ள சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது.


நடனமாடும் நிலையில் உள்ள சிவன் இந்து மதத்தில் நடராஜர் என்று அழைக்கப்படுவதாகவும், நடனத்தின் மூலம் சிவன் பிரபஞ்சத்தை ஆக்கவும், இயக்கவும் அழிக்கவும் முடியும் என்பது இந்து மதத்தில் "நம்பிக்கையாக" உள்ளது என்றும் அந்த இணையதளம் கூறுகிறது.


‘காஸ்மிக் டான்ஸ்’ என்று வழங்கப்படும் நடராஜரின் நடனத்தை  "துணை அணுத்துகள்" அல்லது அணுவகத்துகளின் (Subatomic particles) நகர்வுடன் உருவகப்படுத்தும் வகை யிலேயே இந்திய அரசு இந்த சிலையைத் தேர்வு செய்தது என்று கூறுகிறது அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத் தின் கேள்வி - பதில், பக்கம். இதோ அந்த பதில்.


Why does CERN have a statue of Shiva?


The Shiva statue was a gift from India to celebrate its association with CERN, which started in the 1960’s and remains strong today. In the Hindu religion, Lord Shiva practiced Nataraj dance which symbolises Shakti, or life force. This deity was chosen by the Indian government because of a metaphor that was drawn between the cosmic dance of the Nataraj and the modern study of the ‘cosmic dance’ of subatomic particles. India is one of CERN’s associate member states. CERN is a multicultural organisation that welcomes scientists from more than 100 countries and 680 institutions. The Shiva statue is only one of the many statues and art pieces at CERN.


ஆக, இந்தச் சிலையைக் கொடுத்தது இந்திய அரசு. அதற்குக் ‘காஸ்மிக் டான்சர்’ என்று பெயர் வைத்ததும் இந்திய அரசு. நடராஜனின் நடனத்தையும், அணுத்துகள் நகர்வையும் ஒப்பிட்டு அதற்கொரு வியாக்கியானம் கொடுத்ததும் இந்திய அரசு. பன்மைத்துவம் கொண்ட, பல நாடுகளின் அறிவியலாளர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், கொடுத்த மரியாதைக்குக் கலைப் பொருளாக மட்டுமே கருதி அதை வைத்திருக்கிறது செர்ன் ஆய்வுக்கூடம்.


மதச் சார்பற்ற நாடான இந்தியா, உலக நாடுகளுக்கு நினைவுப் பரிசு வழங்கும்போது, நடராஜர் சிலையையோ, பகவத் கீதையையோ, இந்துமதத்தின் சின்னங்களையோ வழங்கும் வகையில் பார்த்துக் கொள்கிறார்கள் உயர் அதி காரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள். பெற்றுக் கொண்ட நாடு கள் மரியாதைக்காக அவற்றை எங்காவது காட்சிக்கு வைத் தால், அவற்றையே தங்களின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் போக்கைத்தான் தொடர்ந்து கைக்கொள்கின்றன இந்துத்துவக் கம்பெனிகள். யானைத்தலையும், மனித உடலும் கொண்ட பிள்ளையார் உருவம், நான்கு கைகளுடன் நடனமாடும் சிவன் எல்லாம், வெளிநாட்டவருக்கு ‘நார்னியா’ படத்தில் வரும் வித்தியாசமான உருவங்கள் போல, அவ்வளவுதான்! கலைப் படைப்பாகக் கருதி வைத்துக் கொள்வார்கள். ஆனால் அதைத் தங்கள் புரட்டுகளுக்கு ஆதாரமாகக் காட்டுவது இந்த பிராடு கூட்டம் தான் என்பதற்கு செர்ன் வளாகத்தில் இருக்கும் நடராஜர் சிலையும் ஒரு சான்று.


-    இளையன்


No comments:

Post a Comment