ஆசிரியர் அணுகுமுறையால் நாத்திகர் ஆனேன்! அமெரிக்க மருத்துவர் சரோஜா அவர்களின் நேர்காணல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

ஆசிரியர் அணுகுமுறையால் நாத்திகர் ஆனேன்! அமெரிக்க மருத்துவர் சரோஜா அவர்களின் நேர்காணல்!

featured image

வி.சி.வில்வம்

“ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை” என்று பாடினார் கண்ணதாசன்.
“காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைக் கிழவன், துடைத்து வைத்தானே”, என்றார் காசி ஆனந்தன்
“மண்டைச் சுரப்பை உலகு தொழும்”,
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
இவையனைத்தும் ஏதோ புகழுக்கு எழுதிய வரிகள் இல்லை; செயலுக்கு எழுதியவை!
தம் கொள்கைகளின் வெற்றியை, தம் கண் முன்னாலே பார்த்து மகிழ்ந்த ஒரே தத்துவத் தலைவர் பெரியார் தான்!

ஹிந்து மதமா? திராவிடமா?
எப்போதும் பெரியார் தானா? எதற்கெடுத்தாலும் பெரியார் தானா? எனச் சிலர் கேட்கிறார்கள்!
ஆமாம்! அதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை, உதாரணங்களை உங்கள் முன்னால் வைத்துக் கொண்டே இருக்கிறோம்!
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு?,” எனக் கேட்டது ஹிந்து மதம். ஹிந்துப் பெண்களைப் படிக்கவிடாமல் செய்ததும் அதே ஹிந்து மதம் தான்! திராவிடர் இயக்கம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார்? வாருங்கள் பார்ப்போம்!

ஆங்கிலேயருக்குச் சிகிச்சை அளிக்கும்
கிராமத்து மருத்துவர்!
ஒரு தமிழ்ப் பெண், அதுவும் கிராமத்துப் பெண்மணி, அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக் கழகத்தில் நோயியல் துறையில் (Pathology) 4 ஆண்டுகள் படிக்கிறார். முடித்துவிட்டு புகழ் பெற்ற “ஓக்பாரெஸ்ட்” மருத்துமனையில் 10 ஆண்டுகள் பணி புரிகிறார். தொடர்ந்து மூளை நோயியல் படிப்பை 2 ஆண்டுகள் படித்து, சிகாகோ “குக்கவுன்டி” மருத்துவமனையில் 10 ஆண்டுகள் பணிபுரிகிறார்.
இப்படியான இவரின் உயர் மருத்துவப் படிப்புகளுக்கு அடிகோலியது தஞ்சை மருத்துவக் கல்லூரி. ஆம்! இங்கு தான் எம்.பி.பி.எஸ்., முடித்து, அமெரிக்கா வரை சென்று ஆகாயம் தொட்டிருக்கிறார். இவ்வளவிற்கும் இவர் பிறந்த ஊர் எது தெரியுமா? திருச்சி மாவட்டம், இலால்குடி அருகே நடராஜபுரம் எனும் சிறு கிராமம்!

ஹிந்து மதத்தின் மீது விழுந்த சவுக்கடி!
கிராமத்தில் பிறந்த ஒரு தமிழ்ப் பெண் மணி தான், வெள்ளைக்காரர்களுக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்! ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல; பல்வேறு உலக நாடுகளின் மனிதர்களுக்கும் தனது நடராஜபுரம் பெருமையைக் கொண்டு போய் சேர்த்துள்ளார்! அதுவும் சாதாரண மருத்துவம் அல்ல; நோயியல் துறை மற்றும் மூளை தசை நோயியல் துறை! பெண்களுக்கு மூளையே இல்லை என்று சொன்ன ஹிந்து மதத்திற்குக் கொடுக்கப் பட்ட சவுக்கடி அல்லவா இது!
இவ்வளவிற்கும் இந்த மருத்துவர் ஹிந்து மத நம்பிக்கைக் கொண்டவர். ஹிந்து மதம் சொல்வதை அப்படியே பின்பற்றினால் என்ன ஆகியிருக்கும்? கரண்டியைப் பிடி என்றது ஹிந்து மதம். பேனாவைப் பிடி என்றது திராவிடர் இயக்கம்! இறுதியில் வென்றது எது? திராவிடத் தத்துவம்! அதன் மூலம் வென்றவர் டாக்டர் சரோஜா அவர்கள்! பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநரும், மருத்துவருமான சோம.இளங்கோவன் அவர்களின் வாழ்விணையர் தான் இவர்கள்!

நாத்திகர்கள் நல்ல குணமுடையவர்கள்!
இருவருமே தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள்! இவர்கள் திருமணம் 1974 இல் பெரியார் பெருந் தொண்டர் ஆளவந்தார் தலைமையில், மாண்புமிகு அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் மட்டுமின்றி, திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் வரை டாக்டர் சரோஜா அவர்கள் ஆன்மீகவாதிதான்! அதேநேரம் திருமணத்திற்கு முன்பு, “உங்கள் கணவர் நாத்திகர், சாமி கும்பிடமாட்டார்”, என உறவினர்கள் கூறியுள்ளனர். பரவாயில்லை! “நல்ல குணமுடைய மனிதராக அவர் இருக்கிறார், அதுபோதும்!”, என டாக்டர் சரோஜா கூறியிருக்கிறார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்பவர் கணவராக வந்தாலும் பரவா யில்லை எனக் கருதுகிற மண் இது! அதேநேரம் டாக்டர் சரோஜா அவர்கள் 15 ஆண்டுகள் ஆன்மீகத்தில் திளைத்த போதும், நாத்திக டாக்டர் இளங்கோவன் அவர்கள் இடையூறு ஏதும் செய்ததில்லை! எப்படியான புரிதல், எப்படியான ஜனநாயகம் பாருங்கள்! பெரியார் கொள்கை என்பது கடவுள் இல்லை என்பதல்ல; மாறாக மனிதத்துவம்! இல்லாத ஒன்றை இல்லை என்று வலியுறுத்துவதற்கே இங்கே இயக்கம் கட்ட வேண்டிய சூழலை ஆரியம் ஏற்படுத்தி இருக்கிறது!

ஆசிரியரின் அறிவார்ந்த உரையாடல்!
இப்படியான சூழலில் திருமணமாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது! ஆம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அமெரிக்காவில் டாக்டர் இளங்கோவன் – சரோஜா இல்லத்திற்குச் செல்கிறார். அங்கு ஆசிரியரின் அறிவார்ந்த உரையாடல், அணுகுமுறை போன்றவை சரோஜா அவர்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது!
அன்றிலிருந்து ஆத்திகம் என்கிற வழிகாட்டிப் பலகைக் கீழே விழ, நாத்திகம் என்கிற பலகை மேலே எழுந்துள்ளது! தொடர்ந்து வாசிக்கத் தொடங்குகிறார்! 15 ஆண்டுகளுக்கு முன் தம் திருமணத்தின் போது, இணையரின் சித்தப்பா பி.வி.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் நூலும், பாரதிதாசன் கவிதைகளும் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அவற்றையும் எடுத்துப் படிக்கிறார். எங்கு சென்றாலும் பரிசாக நூல்களையே கொடுங்கள் என்று சொல்வது, எப்படி பயன்படுகிறது பாருங்கள்!

ஆத்திகர் நாத்திகராவது!
பிறந்தது நடராஜபுரம் என்றாலும், பெரும்பாலும் வசித்தது மேலக் கல்கண்டார் கோட்டை. தோழர்கள் நிறைந்த ஊர் அது! பெரியார் அடிக்கடி அங்கு வருவார். அவருடன் வெள்ளை நாய் ஒன்றும் வரும். எனக்கு அதை மிகவும் பிடித்துவிட்டது என்கிறார் சரோஜா அவர்கள்.
ஆக கிராமத்தில் பிறந்து, மருத்துவம் படித்து, திருமணத்தின் பொருட்டு அமெரிக்கா சென்று, அங்கு மருத்துவ உயராய்வு முடித்து, இடையில் ஆசிரியரைச் சந்தித்து, நிறைய சிந்தித்து, காலச் சக்கரங்கள் ஓட, ஒரு நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு வருகிறார், அதுவும் நாத்திகராக! ஒரு ஆத்திகர் நாத்திகர் ஆவது, மற்ற மாநிலங்களில் அதிகம் காணக் கிடைக்காது; தமிழ்நாட்டில் அது சர்வ சாதாரணம்!

உன்னதமான தொண்டர்கள்!
ஆக தமிழ்நாட்டில், பெரியார் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு அவர் வருகிறார். முதலில் கூட்டத்தைப் பார்த்து மகிழ்கிறார்! பிறகு அங்கு நிலவிய அமைதியைக் கண்டு வியக்கிறார்! எவ்வளவு மரியாதை நிறைந்த மக்கள், ஒருவருக்கொருவர் புன்முறுவல், யாரைப் பார்த்தாலும் வணக்கம் சொல்வது, இது ஒரு பெரிய குடும்பம் போல இருக்கிறதே என அவர் நினைக்கிறார்; அதுவே அவரைக் கவர்ந்து போயிற்று! தள்ளுமுள்ளு இல்லை; சலசலப்பு இல்லை! உன்னதமான தொண்டர்கள் எனச் சிலாகித்து நினைவு கூர்ந்தார்!
இப்படியான சிந்தனைகள் பெருகிய பிறகு, தமிழ்நாடு வரும் போதெல்லாம் பல ஊர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்காகச் செல்கிறார். சில இடங்களில் பேசவும் தொடங்குகிறார். மருத்துவம் தொடங்கி பகுத்தறிவு வரை உரைகள் விரிகிறது! மற்றொன்று திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லம் சென்று பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பதும், அவர்களுடன் உணவுண்பதும் இனிமையானது என்கிறார்! கரோனா காலத்தில் கூட அமைதியாக இல்லை. வாரம் ஒருமுறை காணொலி மூலம் நோய் விழிப்புணர்வு, மருத்துவ முறைகள், மனோவியல், பொழுதுபோக்கு, சமையல் என அனைத்தும் பேசியிருக்கிறார்கள்.

மேம்பட்ட வாழ்க்கை!
இதுதவிர புத்தகக் குழு எனும் அமைப்பு ஒன்றும் உள்ளது. நூல்கள் குறித்தும், வாசிப்புக் குறித்தும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு செய்திகள் குறித்தும் பேசுகிறார்கள்! குறிப்பாக ஆசிரியரின் தனிச் சிறப்புகள் குறித்தும், அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் குறித்தும் தம் நண்பர்கள் பலரிடமும் எடுத்துக் கூறுவதில் மகிழ்வதாக மருத்துவர் சரோஜா கூறுகிறார்.
மட்டுமின்றி சிறுவர்களுக்கான‌ திருக் குறள் கதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். பெண்கள் தொடர்பான கட்டுரைகளை விடுதலை நாளிதழிலும், பயணக் கட்டுரைகளை உண்மை இதழிலும் எழுதியுள்ளார். மதுப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களை மீட்டெடுப்பது தொடர்பான நூல் ஒன்றை, தோழர் கலைச்செல்வி அவர்களுடன் இணைந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்!
பெரியார் பன்னாட்டு அமைப்பிற்குத் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். ஆக முழுமையான பொது வாழ்க்கைக்கு உரியவராக அவர் மேம்பட்டு நிற்கிறார்! உலக அனுபவங்கள் பெற்ற நிலையில், ஆசிரியர் குறித்தும், இயக்கம் குறித்தும் கேட்கப்பட்டது.

விலை மதிக்க முடியா மாணிக்கம்!
“பெரியாருக்குப் பிறகு நம்பவே முடியாத அளவிற்கு இயக்கம் வளர்ந்துள்ளது! இன்றைக்குப் பெரியார் கொள்கை எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்களும் பெரியார் குறித்துப் பேசுகிறார்கள்; சிந்திக்கிறார்கள்! ஆசிரியரைப் பொறுத்தவரை அவர் விலை மதிக்க முடியாத மாணிக்கம்! உடல் நலனில் மேலும் அக்கறை கொண்டு, இந்த மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும்! அவர் நமக்குக் கிடைத்த பரிசு”, என உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
1974இல் அவரின் அமெரிக்கப் பயணம் தொடங்கி மூன்று பிள்ளைகளுடன் அதிலும் இருவர் மருத்துவர், ஒருவர் மருந்தியல் துறை என்கிற அளவில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! பிள்ளைகள் அனைவருக்கும் சுயமரியாதைத் திருமணம். அதுவும் பஞ்சாப், கேரளா என அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு என்கிற புரட்சிக் கவிஞரின் வரிகள் போல வாழ்க்கை விசாலப் பார்வையால் விரிவடைந்துள்ளது! அதிலும் ஒரு இணையேற்பு நிகழ்வை ஆசிரியர் அவர்கள் அமெரிக்கா, சிகாகோ வரை சென்று நடத்தி வைத்துள்ளார்கள்! உலகம் முழுவதும் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள், அதிலும் ஒரே குடும்பத்தில் செய்து வைத்தவை எனப் பட்டியல் எடுத்தால், தனி நூலாகவே வரும்!

வாழ்வின் பொக்கிசம்!
மோகனா அம்மையாரின் நட்பு, அவர்க ளிடம் பழகிய அனுபவங்கள் எல்லாம் தம் வாழ்வின் பொக்கிசம் எனக் குறிப்பிடுகிறார்! மிகத் தெளிவான, அருமையான கருத் துகள் கொண்டவர்கள்! குறிப்பாக அன்புள்ளத்தோடு பழகக் கூடியவர்கள்! நல்ல திறமைசாலி. தனது விருப்பங்களை விட இணையருக்காக, இந்தத் தமிழ்ச் சமூகத்திற்காக வாழும் கடமை உணர்வாளர்! உண்மையைச் சொல்லத் தயங்காதவர்! மோகனா அம்மையார் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எங்களை மேலும் உயர்த்தியிருக்கிறது”, என்கிறார் டாக்டர் சரோஜா அவர்கள்!

இனவுணர்வு தம்பதிகள்!
வாரத்தில் 5 நாட்கள் குடும்பத்திற்கும், 2 நாட்கள் இயக்கத்திற்கும் செலவிடுங்கள் என்பார் ஆசிரியர்! அமெரிக்காவில் வசித்தாலும், நொடிதோறும், நொடிதோறும் இந்த இயக்கத்திற்கும், தலைமைக்கும் என்றும் உறுதுணையாக இருப்பவர்கள் டாக்டர் சரோஜா, டாக்டர் இளங்கோவன் இணையர்கள்! என்றென்றும் இனவுணர்வு தம்பதிகளாகவும் மிளிர்ந்து வருகிறார்கள்!

No comments:

Post a Comment