கச்சத்தீவு பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது பிஜேபிதான் 'தினத்தந்தி'க்கு முதலமைச்சர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

கச்சத்தீவு பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது பிஜேபிதான் 'தினத்தந்தி'க்கு முதலமைச்சர் பேட்டி

featured image

சென்னை, ஏப். 6- நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., தமிழ் நாட்டில் அந்த கூட்டணிக்கு தலைமை வகிக் கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க. 21, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 1 என போட்டியிடுகின்றன.
மேலும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதிமய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (மார்ச்) 23ஆம் தேதி முதல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே ‘தினத்தந்தி’ சார்பில் அவரிடம் கேட்கப்பட்ட விறுவிறுப்பான கேள்விக ளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தல் பிரச் சாரத்துக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின் போதும் பொதுமக்களை சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?
பதில்:- 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகள் தி.மு.க. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது. ‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர் களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட் சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட் டங்களினால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

களப்பணியில் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் அடிப்படையான பணியை முழுமை யாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பிரச்சாரப் பணிகளில் தி.மு.க. தலைவ ரான நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்ப தால் தி.மு.க.வுக்கு மக்களிடம் பெரும் ஆத ரவு உள்ளது.
10 ஆண்டுகால பா.ஜனதா அரசு தமிழ் நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாக துணை போயிருப்ப தையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக் கிறார்கள். காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது சமையல் எரிவாயு விலை அவர்கள் மனதில் அனலாக கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், பா.ஜனதா அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி யைத் தரும்.

கேள்வி:- கச்சத்தீவு பிரச்சினை தற்போது பா.ஜனதா மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங் கைக்கு தாரை வார்த்ததற்கு மேனாள் பிரத மர்கள் நேரு, இந்திரா காந்தி, மேனாள்
முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையை கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக் கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?.
பதில்:- கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜனதா ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற மேனாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜனதாதான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விஸ்வரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.
10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜனதாவில் பிரதமர், நிதி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது நாடாளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்தி லும், அமைச்சர் அமைச்சர்களுடன் கலை ஞர் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறை யில் கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2ஆம் தேதி நடை பெற்ற அந்நாட்டு அரசின் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் பந்துல குண வர்த்தனே, “கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சினை ஒருபோதும் எழுப்பப்படவில்லை” என்று தெரிவித்திருந் ததை ‘தினத்தந்தி’ முதல் பக்கத்தில் செய்தி யாக வெளியிட்டிருந்தது.
இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. ‘கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு’ என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜனதா.

கேள்வி:- நீங்கள் குடும்ப அரசியல் செய் வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் கலைஞர் கருணாநிதியின் மகன் என்பதும் – உதயநிதி என்னுடைய மகன் என்பதும் ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொண்டரின் குடும்பமும் தி.மு.க.வைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும் பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப் பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்ட பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். கதையை (ஸ்க்ரிப்ட்) மாற்றட்டும்.
கேள்வி:- புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டு உள்ளதா?.
பதில்:- மாநில அரசிடம் இருந்த வரி வரு வாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை ஒன்றிய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டு விட்டது. தமிழ்நாட்டுக்கு திருப்பி அளிக்கக் கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக் காக கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக் கிறது.
கேள்வி:- 2019ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கவில்லை. ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேடட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக் கிறதா?
பதில்:- ‘இந்தியா’ என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு புதிய திறமையான மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment