திருச்சி திருவாசகம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ். முத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

திருச்சி திருவாசகம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ். முத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் செய்தி

featured image

திருச்சி சிறீரங்கத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், பிரபல பல் மருத்துவருமான மானமிகு தோழர் எஸ்.எஸ். முத்து (வயது 93) அவர்கள் நேற்று (13.3.2024) தனது முதுமை காரணமாக மறைவுற்றார் என்பதை இன்று காலை அறிந்து மிகவும் துயரமும், வருத்தமும் அடைகிறோம்.
தந்தை பெரியாருக்கும், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் கருத்துக் கூறுவார் (தந்தை பெரியார் செயற்கை பல்செட்டை பொருத்திக் கொள்ளவே விரும்பாது தொடர்ந்தார் என்பது பலரும் அறியாத ஒன்று).
தீவிரமான பெரியாரிஸ்ட்டாகவே தோழர் முத்து அவர்கள் சிறீரங்கத்தில் இருந்தவர். மாற்றுக் கருத்துடையவர்கள், வேற்றுக் கட்சியினரிடமும் அன்போடும், பண்போடும் பழகியவர் என்றாலும் கொள்கை என்று வரும்போது சமரசமின்றி எவரிடமும் வாதாடத் தயங்காதவர்.
தம் பிள்ளைகளுக்கு நன்கு கல்வி கொடுத்து வளரும் வாய்ப்பளித்தவர்.
அவரது வாழ்விணையர் திருமதி கல்யாணியம்மாள் (வயது 80) அவர்கட்கும், மாவட்ட நீதிபதி அன்புமணி, மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்குரைஞர் சித்தார்த்தன், டாக்டர் நாகமணி (M.D., D.G.O)., ஆகியோருக்கு நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது குடும்பமே – பகுத்தறிவாளர்களாகவும், சுயமரியாதைக்காரர்களாகவும் நாடு முழுவதும் உள்ள பெரியார் குடும்பங்களில் ஒன்றாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.3.2024
குறிப்பு: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உடனே நேரில் சென்று, ஆறுதல் கூறி, துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் உடன் சென்றனர்.
மானமிகு எஸ்.எஸ். முத்து குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையிலிருந்து தொலைபேசியில் ஆறுதல் கூறி தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment