வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (9) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (9)


நாஸ்திகர்கள் ஆகாமல்  ஜாதியை ஒழிக்க முடியாது!


தாழ்த்தப்பட்ட மக்களை, அவர்களுக்கு மற்ற வர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மை யான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையே ஆகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.


எப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ் ஜாதி மக்கள், தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந் தவர்கள் என்றும், அவர்கள் கடவுள்களாலேயே அந்தப்படி பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், அதற்கு மதங்களும் மத சாஸ்திரங்களுமே ஆதாரங் கள் என்றும், கடவுள் செயலையோ மத விதி களையோ யாரும் மாற்றக் கூடாதென்றும், அவை மாற்றுதலுக்கு கட்டுப்பட்டதல்லவென்றும் சொல் லப்படக் கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது.


தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனித சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெறும் வாய் வார்த்தையாலோ, பிரசாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட் டுக் கொள்ளுவதினாலோ ஆகக்கூடிய காரியம் என்று யாராவது நினைத்தால் அவர்களது வாழ்வு வீண் வாழ்வு என்றுதான் சொல்வேன்.


தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களில் சிலர் தாங்கள் ஏதோ குளித்து முழுகி விட்டு, விபூதிப் பூச்சோ, பட்டை நாமமோ விதிப்படி அணிந்து வைதீகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு, மது, மாம்சம் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு சுவாமி என்று பெயர் வைத்துக் கொண்டு திரிந்தால், தங்கள் நிலை உயர்ந்து விடும் என்றும் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றும் கருதி இருக்கிறார்கள். இது மற்றவர்களை ஏமாற்ற நினைத்துத் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் பைத்தியக்காரத்தனமேயாகும்.


இந்தப்படி வெகு பேர் தாழ்த்தப்பட்ட மக்களில், ஆதிதிராவிடர்களில் வெகுகாலமாகவே வேஷம் போட்டுப் பார்த்தாய்விட்டது. அதற்கு பல புராண, சரித்திர ஆதாரங்கள் உண்டு.


ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்து, நாளது வரை தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஒரு காரியமும் முடிந்ததில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம்.


ஏதோ சில பாஷாண்டிகள் செய்த காரியங்களால் தங்கள் சுயநலத்துக்குப் பயன் ஏற்படுத்திக் கொள் ளத்தான் முடிந்திருக்குமே ஒழிய அப்படிப்பட்ட வேஷத்தாலும் பக்தியாலும் காரியத்தில் ஏதும் ஆகி இருக்காது.


ஆகவே கடவுளும் மதமும் அதற்கு ஆதாரமான கீதையும் மனுதர்ம சாஸ்திரமும் காப்பாற்றப்படுவ தாய் இருந்தால் சூத்திரப்பட்டமும் கீழ்ஜாதித் தன்மையும் எப்படி மாற்றப்பட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.


இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், ஜாதி வித்தியாசம் ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்ப வர்களில் 100க்கு 100 பேரும் கீதை மனுதர்ம சாஸ் திரம் ஆகியவற்றை நம்பும், ஆதரிக்கும் சோணகிரி களேயாவார்கள்.


இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களேயாவார்கள்.


ஆகவே தீண்டாமை ஒழிப்புக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகி ஆக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உறுதி.


உதாரணம் வேண்டுமானால் இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும், தீண்டப் படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான் தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார் கள். இதற்கு கோடிக்கணக்கான மக்களை ஊர்ப் பெயருடன் புள்ளி விவரத்தோடு காட்டலாம்.


ஆதலால் மதத்தை காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.


- சீர்காழியில் 10.7.1935இல் சொற்பொழிவு,


‘குடிஅரசு’, 23.7.1935


(தொடரும்)


No comments:

Post a Comment