உலக நீச்சல் போட்டி - வாகை சூடிய வாலிபர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

உலக நீச்சல் போட்டி - வாகை சூடிய வாலிபர்

featured image

கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் நைனார் பதக்கங்களை வென்று இன்று (மார்ச்.04) சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உலக ஸ்விம்மிங் மாஸ்டர் வாகையர் பட்டம் 2024 போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுமார் 3,000 மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த உலக நீச்சல் வாகையர் பட்டப் போட்டி பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் 30 முதல் 34 வயது உட்பட்ட பிரிவில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் நைனார் என்பவர் பின்னோக்கி நீச்சல் அடிக்கும் முறையில் 100 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 50 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளார்.
இந்த நிலையில், கத்தார் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய அரவிந்த் நைனாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் நயினார் கூறுகையில், “கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற உலக நீச்சல் வாகையர் பட்டப் போட்டியில் பின்னோக்கி நீந்திச் செல்லும் பிரிவில் தமிழ்நாட்டிலிருந்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற முதல் நீச்சல் வீரர் நான் தான். இதே போல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் அய்ந்தாவது இடம் பிடித்திருந்தேன்.

நான் பதக்கம் வெல்வதற்கு எனது குடும்பத்தினரும் எனது பயிற்சியாளர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அரசும் எனது பயிற்சிக்கு உதவி செய்தது. தற்போது பதக்கம் வென்றதன் மூலம் சிங்கப்பூரில் நடக்க உள்ள உலக நீச்சல் போட்டியிலும் கலந்து கொள்ள நான் தேர்வாகி உள்ளேன்.

தொடர்ச்சியாகப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியா வுக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன். தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு உதவியும், ஊக்கமும் அரசு சார்பில் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment